கடலடி பூங்கா (பவழப்பாறைகள்) (Coral Reefs)

வரப்புயர நீருயரும் என்பது போல செழு மையான பவழப்பாறைகள்
செழுமையான கடல்களை உரு வாக்குகின்றன. செழுமையான பெருங்கடல் செழுமையான பூவுலகத்தை
உருவாக்கக் கூடியது. நமது பூவுலகத்தின் சுற்றுச்சூழலில் பவழப் பாறைகளின் பங்கு
மிகமிக முதன்மையானது.
பவழப்பாறைகள் என்பவை கடல்வாழ் தாவரங்கள் அல்ல. அவை சொரிமீன்
(Jelly Fish), கடல் சாமந்தி போன்றவற்றுடன் உறவுமுறையுள்ள விலங்குகள். பவழப்பாறைகள்
உயிர்வாழ சூரிய ஒளி மிகவும் தேவை. பல்வேறு உயிர்கள் ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்து
வாழும் ஒரு கூட்டுப்பண்ணை போன்றது பவழப்பாறைகள்.
கடல்வாழ் மீனினங்கள் பலவற்றுக்கு ‘உண்டுஉறைவிட பள்ளி’
பழவப்பாறைகள்கள்தான். உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம் போன்றவற்றுக்காக பலவகை
மீன்கள் பவழப்பாறை களையே நம்பியிருக்கின்றன. குஞ்சு மீன்களுக்கான நாற்றங்கால்
பண்ணை பவழப்பாறைகள் தான். மீன்களின் முட்டைகள் எதிரிகளின் வாயில் சிக்கிவிடாமல் பத்திரமாகப்
பாதுகாக்கப்படும் காப்பகமும் பவழப்பாறைகள்தான்.
மீன்கள் உள்பட பல்வேறு கடல் உயிர்களுக்கான பொழுதுபோக்கு கேளிக்கைப்
பூங்காவாகவும் பவழப்பாறைகள் திகழ்கின்றன.
பவழப்பாறைகளில் பல ஆயிரம் வகைகள் உள்ளன. மான்கொம்பு, மரம்,
விசிறி, தேன்கூடு போன்ற பல வடிவங்களில் கண்கவர் வண்ணங்களில் பவழப்பாறைகள் காட்சி
தருகின்றன.
பவழப்பாறைகளுக்கு சூரியஒளி தேவை என்பதால் 150 அடி ஆழத்துக்கு
அப்பால் பவழப் பாறைகள் காணப்படுவதில்லை. அதுபோல பவழப்பாறைகள் உயிர்வாழ
வெதுவெதுப்பான நீர் தேவை என்பதால் உலக அளவில் நிலப்பரப்புகளின் கிழக்குப்
பக்கங்களில்தான் பவழப் பாறைகள் காணப்படுகின்றன. நிலப்பரப்புகளின் கிழக்குப் பக்கங்கள்
வெதுவெதுப்பான நீர் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்களுக்குப் பயன்படும் பல்வேறு மருந்துகளை உருவாக்க
பவழப்பாறைகள் பயன் படுகின்றன. சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் கரையைத் தாக்காத வண்ணம்
தடுக்கும் பாதுகாப்பு அரணாகவும் பவழப்பாறைகள் திகழ்கின்றன.
பவழப்பாறைகளில் சில ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகள்
பழமையானவை. பவழப்பாறைகளை நாம் அழியாமல் காத்து வளர விட்டால், அதன் மூலம்,
புவிவெப்பமடை வதைத் தடுத்து நிறுத்தலாம். இந்த பூவுலகத்தைக் காக்கலாம்.
No comments :
Post a Comment