Saturday 18 April 2020

விந்தை உயிரினம் ஓங்கல்

துள்ளி.. துள்ளி.. நீயாடம்மா
கடல்வாழ் பாலூட்டிகளில் ஒன்றான ஓங்கல் எனப்படும் டால்பின் ஒரு விந்தையான உயிரினம். மனிதர்கள் அளவுக்கு அறிவுள்ள விலங்கான ஓங்கல், மனிதர்களோடு மிக நெருங்கிப் பழகக் கூடிய விலங்கு. மனிதர்களின் உணர்வுகளைக்கூட ஓங்கலால் புரிந்து கொள்ள முடியும். கடலில் மூழ்கித் தத்தளித்த மனிதர்களை ஓங்கல்கள் காப்பாற்றி கரைசேர்த்த சில நிகழ்வுகள் உள்ளன.

கடல் கடவுள் நெப்டியுனால் சபிக்கப்பட்ட சில கப்பல் மாலுமிகள்தான் டால்பின்களாக மாறினார்கள் என்று கிரேக்க நாட்டுப் பழங்கதைகள் கூறுகின்றன. கிரேக்க (கிரீஸ்) நாட்டில் டால்பின்களைக் கொன்றால் அது மிகப்பெரிய குற்றம்.

ஒருமுறை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநில கடல்அருங்காட்சியகத்துக்கு ஒரு பெண்மணி போயிருந்தார். அவர் ஓங்கல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, பெண் ஓங்கல் ஒன்று அதன் வாயால் சிறிய கூழாங்கல் ஒன்றை நீருக்கு அடியில் இருந்து பொறுக்கியெடுத்து, அந்த பெண்ணின் வயிற்றின் மீது சரியாக குறிபார்த்து எறிந்தது. அது மிகச்சிறிய கல். எனவே அந்தப் பெண்மணிக்கு வலி எதுவும் ஏற்படவில்லை.

இப்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு சிறிய கல்லை எடுத்து அந்தப் பெண்ணின் வயிற்றைக் குறிபார்த்து ஓங்கல் மென்மையாக எறிந்தது. மூன்றாவது முறையும் இதேப்போல நடந்தது. அந்த கடல்அருங்காட்சியக ஊழியர்களுக்கு கூட ஓங்கல் ஏன் அப்படி செய்கிறது என்பது புரியவில்லை. இதுவரை அது அப்படி நடந்து கொண்டதில்லை. இது என்ன புதுப்பழக்கம் என்று அவர்கள் திகைத்துப் போனார்கள்.
ஆனால் அந்தப் பெண்மணி மட்டும் ஓங்கல் ஏன் அப்படி செய்தது என்பதை புரிந்து கொண்டார். தான், சற்றுமுன் மருத்துவமனைக்குப் போயிருந்ததாகவும், மருத்துவர் தன்னைப் பரிசோதித்துவிட்டு கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதாகவும் அந்தப் பெண்மணி கூறினார். அந்தப் பெண்மணியின் வயிற்றில் புதிதாக உருவாகி இருந்த கருவை ஓங்கல் அறிந்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளத்தான் அந்தப் பெண்மணியின் வயிற்றின் மீது சிறிய கல்லை வீசி விளையாடியிருக்கிறது. அந்த அளவுக்கு ஓங்கல்கள் எனப்படும் டால்பின்கள் அதீத அறிவாற்றலும், விசித்திரமான சக்தியும் உள்ளவை.

சுறாக்களால் 100 மீட்டர் தொலைவில் உள்ள உயிர் ஒன்றின் இதயத் துடிப்பைக்கூட அறிந்து கொள்ள முடியும் என்பார்கள். இதே திறமை ஓங்கல்களுக்கும் உண்டு. ஓங்கல்களால் ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து விட முடியும். கர்ப்பிணி பெண் ஒருவரை கடலில் இடுப்பளவு ஆழத்தில் நிறுத்திவைத்தால் ஓங்கல்கள் வந்து அவரை சூழ்ந்து கொள்ளும் என்றுகூட ஒரு நம்பிக்கை உள்ளது.
இதுபோக, ஓங்கல்களிடம் இன்னும் பல்வேறு வகையான திறமைகள் உள்ளன. ஓங்கல்களால் பேசவும், பாடவும் முடியும். மிகமிகத் தொலைவில் இருந்து தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

விர்..ரென விரைவு நீச்சல்
இது தவிர கடல்கொண்ட தென்னாடான லெமூரியா கண்டம், கடலில் மூழ்கி மறைந்த அட்லாண்டிஸ் கண்டம் போன்ற பழங்கால கண்டங்களைப் பற்றி ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். மூதாதையர்கள் சொன்ன கதைகளை மனிதர்கள் வழி வழியாக தங்கள் சந்ததிகளுக்குக் கடத்துவது போல, ஓங்கல்களும் தங்கள் பரம்பரை அறிவை, வரலாற்றை, வழிவழியாக தங்கள் சந்ததிகளுக்கு கடத்துவதாக அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். கடலில் மூழ்கிய கப்பல்களில் உள்ள புதையல்களைப் பற்றிகூட ஓங்கல்களுக்குத் தெரியும் என்பார்கள். (ஓங்கலுக்கு உடனே Facebook Friend request கொடுத்து விடாதீர்கள்)

அமெரிக்க செவ்விந்தியர்கள், ஓங்கலைவாழ்க்கையின் மூச்சுஎன்று வர்ணிப்பார்கள். ‘உடல் என்னும் யதார்த்தத்தின் வரம்புகளை, பரிமாணங்களை உடைத்தெறியும் ஆற்றல் கொண்டவை ஓங்கல்கள்என்றும் அவர்கள் கூறுவார்கள்.

தமிழகத்தின் தென்கடல் பரதவர்களிடம் ஒரு பழமொழி உண்டு. ‘ஓங்கல் அறியும் உயர்கடலின் ஆழம்என்ற பழமொழி அது. ஓங்கல்களுக்கு இவ்வளவு அறிவும் திறமையும் இருக்கும்போது, ஓங்கல் ஒன்று கப்பல்களுக்கு வழிகாட்டுவது அப்படியொன்றும் அதற்கு பெரிய வேலை இல்லை

Tuesday 7 April 2020


அழகு மீன்களுக்கு ஆபத்து

ஆபத்தின் விளிம்பில் அழகு மீன்கள்
கடலின் மழைக்காடுகள்’ என பவழப்பாறைகளைக் கூறுவார்கள். பவழப்பாறைகள் கடலடி தோட்டங்கள் என்பதுடன் அவை மிகப்பெரிய உயிர்க்கோளங்களும் கூட.உலகின் மொத்த கடல்பரப்பில் பவழப்பாறைகளின் பங்கு வெறும் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவுதான். ஆனால்,கடல் மீன் இனங்களில் இருபத்தைந்து விழுக்காடு மீன் இனங்கள் பழப்பாறைகளில் அல்லது பவழப்பாறைகளை அண்டிய பகுதிகளில்தான் வாழ்கின்றன. இப்போது பவழப்பாறைகளின் முதன்மைத்தன்மை சட்டென உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பவழப்பாறைகளில் சுற்றித்திரியும் அழகிய சிறுமீன்களை உயிருடன் பிடித்து அவற்றை கண்ணாடித் தொட்டிகளில் அலங்கார மீன்களாக வளர்ப்பவர்களுக்கு விற்கும் தொழில் தற்போது உலக அளவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மிகப்பெரிய உணவகங்கள், மருத்துவமனைகள், வணிக அங்காடிகளில், பெரிய பெரிய  கண்ணாடித் தொட்டிகளில் இந்த மீன்கள் உயிருள்ள காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன. பரந்து விரிந்த பவழப்பாறைகளில் நீந்தித் திரிந்த மீன்கள், கண்ணாடித் தொட்டிகளே உலகம் என்று வாழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இப்படி பவழப்பாறை வண்ண மீன்களை உயிருடன் பிடித்து ஏற்றுமதி செய்யலாம் என்பதைக் கண்டுபிடித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ் நாடுதான். பசிபிக் கடல்நாடான பிலிப்பைன்சில், பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிப்பதற்காக சோடியம் சயனைடு என்ற ஆபத்தான பொருளை அந்த நாட்டு நீர்மூழ்கி வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சோடியம் சயனைடு வில்லையை, பீய்ச்சியடிக்கும் வசதியுள்ள ஒரு குப்பியில் இட்டு நீரில் கரைத்து, அந்த குப்பியுடன் இவர்கள் கடலில் இறங்குவார்கள்.
பீய்ச்சப்படுகிறது நச்சுநீர்
வண்ண மீன் ஒன்றைக் கண்டால் அதன்மீது இந்த சோடியம் சயனைடு கலந்த நீரை பீய்ச்சுவார்கள். அந்த நீர் பட்டதும் மீன் ஆடாமல் அசையால் சிலைபோல நிற்கும். அப்போது சிறியவலை அல்லது வெறும் கையால் கூட மீனைப்பிடித்து அதற்கென உள்ள கண்ணாடிப் பாத்திரத்தில் அதை சிறைப்படுத்தி விடுவார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆயிரம் டன் வரை இந்த வகை அலங்கார பார்மீன்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உணவுக்காகப் பிடிக்கப்படும் ஒரு கடல்மீனின் விலையைவிட இந்த அலங்கார பவழப்பாறை மீன்களின் விலை ஐந்து மடங்கு அதிகம். தூண்டில் பயன்படுத்தி அடுத்தடுத்து 2 மீன்களைப் பிடிக்கும் நேரத்தில், நீரில் முக்குளித்து சோடியம் சயனைடைப் பயன்படுத்தி 12 மீன்களை உயிருடன் பிடித்துவிடலாம். ஆகவே, இந்தத் தொழில் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படகுகள் மூலம் திருட்டுத்தனமாகவும் வெளிநாடுகளுக்கு மீன்கள் கடத்தப்படுகின்றன.
சிலவேளைகளில் உயிருள்ள அலங்கார மீன்கள் மட்டுமின்றி களவா (Grouper) போன்ற உண்ணத்தகுந்த பார்மீன்களும் சோடியம் சயனைடு கலந்த நீரைத்தூவி உயிருடன் பிடிக்கப்படுகின்றன. ஓர் உணவுத்தட்டின் அளவுக்கு உள்ள பெரிய உயிருள்ள மீனை சுடச்சுட சமைத்து சீனர்கள் விரும்பி உண்பார்கள், அதற்கு விலையும் அதிகம். இதனால் பார்மீன்களான களவா போன்றவையும் உயிருடன் பிடிக்கப்படுகின்றன.
சோடியம் சயனைடு கலந்த நீரினால் திக்குமுக்காடிப்போய் பிடிபடும் களவா போன்ற மீன்கள் சயனைடு கலந்த நீரை கக்கிவிடும் என்பதால் அதை உண்ணும் மனிதர்களுக்கு சயனைடால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
ஃபைண்டிங் நெமோ படத்தில் ஒரு காட்சி
பவழப்பாறைகளில் வாழும் அலங்கார மீன்களில் 98 விழுக்காடு மீன்களை தொட்டிகளில் வளர்ந்து இனப்பெருக்கம் செய்ய முடியாது. அவை கடலில், அவற்றின் சொந்த உயிர்ச்சூழலில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். எனவே நேரடியாக கடலில் இருந்து அவை அளவுக்கதிகமாகப் பிடிக்கப்படுகின்றன.
கடந்த அரை நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாடு மட்டும் மில்லியன் கிலோ சோடியம் சயனைடை அந்த நாட்டுப் பவழப்பாறைகளில் கலந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. இப்படி சோடியம் சயனைடை கடலில் பீய்ச்சியடிப்பதால் பவழப்பாறைகள், பாசியினங்கள் பெரிய அளவில் பாதிப்படைகின்றன. ஓர் உயிருள்ள மீனை பிடிப்பதற்காகப் பீய்ச்சியடிக்கப்படும் சோடியம் சயனைடால் ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள பவழப்பாறைகள் அழிவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டைப் பின்பற்றி உலக அளவில் பல்வேறு நாடுகள் இப்படி சோடியம் சயனைடைப் பயன்படுத்தி அலங்கார பவழப்பாறை மீன்களை உயிருடன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடல் சூழல்சீர்கேடு அடைந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி வருகிறது.

Sunday 5 April 2020


பெலோரஸ் ஜேக் (Pelorus Jack)
நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் (Cook) நீரிணை என்பார்கள். உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம்.
குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல்.
ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்), கிண்கிணி ஓங்கல், கண்டா ஓங்கல் (Risso), வலவம் ஓங்கல் (Pilot Whale) என ஓங்கல்களில் பலப்பல ரகம். நமது வலைப்பூவைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.
இந்தநிலையில் குக் நீரிணைப்பகுதியில் கப்பல்களுக்கு வழிகாட்டியாக ஒரு கண்டா ஓங்கல் 1888ஆம் ஆண்டு திடீரெனத் தோன்றியது. நியூசிலாந்தின் தலைநகரமான வெலிங்டனில் இருந்து தெற்குத் தீவில் உள்ள நெல்சனுக்குப் பயணம் செய்த பிரிண்டில் என்ற கப்பலுக்கு அது வழிகாட்டியது.
கண்டா ஓங்கல்கள் நியூசிலாந்து கடற்பகுதியில் காணப்படுவதில்லை. 12 என்ற எண்ணிக்கையில் மிகச்சிறிய ஒரு கண்டா ஓங்கல் கூட்டம் மட்டுமே நியூசிலாந்தில் உண்டு. இந்தநிலையில் கலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு வெளிச்சம் போல அந்த கண்டா ஓங்கல் கப்பலுக்கு வழிகாட்டியது. பாறைகளில் கப்பல் மோதிவிடாமல், சரியான வழியைக் காட்டியபடி கப்பலின் கூடவே அது பாந்தமாக வந்தது.
ஏறத்தாழ 13 அடி (4 மீட்டர்) நீளமுள்ள ஓங்கல் அது. வெள்ளையில் சாம்பல் நிற வரிகளுடன் காணப்பட்ட அந்த ஓங்கல் ஆணா பெண்ணா என்பது கூட தெரியவில்லை. ஆனால் கண்டா ஓங்கல்களில் ஆண் ஓங்கல்கள் மட்டுமே 4 மீட்டர் நீளம் வரை வளரும். ஆகவே, இந்த வழிகாட்டி ஓங்கல் ஆண் ஓங்கல்தான் என்ற முடிவுக்கு கப்பல்மாலுமிகள் வந்தார்கள்.
பிரிண்டில் கப்பலுக்கு மட்டுமல்ல, அடுத்த 24 ஆண்டுகளில் நாள்தோறும் இரவும் பகலும் அந்த கண்டா ஓங்கல் அந்த வழியே வரும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஆரம்பித்தது.
அந்த கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack) என்று பெயர் சூட்டப்பட்டது. பெலோரஸ் ஜேக் என்பது ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனத்தின் பெயர். அந்த நடனத்தில் ஆடுபவர்களைப் போலவே நமது கண்டா ஓங்கலும் சுற்றிச்சுழன்று திருநடனம் புரிந்ததால் பெலோரஸ் ஜேக் என்ற பெயர் சூட்டப்பட்டது.
பெலோரஸ் ஜேக், ஒவ்வொரு கப்பலுடன் 20 நிமிடநேரம் கூடவே வந்து வழிகாட்டும். சிலவேளைகளில் குக் நீரிணைப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் பெலோரஸ் ஜேக்குக்காகவே காத்திருக்கும். சில கப்பல் கேப்டன்கள் பெலோரஸ் ஜேக் வராமல் குக் நீரிணையில் பயணப்பட மாட்டார்கள்.
பெலோரஸ் ஜேக் சிலவேளைகளில் கப்பல்களுடன் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை கூட வரும். கப்பலில் இருந்து எழும் அலைகளில் சறுக்கி விளையாடும். ஆனால், குக் நீரிணையில் உள்ள பிரெஞ்சு பாஸ் என்ற பகுதிக்குள் மட்டும் அது நுழையாது. பிரெஞ்சு பாஸ் பகுதி வந்ததும் நின்று கொள்ளும். அங்கிருந்து திரும்பி வரும் கப்பல்களுக்கு மீண்டும் வழிகாட்டும்.
பெலோரஸ் ஜேக்கின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்க நாளிதழ்களில் அதுபற்றி செய்திகள் குவிந்தன. அஞ்சல்அட்டைகளில் பெலோரஸ் ஜேக்கின் படம் இடம்பெற்றது. பெலோரஸ் ஜேக்கைக் காண சுற்றுலாப்பயணிகள் நியூசிலாந்தில் குவியத் தொடங்கினர்.
ஒருமுறை பெங்குவின் என்ற பயணிகள் கப்பலைச் சேர்ந்த குடிகார மாலுமி ஒருவர் பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் கண்டு கடுப்பாகி, கப்பலின் மேற்தளத்தில் இருந்து அதை துப்பாக்கியால் சுட்டார். நல்லவேளை, பெலோரஸ் ஜேக் நீரில் மூழ்கி தப்பி விட்டது. அந்த குடிகார மாலுமியை மடக்கிப்பிடித்த சுற்றுலாப்பயணிகள் கரை வந்து சேர்ந்ததும் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாகப் பரவ, நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றம் கூடி, பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் காப்பாற்ற சட்டம் பிறப்பித்தது. அந்த ஓங்கல் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் 100 பவுண்ட் வரை தண்டம் என்று அரசு அறிவித்தது. உலக அளவில் தனியொரு கடலுயிரை பாதுகாக்க ஒரு நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் பிறப்பித்தது அதுவே முதல்முறை.
இதற்கிடையே இன்னொரு வியப்பூட்டும் சங்கதி நடைபெற்றது. குக் நீரிணைக்குவரும் அனைத்துக் கப்பல்களுக்கும் வழிகாட்டி வந்த பெலோரஸ் ஜேக், தன்னைச் சுட முயன்ற கப்பலான பெங்குவினுக்கு மட்டும் அதன்பிறகு வழிகாட்டவேயில்லை. இந்தநிலையில் ஒருநாள் குக் நீரிணைப் பகுதியில் கடற்பாறையில் மோதி பெங்குவின் கப்பல் உடைந்தது. அதில் 75 பேர் வரை பலியானார்கள்.
இதற்கிடையே பெலோரஸ் ஜேக்குக்கு வயதாகத் தொடங்கியது. அதன் தலை இன்னும் இன்னும் அதிக வெண்மை நிறம் பெறத் தொடங்கியது. கண்டா ஓங்கல்கள் 24 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. இந்தநிலையில், 24 ஆண்டுகள் இடைவிடாமல் வழிகாட்டி பணிபுரிந்த பெலோரஸ் ஜேக், அதன் ஓய்வு வயதை எட்டத் தொடங்கியது.
வயதாகி விட்டதால் அதன் வேகம் குறையத் தொடங்கியது. அதற்கேற்ப நீராவிக் கப்பல்களும் பெலோரஸ் ஜேக்குக்கு ஏற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அதை பின்தொடர ஆரம்பித்தன. இதற்கிடையே தனது பணி தனக்குப்பிறகும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக நாய்ச்சுறா ஒன்றுடன் பெலோரஸ் ஜேக் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாய்ச்சுறாவை தனக்கு மாற்றாக களமிறக்க முயன்றதாகக்கூட ஒரு கதை உண்டு.
எது எப்படியோ? கடைசியாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெலோரஸ் ஜேக் ஒரு கப்பல் மாலுமியின் கண்ணில் பட்டது. அதன்பிறகு அதைக் காணவில்லை. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குக் நீரிணைப்பகுதியில் நங்கூரமிட்டு நின்ற நார்வே நாட்டு திமிங்கில வேட்டைக்கப்பல் ஒன்று பெலோரஸ் ஜேக்கை வேட்டையாடி விட்டதாக நம்பப்பட்டது.
ஆனால், குக் நீரிணை பகுதியில் கடலோர விளக்குகளை பராமரித்து வந்த சார்லி மொய்லர் என்பவர் பெலோரஸ் ஜேக் போன்ற ஒரு கண்டா ஓங்கல் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறினார். அந்த ஓங்கலின் உடல் துணுக்குகளை ஆய்வு செய்ததில் அது 24 முதல் 30 வயதான ஓங்கல் எனத் தெரிய வந்தது. அது பெலோரஸ் ஜேக்கின் உடல்தான். முதுமை காரணமாக பெலோரஸ் ஜேக் இயற்கை மரணம் அடைந்து விட்டது என கருதப்பட்டது.
உலக அளவில் பெலோரஸ் ஜேக்கைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. ஒரு சாக்லெட்டுக்கு பெலோரஸ் ஜேக்கின் பெயர் சூட்டப்பட்டது. நியூசிலாந்தில் பெலோரஸ் ஜேக்கின் மிகப்பெரிய வெண்கலசிலை நிறுவப்பட்டது.
பெலோரஸ் ஜேக் கப்பல்களுக்கு ஒன்றும் வழிகாட்டவில்லை. அது கப்பல்களைக் கண்டால் அருகில் வரும். கப்பலால் உருவாகும் அலைகளைப் பயன்படுத்தி அலைச்சறுக்கு செய்யவே அது கப்பல்களுடன் பயணித்தது என்ற கதையும் உண்டு.
ஆனால், பெலோரஸ் ஜேக் இருந்த வரை குக் நீரிணைப் பகுதியில் அது வழிகாட்டிய எந்த ஒரு கப்பலும் விபத்தில் சிக்கவில்லை. ஆனால், பெலோரஸ் ஜேக்கின் மறைவுக்குப்பிறகு கப்பல் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.