Sunday 23 December 2018


களவா மீனின் சைகை மொழி

களவா 
களவா எனப்படும் Grouper மீன், பவழப்பாறைப் பகுதிகளில் வாழும் பெரிய வகை மீன். இது மிகச்சிறந்த முறையில் வேட்டையாடும் மீனும் கூட. திறந்தவெளியில் இரையை வேகமாக விரட்டிப்பிடித்து வேட்டையாடுவதில் களவா வல்லது. 
இந்தப் பவழப்பாறை களவா மீன், மற்ற பெரிய வகை மீன்களுடன் ஒருவித சைகை மொழியில் பேசுவது கடல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
களவா விரட்டிச் செல்லும் இரைமீன், பவழப்பாறை இடுக்குகளில் நுழைந்து மறைந்து கொண்டால், களவா அதற்கே உரித்தான, தனித்துவமான சைகை மொழியில் மற்ற பெரிய இருவகை மீன்களை உதவிக்கு அழைக்கிறது.
இப்படி களவா உதவி கோரும் மற்ற பெரிய இருவகை மீன்களில் ஒன்று பெரிய அஞ்சாளை மீன் (Moray eel). மற்றது கருந்திரளி மீன் (Wrasse). இந்த மீன்களின் உதவிக்காக சிலவேளைகளில் 25 நிமிடநேரம் வரை கூட களவா காத்திருக்கிறது.
நண்பர்கள் கண்ணில் பட்டதும், இரை ஒளிந்திருக்கும் பகுதியை மூக்கால் சுட்டிக் காட்டி, தன் உடலை இருபுறமும் களவா அசைக்கிறது. இதன்மூலம் இரைமீன் பதுங்கி இருக்கும் இடத்தை நண்பர்களுக்குக் குறிப்பால் உணர்த்துகிறது.
அடுத்து கூட்டாக வேட்டை ஆரம்பம்.
நெப்போலியன் கருந்திரளி
மீன்களில் கருந்திரளி மீன் பலம்மிக்க தாடை உடையது. வலுவற்ற துளைகளுடன் கூடிய பவழப்பாறைகளில் மோதி அதை உடைத்துப் பெயர்த்து விடக் கூடியது. இரைமீன் ஒளிந்திருக்கும் பவழப்பாறைப் பகுதியை கருந்திரளி இப்படி உடைக்கும்போது, இரை மீன் பொடிப் பொடியாகும். அல்லது தப்பித்து ஓடும்.
இரைமீன் உடைக்க முடியாத அளவுக்கு வலுவான பவழப்பாறையில் உள்ள பொந்துக்குள் போய் மறைந்து கொண்டால், இப்போது அஞ்சாளையின் முறை. அஞ்சாளை அதன் ஒல்லியான உடலைப் பயன்படுத்தி பார் இடுக்கில் புகுந்து இரை மீனைப் பிடிக்கும். இரைமீன் அப்போதும் தப்பித்து திறந்தவெளியில் ஓடினால் வேகத்துக்குப் பேர்பெற்ற களவா மீன் அதை விரட்டி இரையாக்கி விடும்.
இப்படி கூட்டாக வேட்டையாடப்படும் இரைமீனை இந்த 3 வகை மீன்களும் ஒன்றுக் கொன்று பகிர்ந்து கொள்வதில்லை. எந்த மீனின் வாயில் இரைமீன் சிக்குகிறதோ  அந்த மீன், இரையைத் தனதாக்கி முழுதாக விழுங்கிவிடும்.
பொதுவாக, களவா மீனின் வேட்டை முயற்சிகளில் 20ல் ஒன்றுதான் வெற்றி பெறும். ஆனால், இப்படி கூட்டணியமைத்துக் கொண்டு வேட்டையாடினால் ஏழில் ஒரு வேட்டை முயற்சி வெற்றியடையும்.
பெரிய அஞ்சாளை
சில வேளைகளில் இரைமீன் கண்ணில்படும் முன்பே களவா, மற்ற தோழர்களான கருந்திரளி, அஞ்சாளை போன்றவற்றுடன் சைகை மொழியில் கூட்டணி அமைத்துக் கொள்வதும் உண்டு. இந்த மூவகை மீன்களும் தத்தமக்கு உரிய வேட்டைத் திறமையுடன் பவழப்பாறைகளில் அங்குமிங்கும் இரைதேடும். அதனதன் திறமைக் கேற்ப இரைமீனைக் கவர முயற்சிக்கும். இப்படி மூவகை மீன்களும் ஒன்றுசேர்ந்து இரையைத் தேடித் திரியும் காட்சி அழகானது.  
பொதுவாக மனிதர்கள், குரங்குகள், சிலவகை பறவைகளால்தான் சைகை மொழியைக் கடைபிடிக்க முடியும். மீன்களுக்கு சின்னஞ்சிறிய மூளை இருப்பதால் அவற்றால் சைகை மொழியைக் கடைபிடிக்க முடியாது என இதுநாள் வரை நம்பப்பட்டு வந்தது.
ஆனால், சைகை மொழியில் தன்னால் பேச முடியும் என்பதை களவா மீன் எண்பித்துக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நன்றி: நேஷனல் ஜியாக்ரபி

No comments :

Post a Comment