Saturday 15 December 2018


திமிங்கில ‘அம்மாக்கள்’

நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில் திமிங் கிலக் குட்டி என்ற பதிவு ஏற்கெனவே உண்டு. அது போதுமா? போதாது இல்லையா? ஆகவே, திமிங்கில அம்மாக்கள் என்ற புதிய தகவலை இப்போது பதிவிடலாம்.
திமிங்கிலங்களில் கருவுற்ற பெண் திமிங் கிலங்கள், அவற்றின் கர்ப்பக் காலத்தில் ஆர்ட்டிக் அல்லது அண்டார்டிக் போன்ற வட, தென் துருவக் கடல்களில் சுற்றித் திரியும். இங்கு அதிக இரையை உண்டு, குட்டியீனுவதற்கு தோதாக தனது உடலை அது வலுப்படுத்திக் கொள்ளும்.
கருவுற்ற திமிங்கிலம் பின்னர் வெப்பக்கடல்களுக்கு இடம்பெயரும். திமிங்கிலம் அதன் குட்டியை ஈனுவதற்கு பொருத்தமான இடம் வெப்பக்கடல்தான்.
வெப்பக்கடல்களில் இரை குறைவு என்றாலும், அங்கே கொன்றுண்ணிகளால் ஏற்படும் ஆபத்தும் குறைவு. வெப்பக்கடல்களில்தான் திமிங்கிலக் குட்டி பாதுகாப்பாக வாழ முடியும். குட்டித் திமிங்கிலம் வளரவும், நீந்தப் பழகவும் சரியான இடம் வெப்பக் கடல்தான்.
எனவே திமிங்கிலங்களில், குறிப்பாக கூனல்முதுகுத் திமிங்கிலம் எனப்படும் Humpback திமிங்கிலங்களில், 60 விழுக்காடு திமிங்கிலங்கள், வடதுருவப் பகுதிகளில் ஒன்றான அலாஸ்காவில் இருந்து, குட்டி ஈனுவதற்காக மூவாயிரம் மைல்களைக் கடந்து ஹவாய்த்தீவுப் பகுதிக்கு வந்து சேரும்.
அதுபோல, தெற்கத்தி ரைட் திமிங்கிலங்கள், தென்துருவமான அண்டார்டிக் கடலில் இருந்து, குட்டி ஈனுவதற்காக ஆஸ்திரேலியாவின் வடக்கே, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வந்து சேரும்.
இப்படி வயிற்றில் குட்டியுடன் வெப்பக்கடல் பகுதிக்கு வந்துசேரும் பெண் திமிங்கிலம், அங்கே குட்டியீனும். யானைகளைப் போலவே திமிங்கிலங்களும் ஒரே ஈற்றில், ஒரேயொரு குட்டியை ஈனுவதுதான் வழக்கம்.
திமிங்கில குட்டி பிறந்தவுடன் அது கடல்மட்டத்துக்கு வந்து மூச்சு எடுக்க தாய்த் திமிங்கிலம் உதவும். திமிங்கிலக் குட்டியின் நுரையீரல் சிறியது. எனவே 3 அல்லது 4 நிமிடங்களுக்கு ஒருமுறை அது நீர்மேல் வந்து மூச்சு எடுத்தாக வேண்டும். அப்படி அடிக்கடி வந்து மூச்செடுக்க தாய்த் திமிங்கிலம் உதவும்.
திமிங்கிலக் குட்டிக்கு மென்மையான நாக்கு என்பதால், அதனால் தாய் தரும் பாலை சப்பிக் குடிக்க முடியாது. எனவே தாய்த்திமிங்கிலம் நேரடியாக அதன் பாலை குட்டியின் வாய்க்குள் பீய்ச்சியடிக்கும். தாய்த் திமிங்கிலம் நாளொன்றுக்கு 400 லிட்டர் வரை பால் புகட்டும். திமிங்கில பாலில் 40 விழுக்காடு கொழுப்பு இருப்பதால் குட்டி மிகவேகமாக வளரும்.
கூனல் முதுகுத் திமிங்கிலங்கள் எப்போதும் குட்டியைப் பிரியாமல் திரியும். வெப்பக் கடல்களில் இரை குறைவு என்பதுடன் குட்டிக்கு பாலூட்டும் கடமை வேறு இருப்பதால் அந்த காலகட்டங்களில்  தாய்த் திமிங்கிலம் பெரிதாக உண்ணாது. பல மாதங்களாக இப்படி உண்ணாநோன்பு இருப்பதால் தாய்த் திமிங்கிலங்களின் உடல் வற்றிப் போகும்.
எடுத்துக்காட்டாக, தெற்கத்தி ரைட் திமிங்கிலங்கள் பாலூட்டும் காலத்தில் 8 டன் வரை எடைகுறைந்து போகும். ‘பாலூட்டும் அன்னை நடமாடும் தெய்வம்’ என்பது திமிங்கிலத்தைப் பொறுத்தவரை மிகச்சரியானது.
புதிதாகப் பிறந்த திமிங்கிலக் குட்டி 12 முதல் 15 அடி நீளமும், 1 முதல் 2 டன் எடையும் இருக்கும். முதல் ஆண்டில் பத்து மீட்டர் நீளம் வரை குட்டி வளரும்.
குட்டி சற்று வளரும்போது, தாய்த் திமிங்கிலம் இரை தேடி ஆழ்கடலில் மூழ்க வேண்டியிருந்தால், குட்டியை மற்றொரு பெண் திமிங்கிலத்தின் பொறுப்பில் விட்டு விட்டுச் செல்லும். காரணம், குட்டிகளால் அதிக ஆழத்துக்கு முக்குளிக்க முடியாது.
ஆனால் மறந்தும் கூட ஒரு தாய்த்திமிங்கிலம், மற்ற திமிங்கிலங்களின் குட்டி களுக்கு பாலூட்டுவதை ஒருபோதும் விரும்பாது. ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற தமிழ்ப்பழமொழியை தாய்த் திமிங்கிலம் ஏற்கவும் ஏற்காது.
குட்டித் திமிங்கிலத்துடன் மிக மெல்லிய குரலில் தாய்த்திமிங்கிலம் உரையாடும். அதிக சத்தமாக உரையாடினால், அது கொன்றுண்ணி களான கருங்குழவி ஓங்கல்களுக்கு (Killer Whale) கேட்டு அவை வந்து விடலாம் என்பதால், இப்படி மெல்லிய குரலில் உரையாடும்.
பிற ஆண் திமிங்கிலங்கள் குட்டியை நெருங்கி னால் பெண் திமிங்கிலம் அவற்றைத் தாக்கி விரட்டி, குட்டியைக் காப்பாற்றும்.
குட்டி வளர்ந்து, நீந்தக் கற்றுக்கொண்டு, நெடும்பயணத்துக்குத் தயாராகி விட்டால் குட்டியை அழைத்துக் கொண்டு துருவக்கடல் பகுதிக்கு தாய்த் திமிங்கிலம் இடம் பெயரும். அங்கு செல்வதற்கான வலசைப் பாதைகளை குட்டிக்குக் கற்றுத்தரும்,
குளிர்க்கடல்களில் குளிரைத் தாங்க வசதியாக இப்போது குட்டியின் உடலைச் சுற்றி பிளப்பர் (Blubber) எனப்படும் எண்ணெய்க் கொழுப்புப் படலம் உருவாகி இருக்கும்.
துருவப் பனிக்கடல் பகுதிகளில் நன்கு இரையுண்டுவிட்டு ஓராண்டில் குட்டியுடன் தாய் மீண்டும் வெப்பக்கடலுக்குத் திரும்பும். வெப்பக்கடற்பகுதிக்கு அது மீண்டும் வரும்போது குட்டி வளர்ந்திருக்கும். இப்போது குட்டியை தாய் பிரியும் காலம்.
கூனல்முதுக்குத் திமிங்கிலக் குட்டிகள் பிறக்கும் போது வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். அவை வளர வளர கருப்பு நிறமாக மாறும். 3 ஆண்டுகளில் குட்டியின் வாலில் அதை அடையாளம் காண உதவும் குறியீடுகள் தோன்றும். அப்படி குறியீடுகள் தோன்றினால் அது வளர்ந்த திமிங்கிலமாகி விட்டது என்பது பொருள்.
இப்போது தாய்த் திமிங்கிலம் மீண்டும் பனிக்கடல்களை நோக்கி பயணப்படும் ஆனால், இந்தமுறை குட்டி அதனுடன் வராமல் தனித்து வாழத் தொடங்கி யிருக்கும். தாய்த் திமிங்கிலம் ஒருவேளை இப்போது மீண்டும் தாய்மைப்பேறு கூட அடைந்திருக்கலாம். இதையடுத்து காலமென்னும் வட்டம் மீண்டும் சுற்றிச் சுழலத் தொடங்கும்.
அதன்பின் மீண்டும் ஒரு பிறப்பு. உண்ணாநோன்பு, வளர்ப்பு, தாயன்பு.

No comments :

Post a Comment