Monday 3 December 2018


கடலடியில் நடைபயணம்

சிங்கி இறால் எனப்படும் லாப்ஸ்டர் களைப் (Lobster)  பற்றி ஏற்கெனவே நமது வலைப்பூவில் கூறியிருக்கிறோம். கடலடியில் பவழப்பாறைகள், பார் இடுக்குகளில் வாழ்வதால் இந்த வகை இறாலுக்கு கல்இறால் என்ற பெயரும் உள்ளது.
வெப்பப் பகுதி கடல்களில் வாழக்கூடிய உயிர்களான  கல் இறால்களில், Spiny Lobster, (Panulirus argus) கல் இறால்கள், கடலில் வெப்பம் அதிகரிக்கும் போது கரையை நோக்கியும், குளிர் காலத்தில் ஆழ்கடலை நோக்கியம் பேரணியாகச் செல்லும் பழக்கம் உள்ளவை.

கடலில் குளிரும், கொந்தளிப்பும், அதிகரித்தால், கல்இறால்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே வரிசையில் ஆழ்கடல் நோக்கி, கடலடியில் நகர்ந்து ஊர்வலமாகச் செல்லும். இந்த ஒற்றை வரிசையைகியூஎன ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
குளிர்காலம் வந்து வானம் இருண்டு, கூதிர் காலத்தின் முதல் புயற்காற்று வீசும்போது ஆயிரக்கணக்கான கல்இறால்கள் ஒன்று கூடி தங்கள் ஆழ் கடல் பயணத்தைத் தொடங்கி விடும். மேலைநாடுகளில் குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவு தொடங்கியதும் கல்இறால்கள் பயணத்தைத் தொடங்குகின்றன.
காற்று அதிகரித்து, வானம் இருண்டு, மழை விழுந்து, வெப்பநிலை வீழ்ச்சியடையும் போது கடலில் பேரலைகள் ஏற்படும். கல்இறால்கள் வாழும் பார்ப்பகுதிகளில் கடல்நீர் அப்போது கலங்கலாகக் காட்சி தரும். இதுதான் கல் இறால்கள் இடம்பெயர்வதற்காக இயற்கை தரும் சமிக்ஞை.
இந்த காலகட்டத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் திரளும் கல் இறால்கள், முன்னால் இருக்கும் இறாலின் வால்பகுதியில் தனது உணர் கொம்பை வைத்துக் கொள்ளும். சில கல்இறால்கள் முன்னால் உள்ள இறாலின் முதுகு அல்லது வயிற்றுப் பகுதியில் தனது உணர்கொம்பை இருத்திக் கொள்ளும். உணர்கொம்பு இல்லாத, அதை இழந்து விட்ட கல் இறால்கள் தங்களது முன்னங்கால்களை முன்னால் இருக்கும் கல் இறாலின் மீது பதித்துக் கொள்ளும்.
இப்படி, ஒரு வரிசைக்கு ஏறத்தாழ 65 கல்இறால்கள் என்ற அடிப்படை யில் இந்த வலசை ஆரம்பிக்கும். ஒற்றை வரிசையில், கடல்தரை யில், கொந்தளிப்பு இல்லாத ஆழ் கடல் நோக்கி இவை நடைபோடத் தொடங்கும்.
இரு வாரங்களுக்குத் தொடர்ச்சியாக இரவும் பகலும் இந்தப் பயணம் தொடரும். கடல்நீர் கலங்கி, முழுக்க கண் தெரியாவிட்டாலும்கூட கல் இறால்களின் பயணம் தடைபடாது. தொடர்ந்து நீடிக்கும்.
கடல் அருங்காட்சியகங்களில் வாழும் கல்இறால்கள் கூட குளிர்காலத்தில் ஒன்றுகூடி இப்படி ஊர்வலம் செல்ல முயல்வது வியப்பான ஒன்று. அவற்றின் மரபணுக்களில் இந்த வலசை பழக்கம் புதைந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
கல்இறால்கள் ஏன் இப்படி நடைபயணம் மேற்கொள்கின்றன என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிர். கடந்து போன பனியுகத்தில் (Ice Age) இருந்து இந்த வலசைப் பழக்கத்தை கல்இறால்கள் கடைபிடிப்பதாக கடல் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
கல்இறால்கள் ஏன் ஒற்றை வரிசையில் ஊர்வலம் போகின்றன? இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. போகும் வழியில் இரை கொல்லி மீன்கள் தாக்கினால் கல்இறால்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இப்படி ஒற்றை வரி ஊர்வலம் செல்கின்றன. தனி கல்இறால் ஒன்று கடலடியில் இப்படி நடந்து சென்றால் அது அதிக திறனை செலவிட வேண்டியிருக்கும். ஆனால், இப்படி ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வதால் ஐம்பது விழுக்காடு வரை திறன் (சக்தி) மீதமாகும். மேலும் குறுகிய நேரத்தில் சற்று அதிக தொலைவு கூட செல்ல முடியும்.
உணர்மீசை கொம்புகளால் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு செல்வதால், கடல் இருண்டாலும் கூட ஒவ்வொரு கல்இறாலும் தான் இருக்கும் இடத்தை மற்ற கல்இறாலுக்கு உணர்த்த முடியும். இதன்மூலம் கண் தெரியாவிட்டாலும் பயணிக்க முடியும். ஓர் இறால் இருக்கும் இடத்தை மற்றொரு இறாலால் புரிந்து கொள்ள இயலும்.
மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கல் இறால்கள் கடலடியில் ஏன் இப்படி ஆழ்கடலை நோக்கி பயணம் மேற் கொள்கின்றன? இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
குளிர்கால புயல் காற்றில் அடிபடாமல் தப்பிக்க இப்படி குளிர்நிறைந்த ஆழ்கடல் பகுதியை நோக்கி கல்இறால்கள் நகர்வ தாகக் கருதப்படுகிறது. குளிர்காலத்தில் உணவு கொஞ்சமாகவே கிடைக்கும். அந்த காலகட்டத்தில் குளிர்நிறைந்த சூழலில் இருந்தால் அதன்மூலம் பசியைத் தாங்கிக் கொள்ள முடியும். மேலும், அதிகத் திறனை பயன்படுத்தாமல் குறைந்த திறனைப் பயன்படுத்தி உயிர் வாழவும் முடியும். இவை போன்ற காரணங்களை கருதித்தான் கல் இறால்கள் இப்படி குளிர்கால பயணம் செய்வதாக நம்பப்படுகிறது. குளிர்ந்த சூழலில் கருமுட்டைகள் வேகமாக முதிர்ச்சியடையும் என்பதால் பெண் கல்இறால்களுக்கும் ஒருவகையில் இந்த நடைபயணம் உதவு கிறது. 
கல்இறால்களைப் பற்றி இன்னும் பல சுவையான தகவல்கள் உள்ளன. ஈரமும், குளிர்ச்சியும் இருந்தால் கல்இறால்களால் நீருக்கு வெளியிலும் வாழ முடியும். குறிப்பாக செவுள் பகுதியில் ஈரம் இருக்கும் வரை வெளி காற்றை உறிஞ்சி மூச்சுவிட்டு கல்இறால் உயிருடன் இருக்கும். செவுளில் ஈரம் காய்ந்து போனால் கல்இறால் நிலைகுலைந்து இறந்து போகும்.
அதுபோல, கல்இறால்களால் வலியை உணர முடியாது. இவற்றுக்கு மூளை இல்லை எனவும், சரிவர வளராத மூளை கொண்டவை என்றும், கல்இறாலின் மூளை கரைந்து அவ்வப்போது புதிய மூளை உருவாகும் எனவும் பலப்பல கருத்துகள் உள்ளன.
கடலடியில் ஒரு சதுர அங்குலத்துக்கு 100 பவுண்ட் அழுத்தம் நிலவும் இடத்தில் கூட, அந்த அழுத்தத்தை கல்இறால் தாங்கிக் கொண்டு உயிர்வாழும் என்பது இன்னும் புதுமையான தகவல்.

No comments :

Post a Comment