Friday 27 December 2019


ஜேக்கே இவ் குஸ்தோவ்

ஜேக்கே இவ் குஸ்தோவ்
கடலையும், கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல, கடலியல் சார்ந்த ஆய்வாளர்கள், அறிஞர்களையும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அந்த வரிசையில் முதலாவதாக பிரான்ஸ் நாட்டு கடலியல் ஆய்வாளர்  ஜேக்கே இவ் குஸ்தோவ் (Jacques Yves Cousteau).
மீன்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மீனாகவே மாறி விடுங்கள்என்றவர் ஜேக்கே இவ் குஸ்தோவ். பிறப்பு 1910, ஜூன் 11ஆம்தேதி போர்தோ நகரில். 4 வயதிலேயே கடலில் நீந்தக் கற்றுக்கொண்டர் குஸ்தோவ்.
இவரது குடும்பம் அமெரிக்காவில் 2 ஆண்டுகள் இடம்பெயர்ந்து வாழ்ந்தபிறகு மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்குத் திரும்பி, மத்தியத்தரைக்கடல் துறைமுக நகரமான மர்செயில்ஸ் நகரில் குடிபுகுந்தது. அங்கே கடலில் அடிக்கடி முக்குளித்து வந்தார் குஸ்தோவ். குறும்புகள் இவரது கூடப்பிறந்தது என்பதால் அல்சேஸ் பகுதியில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப்பள்ளி அவருக்கு சிறந்த ஒழுக்கத்தைக் கற்றுத் தந்தது.
1930ம் ஆண்டு, தனது 20ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டு கடற்படையில் இணைந்தார். 1933ல் அலுவராகி 2 ஆண்டுகள் கடற்பயணம் செய்தார். கடற்படை விமான வலவராக (பைலட்) மாற வேண்டும் என்பது அவரது கனவு. அதற்கான பயிற்சிகளை எடுத்து கிட்டத்தட்ட தேறினார். ஆனால், விதி வலியது.
1935ஆம் ஆண்டு அப்பாவின் ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிப் போய் விபத்தில் சிக்கி கைகளை உடைத்துக் கொண்டார். உடல்முழுக்க 12க்கும் மேற்பட்ட இடங்களில் முறிவு. உடலின் ஒருபக்கம் செயலிழந்து விட்டது. ஒருவழியாக உயிர் பிழைத்துக் கொண்டாலும் கடற்படை விமானியாகும் கனவுக்கு அவர்  விடைகொடுக்க வேண்டியதாயிற்று.
உடல் மெல்ல தேறியதும் கைகளுக்கு வலிமை சேர்க்க, கடலில் நீச்சல் பயிற்சிகளை ஆரம்பித்தார். அதுவே கடல் மீதான காதலாக மலர்ந்தது.
நீலக்கடலும், அதில் நீந்தும் மீன் இனங்களும், எண்ணற்ற கடலுயிர்களும் ஜேக்கே இவ் குஸ்தோவின் இதயத்தை ஈர்த்தன. டைவிங் எனப்படும் முக்குளிப்பு அவரது வாழ்க்கையாக மாறியது.
1936ல் சிமோன் மெல்கியா(ர்) (Simone Melchior) என்ற பெண்மணியை இவர் மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி நகைகளை விற்று காலிப்சோ (Calypso) என்ற ஆய்வுக் கப்பலை வாங்க உதவி செய்தார். கப்பல் பயணங்களில் குஸ்தோவின் கூடமாட வந்து சிமோன் உதவினார். கப்பல் மாலுமிகளும் சிமோனை மிகவும் போற்றினர்.
1942ல் நண்பர் மார்ஷலுடன் இணைந்து மத்தியத் தரைக்கடலில் கடலடி கேமரா மூலம் ‘18 அடி ஆழம்என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார் குஸ்தோவ்.
கடலடியில்.....
ஜேக்கே இவ் குஸ்தோவ் நடத்திய கடல் ஆய்வுகள் பலப்பல. ஸ்கூபா எனப்படும் நீர்மூழ்கு தொழிலுக்குப் பயன்படும் கருவிகள் 1926லேயே கண்டுபிடிக்கப்பட்டாலும். அதன்மூலம் மிகக்குறைந்த நேரமே கடலுக்கு அடியில் இருக்க முடியும்.
இந்தநிலையை மாற்றினார் குஸ்தோவ். 1942ல் எமில் கக்கான் என்பவருடன் இணைந்து அக்குவா லங்(Aqua-Lung) என்ற கடல் முக்குளிப்பு கருவியை கூட்டாக கண்டுபிடித்தது வரது மிகப்பெரிய சாதனை. அதன்மூலம் ஸ்கூபா நீரடி நீச்சல் வீரர்கள் முதுகில் உள்ள காற்றுக் குடுவைகளில் இருந்து தேவைப்படும் போது, தேவைப்படும் அளவில் மட்டும் மூச்சுக்காற்றை பெற முடிந்தது. இதனால் நீண்ட நேரம் கடலடியில் ஆய்வுகளை நடத்த முடிந்தது.
இதன்பிறகு உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி வீரராக குஸ்தோவ் மாறினார். இந்த முக்குளிப்பு கருவிகள், ஆய்வுக் கப்பல் மூலம் பல நூறு கடலாய்வுகளை அவரால் நடத்த முடிந்தது.
திமிங்கிலங்கள் கடலில் திசையறிந்து பயணம் செய்ய ஒலியலைகளைப் பயன்படுத்து கின்றன என்பதை உலகுக்கு முதலில் கண்டறிந்து சொன்னவர் குஸ்தோவ்தான்.
இரண்டாம் உலகப்போரின் போது ஜேக்கே இவ் குஸ்தோவின் கப்பல் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. போர் முடிந்தபிறகு மால்டா நாட்டில் பயணிகள் கப்பலாக அது பயன்பட்டது.
1950ல் ஐயர்லாந்து நாட்டு செல்வந்தரான தாமஸ் லோயல் கின்னஸ் இந்த கப்பலை வாங்கினார். ஆனால், கப்பலை மீண்டும் குஸ்தோவுக்கே அவர் குத்தகைக்கு விட்டு விட்டார். ஆண்டுக்கு ஒரு ஃபிராங்க்(!) தந்தால் போதும் என்ற நிபந்தனையுடன்.
1960ல் டைம் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘வருங்காலத்தில் மனிதர்கள் கடலுக்கு அடியில் வாழ்வார்கள்என்றும், ‘மீன்களுக்கு இருப்பதுபோன்ற செவுள்களை (Gills) அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் காலம் தொலைவில் இல்லைஎன்றும் ஜேக்கே இவ் குஸ்தோவ் தெரிவித்தார்.
1985ஆம் ஆண்டு கியூபா நாட்டின் கல்இறால் வளர்ப்பு குறித்து ஆராய கியூபா சென்ற அவர், கியூபா நாட்டு அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை தனது காலிப்சோ (Calypso) ஆய்வுக் கப்பலுக்கு அழைத்து அங்கே விருந்தளித்தார்.
குஸ்தோவ் திரைப்பட ஆவணப்பட உருவாக்கங்களிலும் சிறந்த பங்களிப்பைச் செலுத்தினார். அவர் உருவாக்கிய ஆவணப்படங்கள் 3 முறை ஆஸ்கார் விருதுகளை வென்றன.
ஜேக்கே இவ் குஸ்தோவ்
ஜேக்கே இவ் குஸ்தோவின் கடலடி உலகம்என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் அவர் தயாரித்தார். கடலடியில் இதுவரை காணாத காட்சிகளை இந்த தொடர் மூலம் மக்கள் கண்டு வியக்க முடிந்தது.
1990ல் மனைவி சிமோன் மெல்கியா(ர்) புற்றுநோயால் இறந்து விட, தனக்கு வேறு ஒரு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கும் தகவலை குஸ்தோவ் வெளிப்படுத்தினார். அவரது இரண்டாவது மனைவியின் பெயர் பிரான்சீன் டிரிபிளட்.
1997ல் குஸ்தோ இயற்கை எய்தினார்.
நிலத்தின் மேலே இப்போது நடப்பதெல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியிலும் நடக்கும். புதிய உலகம் ஒன்று உருவாகும்என்றவர் ஜேக்கே இவ் குஸ்தோவ். அவரது கனவு நனவாகும் காலம் தொலைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

No comments :

Post a Comment