Sunday 2 December 2018


தேங்காய் நண்டு துணுக்குகள்

·         புகழ்பெற்ற உயிரியலாளர் சார்லஸ் டார்வினையே திகைக்க வைத்த நண்டு தேங்காய் நண்டு. இந்த பெரிய அளவுள்ள நண்டை முதன்முதலில் பார்த்தபோது டார்வின் திகைத்துப் போயிருக்கிறார்.
·         ஆரம்பத்தில் கடல்நத்தைக் கூடுகளில் வாழும் தேங்காய் நண்டின் குஞ்சுகள், வளர வளர நத்தைக்கூட்டைவிட பெரிதாக வளரத்தொடங்கி விடும். நாம் வளரும் போது காலணிகள் ‘சிறிதாகி‘ விட்டால் அதை நாம் கைவிட்டு விடுவதைப்போல, இந்த நத்தைக்கூடுகளை தேங்காய் நண்டு குஞ்சுகள் கைவிட்டுவிட்டு புதிய கூடுகளைத் தேடும்.
·         வளரும் நண்டுகளின் அளவுக்கேற்ப கூடுகள் இனி கிடைக்காது என்பதாலும், கிடைக்கும் கூடுகள் கனமானவை என்பதாலும் தன் உடல்கூட்டை நண்டுகள் கடினமாக்கிக் கொள்ளத் தொடங்கிவிடும்.
·         கனத்த, பலமான ஓடு காரணமாக பகை உயிர்களிடம் இருந்து இனி தப்பிக்க முடியும் என்று தெரிந்ததும் தேங்காய் நண்டுகள் கடலைவிட்டு தரையேறி, நிலத்தில் குடியேறி வாழத் தொடங்கும்.
·         தேங்காய் நண்டுகள் தேங்காயை உடைத்துத் தின்பதில்லை. தேங்காய் மீதுள்ள நாரை உரித்து, அதன் மேல்தோலை இவை மெல்ல மெல்ல சுரண்டும். இந்தப் பணி பல மணிநேரங்களாக நடக்கும். அதன்பின் தேங்காய் ஓட்டில் உள்ள பலம் குன்றிய பகுதியைக் கண்டுபிடித்து அந்த இடத்தில் துளையிட்டு, தேங்காயைப் பிளந்து, உள்ளிருக்கும் பருப்பை தேங்காய் நண்டு தின்னும்.
·         தேங்காய்ப் பருப்பில் உள்ள சத்துகள் காரணமாக தேங்காய் நண்டு இன்னும் பெரிதாக இருமடங்கு வளர்கிறது.
·         தேங்காய் நண்டுகள் தன் இனத்தை கொன்று தின்னக் கூடியவை. இதர நண்டினங்களையும் இது உணவாகக் கொள்ளும். நண்டு வளரும்போது அதன் மேல்தோட்டை கழற்றிக் கொள்ளும். கழற்றிய தனது மேல்தோட்டையும் தேங்காய் நண்டு உணவாக்கிக் கொள்ளும்.
·         தேங்காய் நண்டு இரவில் நடமாடும் உயிரினம் என்பதால், கரிய இருட்டில் கூட கூரிய வாசனை அறியும் திறன்மூலம் இரையைக் கண்டுபிடிக்கும்.
·         உணவின் வாசனையற்ற எந்தப் பொருளும் தேங்காய் நண்டுகளைக் கவராது. தேங்காய் நண்டு அவற்றை உண்ணாது. தேங்காயை மட்டுமின்றி கடலோரம் வாழும் மக்களின் பாத்திரம் போன்ற உடைமைகளையும் தேங்காய் நண்டு சிலவேளைகளில் தூக்கிச் செல்வதுண்டு.
·         தேங்காய் நண்டு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஓர் ஆட்சிப்பரப்பு உண்டு. அதற்குள் மற்றொரு நண்டு வந்தால் தன் கடிகாலைத் தூக்கி தேங்காய் நண்டு, ஊடுருவல் செய்யும் நண்டை எச்சரிக்கும். ஒவ்வொரு நண்டும் தங்கள் தங்கள் பரப்புக்குள்ளேயே இரை தேடும்.
·         ஒரு தேங்காய் நண்டின் வளைக்குள் மற்றொரு தேங்காய் நண்டு அத்துமீறி நுழைந்தால் இரண்டில் ஒரு நண்டு மற்ற நண்டுக்கு இரையாக வாய்ப்புள்ளது.
·         தேங்காய் நண்டுகள் நாற்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. ஆனால், இளம்நண்டுகள் பல்வேறு ஆபத்துகளில் இருந்து தப்பி, பெரிதாக மாறும் வாய்ப்பு மிகவும் குறைவு.

1 comment :