Monday 14 December 2020

 ஓர்காக்களின் உறக்கம்



கொல்லும் திமிங்கிலம், ஓர்கா (Orca) என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் கொண்ட கருங்குழவி ஓங்கல்களைப் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவுகள் உள்ளன.

பெருஞ்சுறாவையே வேட்டையாடி வீழ்த்தக்கூடிய வலிய கடலுயிரினமான கருங்குழவி ஓங்கல்களின் உறக்கம் பற்றி இந்தப் பதிவில் சொல்வோம்.

கருங்குழவி ஓங்கல்கள், இரவு பகல் என்று இல்லாமல் கிடைக்கும் இடைவேளைகளில் 1 முதல் 6 மணிநேரம் உறக்கம் கொள்ளும். உறங்கும்போது ஓங்கல்களுக்குகே உரித்தான வித த்தில் ஒரு கண்ணை மூடிக் கொண்டே உறங்கும்.

அதாவது கருங்குழவி ஓங்கலின் வலதுபக்க மூளை உறங்கிக் கொண்டிருந்தால் இடது கண் திறந்திருக்கும். அதேப்போல இடதுமூளை தூங்கிக் கொண்டிருந்தால் வலதுகண் விழித்திருக்கும்.

கருங்குழவி ஓங்கல்கள் உறங்கும்போது ஒன்றையொன்று மிகவும் அருகில் நெருங்கியடி மெதுவாக நீந்தியபடியே உறக்கம் கொள்ளும். ஒரே சீராக அனைத்து கருங்குழவி ஓங்கல்களும் மூச்சுவிட்டபடி இருக்கும்.

இதில் கருங்குழவி ஓங்கல் குட்டிகளின் கதை தனித்துவமானது. பிறந்த சில மாதங்களுக்கு கருங்குழவி ஓங்கல் குட்டிகள் தூங்காது. எனவே தாய் கருங்குழவி ஓங்கல்கள் உறங்கும்போது குட்டிகள் தாயைச் சுற்றிச்சுற்றி நீந்தியபடியே இருக்கும்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. 1. தாயின் அருகே நீந்துவதுதான் குட்டிக்குப் பாதுகாப்பு. 2. கருங்குழவி ஓங்கல் குட்டிகளுக்கு பிறந்த புதிதில் உடலில் குளிரைத் தாங்குவதற்கு வசதியான கொழுப்புச்சத்து (Blubber) இருக்காது. எனவே தொடர்ச்சியாக  நீந்தி விளையாடுவதன் மூலம் குட்டிகள் வளரவும் செய்யும். கடலின் குளிர்ச்சியைத் தாங்கி உடலைக் கதகதப்பாக கொழுப்புசத்து உருவாகவும் செய்யும்.


Friday 24 July 2020


ராணிச்சங்கு (Lobatus gigas)


ராணிச் சங்கு
சங்குகளை ஆங்கிலத்தில் கோங் (Conch) என்பார்கள். நமது பெருங்கடல்களில் 60 வகையான சங்குகள் இருக்கின்றன. 
அதில் ராணிச்சங்கு (Lobatus gigas) என்பது கரிபியன் கடற்பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற சங்கு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஃபுளோரிடா மாநிலம் முதல் பெர்முடா தீவு, பிரேசில் உள்பட பல்வேறு நாட்டுக் கடற்பகுதிகளில் ராணிச் சங்கு மிகுதி. பழங்கால கப்பல் ஒலிப்பான் போலத் தோன்றும் இந்த பிங்க் நிற அழகிய சங்கு கரிபியன் கடற்பகுதியின் பண்பாட்டில் முதன்மையான அங்கம். பகாமாஸ்நாட்டு அரசுச்சின்னத்தில் கூட ராணிச் சங்கு இடம்பிடித்துள்ளது.  
பெர்ர்ர்ரிய... சங்கு
சங்குகள் ஒரு விந்தையான உயிர்கள். அவற்றுக்கு கண்கள் உள்ளன,. ஒருவகையான மூக்கு உள்ளது. வாய் உள்ளது. ஒற்றைக்கால் உள்ளது. ஒரு குழாயின் முனையில் அமைந்துள்ள வாயில் ஒரு நாக்கும் கூட உண்டு. கடற்புற்களின் மேல் படர்ந்துள்ள கடற்பாசிகளைச் சுரண்டித் தின்ன இந்த நாக்கு பயன்படுகிறது. சங்கு அதன் கண்களை இழந்து விட்டால் அதற்கு இழப்பு ஒன்றுமில்லை. கண்கள் மீண்டும் தானாகவே வளர்ந்து விடும்.

கடல்நீரில் உள்ள கார்பனேட் அயன்களையும், கால்சியத்தையும் பயன்படுத்தி ராணிச் சங்கு அதன் அழகிய பிங்க் நிறத்தைப் பெறுகிறது. சங்குகளின் உடற்கூடு மிகவும் வலிமையானது. சிமெண்ட்டை வலுப்படுத்த இது பயன்படுகிறது. சங்கின் ‘ஒற்றைக்கால்’ கடல் தரையில் தத்தித் தத்திச் செல்ல உதவுகிறது. சங்கால் மிக வேகமாக நகர முடியாது. ஆகவே சங்கு தேடி முக்குளிப்பவர்கள் மிக எளிதாக சங்கைப் பிடித்து விடுவார்கள்.

Thursday 9 July 2020


கடலின் கோழி

கடல் அட்டைகள் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவு உண்டு. இது கூடுதல் பதிவு.
கடல் அட்டைகளைப் பார்த்தால் ஏதோ அவை முள்ளெலிக்கும், கத்தரிக்காய்க்கும் பிறந்த விந்தையான உயிர் போலத் தோன்றும். அவற்றைக் கையில் பிடித்தால் சட்டென சுருங்கிக் கொள்ளும். இன்னும் சீண்டினால், குடல் உள்பட உடலின் உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் நமக்கு அன்பளிப்பாக வெளியே தள்ளிவிடும்.

இதுஒரு வகை தந்திரம்தான். பூனை பல்லியைப் பிடிக்கும்போது பல்லி அதன் வாலை கழற்றிவிடும் ஓடுவதும், துடிக்கும் அந்த வாலை காலால் பிடித்தபடி பூனை ஏமாந்து நிற்பதும் இயல்பு இல்லையா? அதைப்போல தன்னை உண்ண வரும் கடலுயிர்களிடம் இருந்து தப்பவே கடல் அட்டை இப்படி குடலை வெளியே தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கடற்பறவை கடல் அட்டையை உண்ண முயன்றால் இந்தவகை தந்திரத்தை கடல்அட்டை கடைபிடிக்கும். கடல் அட்டையின் சுவையான குடலை இரையாக உண்ணும் கடற்பறவை அட்டைடையை விட்டுவிடும். இழந்த குடலுறுப்புகள் கடல் அட்டைக்கு மீண்டும் வளர்ந்து விடும்.

கடல்அட்டையால் மனிதர்கள் அடையும் பயன்கள் என்னென்ன? வெறும் ருசியான உணவாக மட்டுமில்லாமல் பற்பசை, மசாஜ் கிரீம், குளிர்பானம் போன்ற பல வடிவங்களில் கடல் அட்டைகள் பயன்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் கேடலோனியா பகுதியில் கடல் அட்டையை சுட்டுச் சாப்பிடுவார்கள். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் கடல்அட்டை, ‘கடலின் கோழி’ என அழைக்கப்படுகிறது.



சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆடம்பர உணவகங்களில், மிகமிக விலை உயர்ந்த உணவாக, கடல்அட்டைகள் சேவையாற்றுகின்றன. இதனால்தான் இந்தியா, பிலிப்பின்ஸ், எகிப்து போன்ற நாடுகளில் கடல்தரையை ஆராய்ந்து அதிக அளவில் கடல்அட்டைகள் பிடிக்கப்படுகின்றன. தென்பசிபிக் கடல் அடியில் வாழ்ந்த அட்டைகள் சூறையாடப்பட்ட பிறகு இப்போகு குலேபகாஸ் தீவுப்பகுதியில் கடல் அட்டைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. 1992ஆம் ஆண்டுவாக்கில் தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் 30 மில்லியன் கடல்அட்டைகள் அள்ளப்பட்டிருக்கின்றன. மீன்கள், கடற்பறவைகளின் முதன்மை உணவான கடல்அட்டைகள் இப்படி கண்டபடி களவாடப்படுவது எதிர்காலத்தில், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

-டாரஸ் கிரெஸ்கோ எழுதிய ‘டெட்சீஸ்’ என்ற நூலில் இருந்து

Monday 6 July 2020


சயனைடு மீன் வேட்டை

பாக்குவெட்டி
பார்க்கடலில் முக்குளிக்கும் வீரர்களுக்கு மிகவும் பரிச்சயமான மீன்களில் ஒன்று பெருந்திரளை (Humphead Wrasse). அரிய, பெரிய ஆறடி நீளமுள்ள பார்மீன் இது. (இந்த மீனைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு)
180 கிலோ வரை எடைகொண்ட இந்த மீன் மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் கூட ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு பாக்குவெட்டி என்றொரு பெயர் உண்டு.
தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய பெரிய மீன்பலமான பற்களால், கடினமான ஓடுகள் கொண்ட முட்தோலிகளை முறுக்கைத் தின்பது போல நொறுக்கித் தின்னக்கூடியது. அதனால்தான் இதற்குப் பாக்குவெட்டி என்று பெயர்.

ஒரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன்,
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர் போன்றவையும் பாக்குவெட்டியின் உணவு.

பெருந்திரளை எனப்படும் பாக்குவெட்டி மனிதர்களுக்கு ஆபத்தற்ற இந்த மீன், கடலுக்குள் முக்குளிப்பவர்களைக் கண்டால் இது மிக அருகில் அவர்களை உன்னிப்பாகக் கவனிக்கும். மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும். பழகிய நாய் போல மனிதர்கள் கையால் தரும் உணவையும் கூட அது விரும்பி உண்ணும்.
சரி. இனி, டாரஸ் கிரெஸ்கோ என்பவர் எழுதிய டெட்சீ (Dead Sea) என்ற புத்தகத்தைப் பற்றி பார்ப்போம். அந்தப் புத்தகத்தில், மனிதர்களை நம்பி அருகில் வந்து பழகும்  இந்த பாக்குவெட்டி மீன்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுவதைப்பற்றி டாரஸ் கிரெஸ்கோ எழுதியுள்ளார்.

30 முதல் 40 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடிய மீன் பாக்குவெட்டி. ஆனால் உணவுக்காக அது உயிருடன் பிடிக்கப்படுகிறது. உயிருடன் பிடித்து  விற்றால் உயர்ந்த விலை. பாக்கு வெட்டியின் தடித்த உதடுகளுக்கு தனிவிலை.

இப்படி உயிருடன் வேட்டையாடப்படும் காரணத்தால் பாக்குவெட்டிகளின் இனம் 1995ல் இருந்து 2003 வரையிலான காலகட்டத்தில், ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து ஒரு விழுக்காடாகக் குறைந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார் டாரஸ் கிரெஸ்கோ. (பாக்குவெட்டி மீன் இனம் அழிந்தால் அது பவழப்பாறைகளுக்கும் ஆபத்து. காரணத்தை அறிய முந்தைய வலைப்பதிவைப் படிக்கவும்).

இரண்டாம் உலகப்போரின்போது ஆசியப் பகுதிகளுக்கு வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், கையெறி குண்டை பவழப்பாறைகளின் மேல் போட்டு ‘மீன்பிடிக்கும்’ வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார்கள். பின்னர் அது  வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையாக ‘வளர்ச்சி’ கண்டது.

வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையை விட ஆபத்தானது சயனைடு முறை மீன்பிடிப்பு. ஹாங்காங் தீவுக்கு எதிரே உள்ள பெட்ரோ பிளாங்கோ பவழப்பாறைப் பகுதியில் இந்த சயனைடு மீன்பிடிப்பு முறை அதிக அளவில் உள்ளது.
நச்சுநீர் தெளிப்பு
பீய்ச்சியடிக்கும் வசதி கொண்ட குப்பி ஒன்றில் சோடியம் சயனைடு வில்லைகளை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டியது. பவழப்பாறைப் பகுதியில் இந்த நஞ்சு நீரைப் பீய்ச்சியடிக்க வேண்டியது.

இதனால் மீன்கள் மலைத்துப்போய் அப்படியே ஆடாமல் அசையாமல் நிற்கும். அவற்றை வலையில் அள்ள வேண்டியது. சில மீன்கள் பாறை இடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டால் பாதுகாப்பான நீர்மூழ்கி உடைகளை அணிந்துகொண்டு முக்குளித்து அந்த பாறைகளை கையால் உடைத்து மீன்களைப் பிடிக்க வேண்டியது.
வெடிவெடித்து மீன்பிடிப்பதால் பவழப்பாறைகள் உடைந்து சிதறினால் கூட அவை மீண்டும் வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால், சயனைடு நீரைப் பீய்ச்சியடித்தால் எண்ணி ஏழு நாள்களில் அந்த பவழப்பாறை அழிந்து போய்விடும் என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.

இப்படி பிடிக்கப்படும் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு சதுர மீட்டர் பவழப்பாறை காலியாகி விடும் என்கிறார் அவர்.

சயனைடு முறை மீன்பிடிப்பால் அந்த மீனில் உள்ள சயனைடு உடனே நீங்கி விடும். அதனால் மீனை உண்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் சயனைடு நீர் பரவிய பவழப்பாறை பகுதியில் மீனவர்கள் யாராவது தெரியாத்தனமாக நீந்தினால் அவருக்கு ஆபத்து உறுதி.

ஹாங்காங் தீவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள சிறிய பவழப்பாறைத் தீவு டோங்சா. ஒருகாலத்தில் இது கடல்வாழ் இளமீன்களின் மிகப்பெரிய நாற்றங்கால் பகுதியாக விளங்கிய இடம்.

இங்கே 250 டன் சயனைடு, 5 டன் டைனமைட் வெடி வைத்து அங்குல அங்குலமாக வேட்டையாடியதால் இன்று அந்த தீவுப்பகுதி ஒரு கடல் பாலைவனமாக மாறி விட்டது. மீனவர்கள் அங்கே பலநூறு மைல் பயணம் செய்தாலும்கூட ஒரேயொரு மீனைக் கூட பார்க்க முடியாது என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.
அடக் கொடுமையே!

Monday 29 June 2020


கடலில் வாழும் நரி!
கீரிப்பல்லன் சுறா
கீரிப்பல்லன் சுறா (Thresher Shark) பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே ஒரு பதிவு உண்டு. கீரிப்பல்லன் சுறாவின் அறிவியல் பெயர் Alopias Vulpinus.

இது கிரேக்க மொழியில் நரியைக் குறிக்கும் சொல். ஒரு கடல்வாழ் சுறாவான கீரிப்பல்லனுக்கு எப்படி நரி என்ற பெயர் அறிவியல் பெயராக வந்தது என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது அல்லவா?

கீரிப்பல்லன் சுறாவுக்கு இப்படி ஒரு பெயர் வர காரணமாக இருந்தவர் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். கிரேக்க மொழியில் அலோபியஸ் என்பது நரியைக் குறிக்கும் சொல்.

கடல்மேல் துள்ளவும் செய்யும்
கீரிப்பல்லன் நரியைப் போல தந்திரம் மிக்கது. எதிரி மீன்களிடம் இருந்து குட்டியைக் காப்பாற்ற குட்டியை தற்காலிகமாக இது விழுங்கிக் கொள்ளும்என்று அறிஞர் அரிஸ்டாட்டில் அந்தக் காலத்தில் எழுதி வைத்து விட்டார். அதனால் இந்த வகை சுறாவுக்கு நரி என்ற பெயர் வந்து விட்டது

ஆனால் குட்டியை கீரிப்பல்லன் சுறா தற்காலிகமாக விழுங்கும் பிறகு வெளியே விட்டுவிடும் என்பது தவறான தகவல்.

கீரிப்பல்லன் சுறா சாட்டை போன்ற அதன் நீளமான வாலால், சாளை போன்ற சிறுமீன்களின் கூட்டத்தை அடித்து கலைத்து, அதில் அடிபட்டு ஓட முடியாமல் தவிக்கும் மீன்களை இரையாக்கும் என்பது தெரிந்ததே. 

அதுபோல கீரிப்பல்லன் சுறா அதன் பத்தடி நீள வாலை அங்குமிங்கும் அசைத்து மீன்கூட்டத்தை ‘மேய்க்கவும்’ செய்யும். மீன்கூட்டம் ஒன்றுதிரண்ட பின், தக்க வேளையில் மீன்கூட்டத்தை இது வாலால் தாக்கி வேட்டையாடும்.

Monday 22 June 2020


மீன்களற்ற கடல்

கொம்பன் சுறா
 நமது புவிப்பந்தின் 70 விழுக்காடு பரப்பு கடலால் நிரப்பப்பட்டு உள்ளது. எஞ்சியிருக்கும் பகுதியே இப்போது நாம் வாழும் நிலப்பரப்பு.

உலகில் உள்ள தானியங்கள், காய்கறிகள், ஆடுமாடு போன்ற உயிர்கள் முற்றிலும் அழிந்து போனால்கூட மனிதகுலத்துக்குத் தேவையான உணவை இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வழங்க கடல் அன்னை தயாராக இருக்கிறாள்.
அண்மையில், இப்படியொரு தகவலை நமது தமிழ் இதழ் ஒன்றில் காண நேர்ந்தது.

இது உண்மையா? இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு கடல்அன்னை நமக்கு மீன்களை உணவாக வழங்குவாளா என்று கேட்டால் இல்லைஎன்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வரும் 2048ஆம் ஆண்டில் உலகக் கடல்களில் மீன்களே இல்லாமல் போய்விடும்(!!!)’ என்கிறார்கள் பன்னாட்டு சூழலியல் வல்லுநர்கள்.

2006ஆம் ஆண்டு போரிஸ் வார்ம் என்ற கடலியல் ஆய்வாளர், அறிவியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.
ஏழாயிரத்து 800 வகை மீன்களை, கடலுயிர்களை நான்காண்டு காலம் வரை இந்தக்குழு ஆராய்ந்தது. அந்த ஆய்வின் முடிவில், ‘வரும் 2048ஆம் ஆண்டில் உலகக் கடல்களில் மீன்களே இல்லாமல் போய் விடும்என்று அந்தக்குழு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்னும் 32 ஆண்டுகளில் இந்த ஆபத்தான நிலைமை இந்த பூவுலகுக்கு வந்து சேரும் என அவர்கள் கணித்திருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டின் சாக்கடல் எனப்படும் செத்தக்கடலில் மீன்கள் எதுவும் வாழ முடியாது. அந்த சாக்கடல் போல, ‘உலக மாகடல்கள் அனைத்தும் உயிரிழந்து போய்விடும்என்கிறார்கள் அந்த ஆய்வுக்குழுவினர். ‘இந்த கருத்தை இப்போது சிலர் நம்ப மறுக்கலாம். ஆனால், அவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கைக் குரல். அவர்கள் விரைவில் விழித்துக் கொள்ள வேண்டும்என்கிறார்கள்  ஆய்வுக்குழுவினர்.

புவி வெப்பமாகி உலக கடல்களின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், ஒரு நாள் இந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் கடலில் மூழ்கும் காலம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கடல் உணவுகள் மட்டும்தான் மனிதர்களுக்கு கைகொடுக்கும் கருவியாக இருக்கும். காக்கும் ஒரே துணையாக இருக்கும்.  அந்த கடல் உணவுகள்தான் 2048ல் காணாமல் போய்விடும் என்கிறார்கள் அறிஞர்கள்.

ஏன்? என்ன காரணம்?

வருங்காலத்தில் மீனற்ற பெருங்கடல்கள் உருவாக காரணிகள் எவை எவை என்று ஆராய்ந்தால், அதிக மக்கள் பெருக்கம், அதிக அளவிலான மீன்பிடிப்பு, சூழல் சீர்கேடு, மீன்களின் இருப்பிட இழப்பு, புவிவெப்பம் இவைகள்தான் காரணம் என்கிறார்கள் கடலியல் வல்லுநர்கள்.

உலகின் தற்போதைய முக்கியத் தேவை உணவு. அதிலும் முதன்மையானது புரொட்டீன் எனப்படும் புரதச்சத்து.

2017ஆம் ஆண்டுக்கும், 2050ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பூவுலகில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை 29 விழுக்காடாக அதாவது 9.8 பில்லியனாக (980 கோடியாக) உயரும் என பன்னாட்டு மன்றம் (.நா.அவை) கணித்துள்ளது.

தற்போது கிட்டத்தட்ட 760 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை 980 கோடியாக உயரும் நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற பின்தங்கிய பகுதிகளிலேயே இந்த மக்கள் பெருக்கம் அதிகமாக இருக்கும். உலகின் பின்தங்கிய மூன்றாம் நாடுகள் செறிந்துள்ள இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் முதன்மை உணவுகளில் கடலுணவும் அடங்கும்.

உலகின் மக்கள் தொகை 980 கோடியாக உயரும்போது, கூடவே புரதச்சத்தின் தேவையும் 32 விழுக்காட்டில் இருந்து 78 விழுக்காடாக அதிகரிக்கும். இதை ஈடுகட்ட ஆண்டுக்கு 62 முதல் 159 மில்லியன் மெட்ரிக் டன் புரதம் தேவைப்படும். இந்த புரத தேவையே கடல்மீன்களுக்கு ஆபத்தாகிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கடலில் தற்போது மூன்றரை டிரில்லியன் மீன்கள் வசிப்பதாக கடல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மிகப்பெரிய இழுவை மடிகளைக் கொண்டு இயங்கும் மீன்பிடிக் கப்பல்கள் கடலில் ஒரு மிதக்கும் தொழிற்சாலை போலவே இப்போது செயல்படுகின்றன. உலகம் முழுவதும் கடலின் அடி ஆழம் வரை தரையைக் கிளறி உயிருள்ள எல்லா பொருள்களையும் துடைத்து அள்ளும் பணியில் அவை ஈடுபட்டுள்ளன
.
கடலே...கடலே...
ஒவ்வொருமுறை மடியிழுக்கும் போது ஒரு மீன்பிடிக் கப்பல் ஏறத்தாழ 400 டன் மீன்களைப் பிடிக்கிறது. அவற்றில் தேவையில்லாத 40 விழுக்காடு மீன்கள் கப்பலின் ஒருபுறம் கொட்டப்படுகின்றன. அவை துடிதுடித்து உயிரிழந்தபின் கடலில் வீசியெறியப்படுகின்றன. இதுபோன்றமீன்பிடிப்புநம்மை ஆபத்தில் கொண்டு போய்விட உள்ளது.

அதுபோல, தற்போது ஒவ்வோர் ஆண்டும் 8.8 மில்லியன் டன் (88 லட்சம் டன்) பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன.
‘2050ஆம் ஆண்டில் கடலில் குப்பையாகக் கொட்டப்பட்டு சேரும் பிளாஸ்டிக்குளின் எடை கடலில் உள்ள மொத்த மீன்களின் எடையை விட அதிகமாகிவிடும்என்று ஹெலன் மக்ஆர்தர் அறக்கட்டளை அதன் அறிக்கையில் கணித்துள்ளது. கணித்துள்ளது என்பதைவிட எச்சரித்துள்ளது என்ற சொல்லே சரியானது.

2050ல் உலகக் கடல்களில் 895 மில்லியன் டன் மீன்கள் இருந்தால், அதே கால கட்டத்தில் கடலில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளின் எடை 937 மில்லியன் டன்னாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது மீன்களின் எடையைவிட பிளாஸ்டிக் குப்பைகளின் எடை அதிகமாக இருக்கும்.

உலகின் பெருங்கடல்கள் தற்போது அதிக வெதுவெதுப்பாகி, சூடாகி, மீன்களற்ற ஓர் எதிர் காலத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகுக்கு உணவூட்டும் ஒரு பெரிய வகிபாகத்தை நாம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.

புவி வெப்பமடைவதால் கடல்களும் வெப்பமடைகின்றன. இதனால் மீன்கூட்டங்கள் புதிய குளிர் நிறைந்த இடங்களைத் தேடி இடம்பெயர்கின்றன. இதனால் அவற்றின் இனப்பெருக்க ஆற்றல் பாதிக்கப்படுகிறது. புரியாத புதிய இடத்தில் அவை எளிதாக பிற பெரிய இரைகொல்லி மீன்களுக்கு இரையாகின்றன.

மனிதர்களின் உணவுத்தட்டுகளில் முதன்மையாக இடம்பெறும் மீன்களான சூரை (Tuna), அயலை, பொனிட்டோ போன்ற மீன் இனங்களின் எண்ணிக்கை 1970 முதல் 74 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளன.

பருவநிலை மற்றும் சூழல் மாற்றம் போன்றவை உலக மீன்சந்தைகளின் சவப்பெட்டியில் அடிக்கப்போகும் கடைசி ஆணியாக இருக்கும்என மலின் எல். பின்ஸ்கி என்ற கடல்சூழல் ஆய்வாளர் வேறு கணித்துள்ளார்.

நாளுக்கு நாள் தட்பவெப்பநிலை ஏறுமுகமாக இருந்தால், கடல்நீர் வெப்பமடைந்து பல்வேறு கடலுயிர்கள் வாழமுடியாத இடமாக மாறிவிடும். ஏராளமான கடலுயிர்கள் போதிய அளவு உயிர்க்காற்றைப் பெற முடியாத சூழ்நிலை உருவாகும். இப்போதிருக்கும் பலவகை மீன்களை நமது வருங்கால வாரிசுகளுக்கு நாம் கடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்என்கிறார் மலின் எல். பின்ஸ்கி.

உலகக் கடல்களில் வெறும் 13 விழுக்காடு கடற்பகுதியே இன்னும் பழைமை மாறாமல் தூய்மை கெடாமல் இருப்பதாக நடப்பு உயிரியல் (Current Biology) என்ற அறிவியல் இதழ் கட்டுரை வரைந்துள்ளது. உலகக் கடல்களில் மீதமுள்ள 87 விழுக்காடு பகுதி சீர்கேடை ஏற்கெனவே சந்தித்திருப்பதாக அந்த இதழ் கூறியுள்ளது.
கடலில் தூய்மை கெடாத அந்த 13 விழுக்காடு பகுதி ஆழ்கடல்களில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இந்த 13 விழுக்காடு பகுதியிலும் விரைவில் மீன்பிடிப்புப் போட்டிகள் நடந்து அந்தப்பகுதிகளும் அழிவை எட்ட வாய்ப்பிருப்பதாக நடப்பு உயிரியல் இதழ் கூறுகிறது.

வரிப்புலியன் சுறா
பெருங்கடல்களில் உயிர்க்காற்று என நம்மால் அழைக்கப்படும் ஆக்சிஜன் குறைந்து வருகிறது கொஞ்சம் கொஞ்சமாக அல்ல. படபடவென சரிந்து வருகிறது. இப்படி ஆக்சிஜன் குறைந்த இடங்கள் செத்த பகுதிகளாக மாறி வருகின்றன

பெருங்கடல்களில் இதுபோல நூற்றுக்கணக்கான தண்ணீர்ப் பாலைவனங்கள் உருவாகி உள்ளன.
இதனால் பெருங்கடல்களின் மேற்பரப்பில் மேய்ந்து திரியும் மீன் இனங்களாக சுறா, சூரை, கொப்பரன் (Marlin), மோளா போன்ற பெரியவகை மீன்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

உலகில் இனி அடுத்து வரப்போகும் போர்கள், எதிரி நாடுகளின் நிலத்தைக் கைப்பற்றவோ, அவர்களது செல்வத்தை கைப்பற்றவோ நடக்காது. தண்ணீர், மழைமேகம் போன்றவற்றுடன் கடல்மீனுக்காகவும் போர்கள் வெடிக்கும். கடந்த 17 ஆண்டுகளாகபயங்கரவாதத்துக்குஎதிராக போர் நடத்திய அமெரிக்கா கூட தனது போக்கை மாற்றிக் கொண்டு கடல்மீனுக்காக போராடும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
2048ஆம் ஆண்டு என்பது மிக தொலைவில் இல்லை. எனவே விழிப்புடன் இருங்கள் மக்களே. குறிப்பாக நெய்தல் நில மக்களே!


பா நண்டு

இந்த நண்டின் பெயர் பா நண்டு. பசுமை நிற நண்டு என்பதால் பாநண்டு என அழைக்கப்படுகிறது. இதனிலும் சிறிய இளம்பருவ நண்டு கருவாலி நண்டு என அழைக் கப்படுகிறது.
பா நண்டு

பா நண்டு வேகமாக ஓடக்கூடியது. கடற்கரைகளில் ஆழக்குழி தோண்டி வசிக்கும் இயல்புடையது. ஆகவே குழிநண்டு என்ற பெயரும் இதற்கு உண்டு. உணவுக்காகவும், தூண்டில் இரையாகவும் மீனவர் கள் இதைப் பயன்படுத்துவார்கள். துவையல் அரைத்து உண்ண இது மிகவும் சுவையான நண்டு.

தூண்டில் இரையாக இந்த நண்டைப் பயன்படுத்தினால், தூண்டில் முனையில் உள்ள இரை அவ்வளவு எளிதில் கழிந்து போகாமல், நீண்டநேரம் மீன்பிடிக்க உதவும். எனவே மீனவர்கள் மற்ற எல்லா நண்டுகளையும் விட பா நண்டையே மிகவும் விரும்பிப் பிடித்துத் தூண்டில் இரையாக ஏற்பார்கள்.

Saturday 2 May 2020


முதிர்வயது முனிவன் நண்டு
ஒரு கூட்டுக்குள்ளே என் குடியிருப்பு..
முனிவன் நண்டை உங்களுக்குத் தெரியும்தான்.  நமது வலைப்பூவைத் தொடர்ந்து படிப்பவர் என்றால் தெரிந்திருக்கும். 2019 டிசம்பர் மாதம் முனிவன் நண்டு பற்றி ஒரு பதிவு இருக்கிறது.

துறவி நண்டு, தவசி நண்டு, முனிவன் நண்டு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நண்டினத்தில் மொத்தம் 1,110 இனங்கள் உள்ளன. பத்துகாலி (Decopod) எனப்படும் பத்து கால்களையுடை உயிரினப் பிரிவைச் சேர்ந்தது முனிவன் நண்டு. போகட்டும்.

முனிவன் நண்டின் அடிவயிறு மிகவும் மென்மையானது. கணவாய் போன்ற கொல்லுயிர்களில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் முனிவன் நண்டுக்கு ஒரு பாதுகாப்புக் கூடு தேவை.
அதற்காக தனக்கு தகுந்த அளவில் ஏதாவது ஒரு மெல்லுடலி (Mollusk) வசிக்கும் ஓட்டுக்காக முனிவன் நண்டு காத்திருக்கும். அந்த மெல்லுடலியைக் கொல்லாமல் அது இறந்து போகும் வரை பொறுமையாகக் காத்திருக்கும். கிட்டத்தட்ட ஒரு தவம் மாதிரியான செயல்பாடு இதுதான்.
அந்த மெல்லுடலி இயற்கை மரணம் அடைந்தபிறகும்கூட அதை வேறுஓர் உயிர் வந்து உண்டுமுடிக்கும்வரை முனிவன் நண்டு காத்திருக்கும். பிறகு முனிவன் நண்டுக்கு முன்பணம், வாடகைப் பிரச்சினை எதுவுமில்லாமல் அழகான ஒரு கூடு தயார்.
பொறுமை கடலினும் பெரிது என்பார்களே அப்போல இந்த விடயத்தில் முனிவன் நண்டின் பொறுமையும் மிகப்பெரியது. இந்த பொறுமை தந்த பரிசோ என்னவோ முனிவன் நண்டுகள் 15 முதல் 20 ஆண்டுகள் வாழக்கூடியவை என்றாலும் சில நண்டுகள் அதைவிட நீண்டகாலம் வாழக்கூடியவை.
முனிவன் நண்டு
ஜோனாதன் லிவிங்ஸ்டன், கேட்டி என்ற இரு வளர்ப்பு முனிவன் நண்டுகள் 29 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கின்றன. ஜான் என்ற வளர்ப்பு முனிவன் நண்டு 40 ஆண்டுகாலம் வாழ்ந்தது. தின்ஃபோயில்செப் என்ற நண்டு 57 ஆண்டுகள்(!) வாழ்ந்து சாதனை புரிந்திருக்கிறது.
சரி! அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த பூவுலகில் புதைபடிவமாக கண்டெடுக்கப்பட்ட மிகமிக பழைய முனிவன் நண்டு எது தெரியுமா? இங்கிலாந்தின் யார்க் ஷயர் பகுதியில் உள்ள ஸ்டீப்டின் என்ற ஊரில் புதைபடிவமாக கிடைத்த முனிவன் நண்டே மிகமிகப் பழமையானவர்.
அதாவது அவர் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த, கிரேட்டாசியஸ் காலத்தைச் சேர்ந்தவர். அவர் பழமையிலும் பழமையாக அந்தக் காலத்தில் வாழ்ந்த அமோனைட் என்ற மெல்லுடலி இறந்தபின் அதன் கூட்டில் வாழ்ந்தார் என்பது சிறப்புச் செய்தி.

Saturday 18 April 2020

விந்தை உயிரினம் ஓங்கல்

துள்ளி.. துள்ளி.. நீயாடம்மா
கடல்வாழ் பாலூட்டிகளில் ஒன்றான ஓங்கல் எனப்படும் டால்பின் ஒரு விந்தையான உயிரினம். மனிதர்கள் அளவுக்கு அறிவுள்ள விலங்கான ஓங்கல், மனிதர்களோடு மிக நெருங்கிப் பழகக் கூடிய விலங்கு. மனிதர்களின் உணர்வுகளைக்கூட ஓங்கலால் புரிந்து கொள்ள முடியும். கடலில் மூழ்கித் தத்தளித்த மனிதர்களை ஓங்கல்கள் காப்பாற்றி கரைசேர்த்த சில நிகழ்வுகள் உள்ளன.

கடல் கடவுள் நெப்டியுனால் சபிக்கப்பட்ட சில கப்பல் மாலுமிகள்தான் டால்பின்களாக மாறினார்கள் என்று கிரேக்க நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றன. கிரேக்க (கிரீஸ்) நாட்டில் டால்பின்களைக் கொன்றால் அது மிகப்பெரிய குற்றம்.

ஒருமுறை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநில கடல்அருங்காட்சியகத்துக்கு ஒரு பெண்மணி போயிருந்தார். அவர் ஓங்கல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, பெண் ஓங்கல் ஒன்று அதன் வாயால் சிறிய கூழாங்கல் ஒன்றை நீருக்கு அடியில் இருந்து பொறுக்கியெடுத்து, அந்த பெண்ணின் வயிற்றின் மீது சரியாக குறிபார்த்து எறிந்தது. அது மிகச்சிறிய கல். எனவே அந்தப் பெண்மணிக்கு வலி எதுவும் ஏற்படவில்லை.

இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு சிறிய கல்லை எடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றைக் குறிபார்த்து ஓங்கல் மென்மையாக எறிந்தது. மூன்றாவது முறையும் இதேப்போல நடந்தது. அந்த கடல்அருங்காட்சியக ஊழியர்களுக்கு கூட ஓங்கல் ஏன் அப்படி செய்கிறது என்பது புரியவில்லை. இதுவரை அது அப்படி நடந்து கொண்டதில்லை. இது என்ன புதுப்பழக்கம் என்று அவர்கள் திகைத்துப் போனார்கள்.
ஆனால் அந்தப் பெண்மணி மட்டும் ஓங்கல் ஏன் அப்படி செய்தது என்பதை புரிந்து கொண்டார். தான், சற்றுமுன் மருத்துவமனைக்குப் போயிருந்ததாகவும், மருத்துவர் தன்னைப் பரிசோதித்துவிட்டு கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். அந்தப் பெண்மணியின் வயிற்றில் புதிதாக உருவாகி இருந்த கருவை ஓங்கல் அறிந்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத்தான் அந்தப் பெண்மணியின் வயிற்றின் மீது சிறிய கல்லை வீசி விளையாடியிருக்கிறது. அந்த அளவுக்கு ஓங்கல்கள் எனப்படும் டால்பின்கள் அதீத அறிவாற்றலும், விசித்திரமான சக்தியும் உள்ளவை.

சுறாக்களால் 100 மீட்டர் தொலைவில் உள்ள உயிர் ஒன்றின் இதயத் துடிப்பைக்கூட அறிந்து கொள்ள முடியும் என்பார்கள். இதே திறமை ஓங்கல்களுக்கும் உண்டு. ஓங்கல்களால் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து விட முடியும். கர்ப்பிணி பெண் ஒருவரை கடலில் இடுப்பளவு ஆழத்தில் நிறுத்திவைத்தால் ஓங்கல்கள் வந்து அவரை சூழ்ந்து கொள்ளும் என்றுகூட ஒரு நம்பிக்கை உள்ளது.
இதுபோக, ஓங்கல்களிடம் இன்னும் பல்வேறு வகையான திறமைகள் உள்ளன. ஓங்கல்களால் பேசவும், பாடவும் முடியும். மிகமிகத் தொலைவில் இருந்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

விர்..ரென விரைவு நீச்சல்
இது தவிர கடல்கொண்ட தென்னாடான லெமூரியா கண்டம், கடலில் மூழ்கி மறைந்த அட்லாண்டிஸ் கண்டம் போன்ற பழங்கால கண்டங்களைப் பற்றி ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். மூதாதையர்கள் சொன்ன கதைகளை மனிதர்கள் வழி வழியாக தங்கள் சந்ததிகளுக்குக் கடத்துவது போல, ஓங்கல்களும் தங்கள் பரம்பரை அறிவை, வரலாற்றை, வழிவழியாக தங்கள் சந்ததிகளுக்கு கடத்துவதாக அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். கடலில் மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைப் பற்றிகூட ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். (ஓங்கலுக்கு உடனே Facebook Friend request கொடுத்து விடாதீர்கள்)

அமெரிக்க செவ்விந்தியர்கள், ஓங்கலைவாழ்க்கையின் மூச்சுஎன்று வர்ணிப்பார்கள். ‘உடல் என்னும் யதார்த்தத்தின் வரம்புகளை, பரிமாணங்களை உடைத்தெறியும் ஆற்றல் கொண்டவை ஓங்கல்கள்என்றும் அவர்கள் கூறுவார்கள்.

தமிழகத்தின் தென்கடல் பரதவர்களிடம் ஒரு பழமொழி உண்டு. ‘ஓங்கல் அறியும் உயர்கடலின் ஆழம்என்ற பழமொழி அது. ஓங்கல்களுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் இருக்கும்போது, ஓங்கல் ஒன்று கப்பல்களுக்கு வழிகாட்டுவது அப்படியொன்றும் அதற்கு பெரிய வேலை இல்லை

Tuesday 7 April 2020


அழகு மீன்களுக்கு ஆபத்து

ஆபத்தின் விளிம்பில் அழகு மீன்கள்
கடலின் மழைக்காடுகள்’ என பவழப்பாறைகளைக் கூறுவார்கள். பவழப்பாறைகள் கடலடி தோட்டங்கள் என்பதுடன் அவை மிகப்பெரிய உயிர்க்கோளங்களும் கூட.உலகின் மொத்த கடல்பரப்பில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவுதான். ஆனால்,கடல் மீன் இனங்களில் இருபத்தைந்து விழுக்காடு மீன் இனங்கள் பழப்பாறைகளில் அல்லது பவழப்பாறைகளை அண்டிய பகுதிகளில்தான் வாழ்கின்றன. இப்போது பவழப்பாறைகளின் முதன்மைத்தன்மை சட்டென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பவழப்பாறைகளில் சுற்றித்திரியும் அழகிய சிறுமீன்களை உயிருடன் பிடித்து அவற்றை கண்ணாடித் தொட்டிகளில் அலங்கார மீன்களாக வளர்ப்பவர்களுக்கு விற்கும் தொழில் தற்போது உலக அளவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மிகப்பெரிய உணவகங்கள், மருத்துவமனைகள், வணிக அங்காடிகளில், பெரிய பெரிய  கண்ணாடித் தொட்டிகளில் இந்த மீன்கள் உயிருள்ள காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன. பரந்து விரிந்த பவழப்பாறைகளில் நீந்தித் திரிந்த மீன்கள், கண்ணாடித் தொட்டிகளே உலகம் என்று வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இப்படி பவழப்பாறை வண்ண மீன்களை உயிருடன் பிடித்து ஏற்றுமதி செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ் நாடுதான். பசிபிக் கடல்நாடான பிலிப்பைன்சில், பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிப்பதற்காக சோடியம் சயனைடு என்ற ஆபத்தான பொருளை அந்த நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சோடியம் சயனைடு வில்லையை, பீய்ச்சியடிக்கும் வசதியுள்ள ஒரு குப்பியில் இட்டு நீரில் கரைத்து, அந்த குப்பியுடன் இவர்கள் கடலில் இறங்குவார்கள்.
பீய்ச்சப்படுகிறது நச்சுநீர்
வண்ண மீன் ஒன்றைக் கண்டால் அதன்மீது இந்த சோடியம் சயனைடு கலந்த நீரை பீய்ச்சுவார்கள். அந்த நீர் பட்டதும் மீன் ஆடாமல் அசையால் சிலைபோல நிற்கும். அப்போது சிறியவலை அல்லது வெறும் கையால் கூட மீனைப்பிடித்து அதற்கென உள்ள கண்ணாடிப் பாத்திரத்தில் அதை சிறைப்படுத்தி விடுவார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயிரம் டன் வரை இந்த வகை அலங்கார பார்மீன்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உணவுக்காகப் பிடிக்கப்படும் ஒரு கடல்மீனின் விலையைவிட இந்த அலங்கார பவழப்பாறை மீன்களின் விலை ஐந்து மடங்கு அதிகம். தூண்டில் பயன்படுத்தி அடுத்தடுத்து 2 மீன்களைப் பிடிக்கும் நேரத்தில், நீரில் முக்குளித்து சோடியம் சயனைடைப் பயன்படுத்தி 12 மீன்களை உயிருடன் பிடித்துவிடலாம். ஆகவே, இந்தத் தொழில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படகுகள் மூலம் திருட்டுத்தனமாகவும் வெளிநாடுகளுக்கு மீன்கள் கடத்தப்படுகின்றன.
சிலவேளைகளில் உயிருள்ள அலங்கார மீன்கள் மட்டுமின்றி களவா (Grouper) போன்ற உண்ணத்தகுந்த பார்மீன்களும் சோடியம் சயனைடு கலந்த நீரைத்தூவி உயிருடன் பிடிக்கப்படுகின்றன. ஓர் உணவுத்தட்டின் அளவுக்கு உள்ள பெரிய உயிருள்ள மீனை சுடச்சுட சமைத்து சீனர்கள் விரும்பி உண்பார்கள், அதற்கு விலையும் அதிகம். இதனால் பார்மீன்களான களவா போன்றவையும் உயிருடன் பிடிக்கப்படுகின்றன.
சோடியம் சயனைடு கலந்த நீரினால் திக்குமுக்காடிப்போய் பிடிபடும் களவா போன்ற மீன்கள் சயனைடு கலந்த நீரை கக்கிவிடும் என்பதால் அதை உண்ணும் மனிதர்களுக்கு சயனைடால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
ஃபைண்டிங் நெமோ படத்தில் ஒரு காட்சி
பவழப்பாறைகளில் வாழும் அலங்கார மீன்களில் 98 விழுக்காடு மீன்களை தொட்டிகளில் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை கடலில், அவற்றின் சொந்த உயிர்ச்சூழலில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எனவே நேரடியாக கடலில் இருந்து அவை அளவுக்கதிகமாகப் பிடிக்கப்படுகின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாடு மட்டும் மில்லியன் கிலோ சோடியம் சயனைடை அந்த நாட்டுப் பவழப்பாறைகளில் கலந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இப்படி சோடியம் சயனைடை கடலில் பீய்ச்சியடிப்பதால் பவழப்பாறைகள், பாசியினங்கள் பெரிய அளவில் பாதிப்படைகின்றன. ஓர் உயிருள்ள மீனை பிடிப்பதற்காகப் பீய்ச்சியடிக்கப்படும் சோடியம் சயனைடால் ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள பவழப்பாறைகள் அழிவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டைப் பின்பற்றி உலக அளவில் பல்வேறு நாடுகள் இப்படி சோடியம் சயனைடைப் பயன்படுத்தி அலங்கார பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடல் சூழல்சீர்கேடு அடைந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி வருகிறது.