Tuesday 4 December 2018


நிலம்வாழ் திமிங்கிலங்கள்!

திமிங்கிலங்கள் ஒருகாலத்தில் நிலத்தில் வாழ்ந்தவை என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பு வதற்கு கொஞ்சம் கடினமாக இருந் தாலும் இது உண்மை.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதாவது ஆறரை கோடி ஆண்டு களுக்கு முன் புவியில் கொடிகட்டிப் பறந்த டைனசோர்கள் மர்மமான ஓர் இயற்கை பேரிடரில் உயிரிழந்தன. டைனசோர்கள் மட்டுமல்ல, கடல் வாழ் பேருயிர்களான பிளெசியோசோர், இக்தியோசோர்களும் பூவுலகை விட்டு மறைந்தன.
இதையடுத்து இந்த பூவுலகம் பாலூட்டிகளின் கைகளில் வந்தது. ‘இனி எங்கள் ஆட்சி‘ என்று பாலூட்டிகள் ஆர்ப்பரித்தன.
டைனசோர்கள், பிளெசியோசோர் போன்ற பேருயிர்கள் நிலத்திலிருந்தும், ‘கடலிலிருந்தும் மறைந்து போனதால் இவ்விரு இடங்களிலும் ஏராளமான இரை உயிர்கள் மிஞ்சின.
இந்த காலகட்டத்தில் விந்தையான பல பாலூட்டிகள் மலை உச்சிகளிலும், கடலோரங்களிலும் பல்கிப் பெருகின. அந்த காலகட்டத்தில்தான் திமிங் கிலங்களும், ஓங்கல்களும் நிலம் வாழ் விலங்குகளாக புவியில் வாழ்ந்தன.
பாகிஸ்தானில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு தொல் திமிங் கிலத்தின் புதைபடிவம் (தொல்எச்சம்) (Fossil) கிடைத்துள்ளது. அதன்படி பார்த்தால் திமிங்கிலங்களில் சில இப்போதுள்ளது போல பெரிய உருவத்துடன் இருக்காமல், சிறிய ஓம்பிலி (Porpoise) அளவில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. சிலவகை திமிங்கிலங்கள் விலாங்கு வடிவத்தில் ஐம்பதடி நீளம் கொண்ட பெரிய பாலூட்டிகளாக வாழ்ந்திருக்கின்றன.
ஆரம்பத்தில் ஓர் ஆப்பிரிக்க நீர்யானை யைப் போலவே திமிங்கிலங்களும் வாழ்க்கை நடத்தியிருக்கின்றன. நீர் யானை பகல் முழுக்க ஆற்றில் கிடந்து விட்டு இரவில் கரையேறி புல்மேய் வதைப் போல, அந்தக்கால திமிங்கிலங் களும் அவ்வப்போது கடலுக்கும், நிலத் துக்கும் இடையே மாறி மாறி சென்று வாழ்க்கையை நடத்தியிருக்கின்றன. இவற்றுக்கு நான்கு கால்களும் இருந்திருக்கின்றன.
கடலில் கணக்கற்ற இரை உயிர்கள் அப்போது இருந்ததால் ஒரு கட்டத்தில், இந்த திமிங்கிலங்கள், இரைக்காக முழுக்க முழுக்க கடலு யிர்களாகவே ஆகி தங்கி விட்டன. முன் கால்கள் மெல்ல மெல்ல மறைந்து தூவிகளாகி விட்டன. நீண்டுகிடந்த வால், தட்டையாகி நீந்து வதற்கு ஏற்றபடி திமிங்கிலத்தின் வாலாகி விட்டது. உடல், நீச்சலுக்கு ஏற்ற வகையில், பரிணாம வளர்ச்சி கண்டது. முதுகில் புதிதாக ஒரு தூவி முளைத்தது. இது நீருக்குள் திமிங்கிலத்தின் சமநிலையை மாறாமல் காத்தது. தேவையற்ற பின்னங்கால்கள் மெல்ல மெல்ல உடலுக்குள் சென்று மறைந்து விட்டன. முகத்தில் இருந்த மூச்சுத்துளை மெல்ல மெல்ல மேலே ஏறி முதுக்குக்குப் போய் விட்டது.
ஆரம்ப கால திமிங்கிலங்களுக்கு உடல்நிறைய முடி இருந்தது. ஆனால் கடலில் நீந்துவதற்கு முடி ஒரு பெரும் தடை. நீரில் நனைந்து முடி பாரமாகி விடும் என்பதால் நாளடைவில் அவை உதிர்ந்து போயின. முடிக்குப் பதிலாக., கடலில் குளிரைத் தாங்க திமிங்கிலங்களின் உடலைச் சுற்றி கொழுப்பு நிறைந்த பிளப்பர்  (Blubber) என்ற படலம் புதிதாக தோன்றியது.
பழங்கால திமிங்கிலங்களுக்கு நிறைய முடி இருந்த நிலையில், பழைய பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்பதற்காக இந்த காலத்தைச் சேர்ந்த சில திமிங்கிலங்களுக்கும் முகவாய்க் கட்டையில் சிறிது முடி இப்போதும் உண்டு. அதுபோல, கருமுட்டையில் உள்ள திமிங்கில குட்டிகளுக்கு இப்போதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் காணப்படும்.
பழங்கால திமிங்கிலத்தின் கைகளே இப்போது தூவிகளாகி விட்ட நிலையில், இப்போதுள்ள திமிங்கிலத்தின் தூவியை ஆராய்ந்தால் அதற்குள்ளே மனிதக் கைகளைப் போல விரல்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆரம்பகால திமிங்கிலம் காலில் விரல்களுடன் இருந்தது என்பதற்கு இது ஓர் ஆதாரம். அதேப்போல திமிங்கிலத்தின் எலும்புக் கூட்டில் இன்னும்கூட இடுப்பெலும்பின் எஞ்சிய ஒரு மீதத் துண்டு உண்டு.
திமிங்கிலம் ஒருகாலத்தில் நிலத்தில் வாழும் போது எப்படி இருந்திருக்கும்? இதற்கு கருவில் உள்ள இன்றைய குட்டி திமிங்கிலங்களே உயிர்ச்சான்று. இன்னும் பிறக்காத திமிங்கிலக்குட்டிகள் கருவில் இருக்கும் போது அவற்றின் ஆதி கால முன்னோர்களைப் போலவே இருக்கும். அத்துடன் அவற்றுக்கு நான்கு சிறு கால்களும்(!) இருக்கும். பிறப்பதற்கு முன் இவை மறைந்துவிடும்.
கருவில் இருக்கும்போது திமிங்கிலக் குட்டியின் மூச்சுத்துளை நம்மைப்போல அதன் முகத்தில்தான் இருக்கும். குட்டி கருவில் வளர வளர இந்த மூச்சுத்துளை மெதுவாக மேலேறி முதுகுக்குப் போய்விடும்.
திமிங்கிலம் தற்போது தரை வாழ் உயிர்களாக உள்ள நீர்யானை, பசு போன்றவற்றுக்கு உறவுக்கார உயிர் என்றால் அது வியப்பான ஒரு செய்திதானே?

No comments :

Post a Comment