Wednesday 6 November 2019


ஜெல்லி பெருகும் காலம்

சொறிமீன்..உயிருள்ள வலை..
உலகம் சுற்றும் வாலிபன்படத்தில் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலேஎன்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘செர்ரி பழத் துக்குத் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலேஎன அந்தப் பாடலின் அடுத்த வரி வரும்.
கொண்டாட்டம் இருக்கட்டும். லில்லி மலருக்குப் பதிலாக ஜெல்லி (Jelly) எனப்படும் சொறிமீன்கள் திடீரென அதிகரித்தால் பெருங்கடல்களுக்கு உண்மையில் அது பெரும் திண்டாட்டமாகி விடும்.
சொறிமீன்களை உங்களுக்குத் தெரியும்தானே? காற்றடைத்த கண்ணாடி பலூன்கள் போல கடல்களில் மிதந்து நீந்தும் அழகான உயிரினம் இது. இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 650 மில்லியன் ஆண்டுகளாக, உலகக் கடல்களில் சொறிமீன்கள் சுகமாக நீந்தி வருகின்றன.
பார்வைக்கு அழகாக இருந்தாலும் சொறிமீன்கள் ஆபத்தானவை. இவற்றின் மேல் உள்ள சின்னச்சின்ன முட்கள் நம்மீது பட்ட மாத்திரத்தில் நம்மை பாதிக்கக் கூடியவை. அவ்வளவு ஏன்? பாக்ஸ் (Box) ஜெல்லி பிஷ் எனப்படும் பெட்டிவடிவ சொறிமீனின் நஞ்சு, நல்லபாம்பின் கடி அளவுக்கு நம்மைப் பாதிக்கக் கூடியது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல நூறு உயிர்களை சொறிமீன்கள் பலிகொண்டு வருன்றன.
கிரேக்க புராணத்தில் வரும் மெடுசா என்ற பெண்ணுக்கு தலைமுடிகள் அனைத்தும் பாம்பு களாக நெளியும் இல்லையா? இந்த மெடுசா என்ற பயங்கர கற்பனைக்கு அடியெடுத்துக் கொடுத்தது ஒரு சொறிமீனாகத்தான் இருக்க வேண்டும்.
கண்ணாடி மேனி..
அதுபோல வெள்ளைக்காரன் தொப்பி என தமிழில் அழைக்கப்படும் போர்த்துக்கேய போர்க் கப்பல் (Portuguese man of War) என்ற சொறிமீன், 165 அடி நீள உணர்விழையைக் கொண்டது. மிகவும் ஆபத்தானது.
பளிங்கு போல, அழகாக ஊடுருவி பார்க்கும் வகையில் இருக்கும் சொறிமீன்கள், பார்வைக்கு நலிவான உயிர்களைப் போலத் தோன்றும். ஆனால், உண்மையில் இவை மிகத்திறன் வாய்ந்த கடல் உயிர்கள்.
இந்த சின்ன உருவத்தை வைத்துக் கொண்டு கடலின் எந்தவிதமான தட்பவெப்ப நிலையையும் இவை தாக்குப்பிடித்து வாழக்கூடியவை. அது அமிலத்தன்மை அல்லது உப்புத் தன்மை அதிகம் வாய்ந்த கடலோ,  ஒளியில்லாத இருள் நிறைந்த கடலோ,  குளிர்ச்சியோ, அதிக வெப்பமோ நிலவும் கடலோ, எதுவாக இருந்தாலும் சரி, சொறிமீன்களுக்கு அதுபற்றி கவலையில்லை. அவை எங்கும் வாழக் கூடிய திறமையுள்ளவை.
உலகின் அனைத்துக் கடல்களிலும் எல்லாவிதமான ஆழங்களிலும் சொறிமீன்கள் வாழ்கின்றன.
சொறிமீன்கள் அவற்றின் முட்டைகளையும் விந்துக்களையும் கடலில் செலுத்தக் கூடியவை. கருவுற்ற முட்டைகள் கடலடியில் அமிழ்ந்து ஜெல்லிக் குஞ்சுகளாக உருவெடுக்கும்.
சொறி மீன்கள் அபாரத் திறமை வாய்ந்தவை. ஒருவகை சொறிமீன் காயம்பட்டால், தன்னை நகலெடுத்து குளோனிங் முறையில் தன்னைப்போல மற்றொரு உயிரை உருவாக்கி மீண்டும் உயிர்த்தெழக் கூடியது.
இத்தனைக்கும் சொறிமீன்கள் மூளையற்ற உயிரினங்கள். உடலில் 95 முதல் 98 விழுக்காடு வரை நீரை மட்டும் கொண்ட உயிர்கள் இவை.
தரைதட்டிய போர்த்துக்கேய போர்க்கப்பல்
சொறிமீன்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கடல்களில் பலகோடியாக பல்கிப் பெருகுவதுண்டு. முன்பு 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொறிமீன்களின் இந்தத் திடீர் பெருக்கம் ஏற்பட்டு வந்தது. ஆனால், இப்போதோ சூழல்சீர்கேடு மற்றும் இதர சில காரணங்களால் அடிக்கடி, ஏன்? ஆண்டுக்கு ஆண்டு கூட சொறிமீன்களின் பெருக்கம் ஏற்பட்டு வருகிறது.
‘பெருவெடிப்பு’ (Big Bang) போல சொறிமீன்கள் இப்படி திடீரென்று பல்கிப் பெருக என்ன காரணம்? ஒன்று அதிக மீன்பிடிப்பு. சொறிமீன்களின் எதிரிகளான சூரை (Tuna) மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதாலும், சொறி மீன்களின் இன்னொரு எதிரிகளான ஆமைகள் தவறு தலாக மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதாலும் சொறி மீன்களின் கொட்டம் கடலில் அதிக மாகிறது.
கவுர் (பிளாங்க்டன்) எனப்படும் நுண்மிதவை உயிர்களை உண்ணும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படுவதால், கவுர்களின் எண்ணிக்கை கடலில் அதிகமாகிறது. இவற்றை அதிக அளவில் சொறிமீன்கள் உண்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
கடலில் உள்ள கவுர் (பிளாங்க்டன்) எனப்படும் நுண்மிதவை உயிர்கள் அளவுக்கு அதிகமானால் கடல்நீரில் உயிர்க்காற்று குறையும். இதனால் மீன்களும், கடல்உயிர்களும் வாழ முடியாத மரணப் பகுதிகள் (Dead Zones) கடலில் உருவாகும். ஆனால், இந்த மரணப் பகுதிகளால் சொறி மீன்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவை எங்கும் வாழக்கூடியவை.
இழுவை வலைகளால் கடலின் பவழங்கள், கடற்பஞ்சு உயிர்கள், கடற்புழுக்கள் என அனைத்தும் கண்டபடி வாரியிழுக்கப்படுவதால், கடலில் சொறிமீன்கள் வாழ்வதற்கான சூழல் உருவாகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சொறிமீன்கள் தங்கள் எண்ணிக்கையை பன் மடங்காக ஆக்கிக் கொள்கின்றன.
பாராசூட் அல்ல...
நெகிழி குப்பைகள் கடலையும், கடல் உயிர்களையும் பாதித்தாலும் சொறிமீன்களுக்கு அவற்றால் பாதிப்பு இல்லை. நெகிழி குப்பைகள் இருக்கும் இடத்தில்தான் சொறிமீன்கள் அதிக அளவில் தங்கி முட்டையிடுகின்றன.
கடலில் ஏற்படும் சொறிமீன்களின் திடீர்ப்பெருக்கம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வலைகளில் அதிக அளவில் சொறிமீன்கள் சிக்குவதால் ஜப்பானில் மீன்பிடிப்புத் தொழில் தடைபடுகிறது. ஸ்வீடன் நாட்டு அணுஉலைகளுக்கு கடல்நீரை ஏற்றும் குழாய்களில் சொறிமீன்கள் சிக்குவதால் அங்கே மின்னுற்பத்தி பாதிக்கப்படுகிறது. பிரான்ஸ் போன்ற மத்தியத்தரைக் கடல் நாடுகளில் உல்லாசக் கடற்கரைகளில் சொறிமீன்கள் ஒதுங்கு வதால் அங்கு மக்கள் நடமாடத தடை விதிக்கப்பட்டு சுற்றுலா வருவாய் குறைகிறது.
சொறிமீன்களை மனிதர்கள் கொல்ல முயன்றால், அவை அதிக அளவில் முட்டைகளையிட்டு விட்டு இறந்து போகும்(!) இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கைபிசைந்து திகைத்து நிற்கும் கடல் ஆய்வாளர்கள், சொறிமீன்களை அதிகஅளவில் உணவாக, மருந்தாகப் பயன் படுத்த முடியுமா என ஆராய்ந்து வருகிறார்கள்.

No comments :

Post a Comment