Monday 9 March 2020


கூரல்
கத்தாளை இன மீன்களை ஆங்கிலத்தில் Croaker என்று அழைப்பார்கள். வயிற்றில் உள்ள பள்ளை என்ற காற்றுப்பையை அசைத்து ஒருவகை கரகரப்பொலியை எழுப்புவதால் இந்த வகை மீனுக்கு Croaker என்ற பெயர் வந்து விட்டது.
கத்தாளை மீன்களில் அளக்கத்தாளை, ஆண்டிக் கத்தாளை, ஆனக் கத்தாளை, ஆனவாயன் கத்தாளை, ஓலைக் கத்தாளை, கருங் கத்தாளை, கீறு கத்தாளை, சதைக் கத்தாளை, வரிக் கத்தாளை, மொட்டைக் கத்தாளை என்று பலவகை மீன்கள் உள்ளன.
சரி! கூரல் மீனைப்பற்றித்தானே பேச வந்தோம். ஏன் இப்போது கத்தாளை மீனைப் பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. கூரல் மீன் என்பது ஒருவகை கத்தாளை மீன் என்றே கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் கூரல் மீனை கருந்திட்டு கத்தாளை (Black Spotted Croaker) என்றே அழைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கூரல்களில் மஞ்சள் கூரல் மீன், அளக்கத்தாளை இனத்து மீனாகக் கருதப்படுகிறது. பன்னா மீனும் சிலவேளைகளில் கத்தாளை இனத்துடன் சேர்ந்து கொள்ளப்படும்.
ஆக, கத்தாளை, கூரல், பன்னா ஆகிய மூன்று மீன்களையும் பிரித்தறிந்து பார்ப்பது சற்று கடினம்தான். இந்த குழப்பத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும் விதத்தில் கத்தாளை பன்னா, கரும்பன்னா, கருங்கத்தாளை போன்ற சிலவகை மீன்களின் பெயர்களும் உள்ளன. வரும் நாள்களில் கத்தாளை, கூரல், பன்னா ஆகிய மூன்று மீன்களையும் இனம் பிரித்தறிய நாம் முயற்சிப்போம்.
இப்போது கூரல் மீனைப் பற்றிப் பார்ப்போம். கூரல்களில் வெள்ளைக்கூரல், கருங்கூரல், மஞ்சள் கூரல், கொடுவாய்க் கூரல் போன்ற பல கூரல்கள் உள்ளன. கடலின் மிக விலைமதிப்புள்ள மீன் கூரல் மீன்தான். இந்த மீனை, ‘கடல் தங்கம்என்று அழைப்பார்கள்.
வளர்ந்த கூரல் மீன் 30 கிலோ வரை எடையிருக்கக்கூடியது. ஆண் கூரல் மீனாக இருந்தால் அது 5 முதல் 6 லட்சம் வரை விலைபோக வாய்ப்புள்ளது. பெண் கூரலாக இருந்தால் 1 முதல் 2 லட்சம்.
விலை அதிகம்
கூரல் மீனின் தூவி, அதன் வயிற்றில் உள்ள பள்ளை, தோல், சதை அனைத்துமே விலைமதிப்பு மிக்கவை. கூரல் மீனின் தூவி 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகக் கூடியது. கூரல் மீனின் சதை ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய் வரை விலைபெறக் கூடியது.
கூரல் மீனின் தூவி மருந்து நிறுவனங்களுக்குப்  பயன்படுகிறது. மதுவை சுத்திகரிக்கவும் இது பயனுறுகிறது. கூரல் மீனின் தோலில் கொலுஜன் (Collagen) என்ற பொருள் உள்ளது. இது மருந்தாகவும், ஒப்பனைப் (Cosmetic) பொருள்கள் செய்யவும் பயன்படுகிறது. கூரல் மீனின் தோலை நீரில் கொதிக்க வைத்தால் அதில் இருந்து ஜெலட்டின் தோன்றும். கூரல் மீனின் பள்ளை என்ற உறுப்போ மிகமிக மதிப்பு கூடியது. இது பலவகை மருந்துகள் செய்ய துணைபுரிகிறது.
கூரல் மீனைப்போலவே, ஓலைக்கத்தாளை மீனின் வயிற்றில் உள்ள மெட்டி என்ற பொருளும் மருந்துப் பொருள்கள் உருவாக்கத்துக்கு மிகவும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. 

No comments :

Post a Comment