Friday 15 November 2019


தூண்டில் மீன் (Angler Fish)

தூண்டில் மீன்
ஒரு பூவே இங்கு பூவைத்துக் கொள்கிறது’, ‘ஒரு போண்டாவே இங்கு போண்டா தின்கிறதுஎன்பது மாதிரியான வசனங்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதுபோல, ‘ஒரு மீனே இங்கே தூண்டில் போடுகிறதுஎன்ற வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீன்களுக்கு நாம் தூண்டில் போடுவது இருக்க, மீனே தூண்டில் போட்டு மற்ற மீன்களை கவர்கிறது என்றால் அது வியப்பூட்டும் தகவல்தான் இல்லையா?
ஆம். நீலக்கடல்களில் ஒன்றல்ல, இரண்டல்ல, 200 வகையான தூண்டில் மீன்கள் (Angler Fishes) இருக்கின்றன.
தூண்டில் மீன்களில் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று கரைக்கு அருகில், ஆழம் குறைந்த பகுதிகளில் வாழும் தூண்டில் மீன்கள். இவை தரையோடு தரையாக தவழ்ந்து செல்லக் கூடியவை. மற்ற வகை தூண்டில் மீன்கள் வெளிச்சம் துளிகூட இல்லாத ஆழ்கடல்களில் வாழக் கூடியவை. கடலின் ஆழ்ந்த நடுப்பகுதியில் இவை தடுமாறிய படி நீந்தக்கூடியவை.
இந்த ஆழ்கடல் தூண்டில் மீன்கள், 3 ஆயிரம் அடியில் இருந்து 6 ஆயிரத்து 600 அடி வரை அதாவது ஏறத்தாழ 2 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை காணப்படக்கூடியவை. இப்படி கடல்மேற் பரப்பில் இருந்து கிலோ மீட்டர் கணக்கான ஆழத்தில் சூரியஒளி துளிகூட இருக்காது. உறைய வைக்கும் குளிர் இந்த ஆழத்தில் நிலவும். இதுபோன்ற சூழலில்தான் ஆழ்கடல் தூண்டில் மீன்கள் வாழ்கின்றன.
ஆழ்கடல் தூண்டில் மீன்கள் கூடைப்பந்து போன்ற தடித்த உடலைக் கொண்டவை. கருஞ் சாம்பல் அல்லது கரும்பழுப்பு நிறம் கொண்டவை. இந்த நிறம் காரணமாக இருள்சூழ்ந்த கடலில் மற்ற மீன்களின் கண்களுக்கு இது தென்படாது.
பெரிய தலையும், பிறைநிலா போல விரிந்த வாயும், அந்த வாய்நிறைய கூரிய உள்நோக்கி வளைந்த ஒளிவீசும் கொக்கிப் பற்களும் ஆழ்கடல் தூண்டில் மீன்களின் மற்ற அடையாளங்கள். மென்மையான சதையும், சிறிய கண்களும் இந்த வகை மீன்களின் மற்ற அடையாளங்கள்.
ஆழ்கடல் தூண்டில் மீன்களின் மிக முதன்மை உறுப்பு, அதன் தலைமேல் உள்ள ஒரு கொம்பு போன்ற சதைதான். ஆழ்கடல் தூண்டில் மீனின் முள்நிறைந்த ஒரு முதுகுத்தூவிதான் பரிணாம விதிப்படி காலப்போக்கில் பையப்பைய உருமாறி, இப்படி ஒரு தூண்டில்போன்ற அமைப்பாகியிருக்கிறது.
ஒளிரும் தூண்டில்
சதைப்பற்றுள்ள இந்த கொம்பின்நுனியில் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படும். அதனால் இந்த தூண்டில்கொம்பின் நுனி பளபளவென மின்மினிப்பூச்சியைப் போல ஒளிவிடும். இந்த கொம்பை இடம் வலமாகவோ அல்லது முன்னும்பின்னுமாகவோ எப்படி வேண்டுமானாலும் தூண்டில் மீனால் திருப்ப முடியும். உடலை அசைத்து அதன்மூலம் கொம்புநுனியில் வெளிச் சத்தை ஒளிரச் செய்யவும் முடியும். அணைக்கவும் முடியும்.
தூண்டில் மீனின் இந்த பசுநீல நிற ஒளியை கடலின் அடியில் பார்க்கும் எந்த ஒரு மீனும் அந்த ஒளியால் கவரப்பட்டு தூண்டில் மீனை நெருங்கி வரும். அவற்றின் கவனம் முழுக்க முழுக்க ஒளியின் மீதே இருப்பதால் அருகில் உருமறைத்து வாயைப் பிளந்தபடி ருக்கும் தூண்டில் மீன் இரை மீனின் பார்வையில் படாது.
இப்படி அருகில் வரும் இரைமீன், போதிய அளவுக்கு நெருங்கி வந்ததும் தூண்டில் மீன் திடீர்ப் பாய்ச்சலாகப் பாய்ந்து இரை மீனை அப்படியே விழுங்கிவிடும். பெரிய வாய், பிளந்த தாடைகள், காரணமாக தன்னை விட இருமடங்கு பெரிய இரையைக்கூட தூண்டில் மீன் களால் விழுங்க முடியும். வாய் நிறைய கூரிய கொக்கிப்பற்கள் இருப்பதால் சிக்கிய மீனால் வெளியே தப்பவும் முடியாது.
இந்த வெளிச்ச தூண்டில்,  இரையை இப்படி ஏமாற்றி அருகில் அழைத்து அவற்றை விழுங்கு வதற்கு மட்டுமல்ல இணை சேருவதற்காக ஆண் மீனை அருகில் அழைக்கவும் பயன்படுகிறது.
தூண்டில் மீன்களில் பெண்மீன்களுக்கு மட்டுமே இப்படி ஒளிரும் தூண்டில் உண்டு. அவர்கள் மட்டும்தான் ‘கடலடியில் கைவிளக்கேந்திய காரிகைகள்’. ஆண் மீன்களுக்கு ஒளிரும் தூண்டில் இல்லை.
அதுமட்டுமல்ல, தூண்டில் மீன்களில் பெண்மீன்களை விட ஆண்மீன்கள் மிகவும் சிறியவை. அவற்றின் உருவம் கூட பெண்மீன்களைப் போல இருக்காது. பெண்மீன்கள் அவற்றின் வகைக் கேற்ப ஓரடி முதல் 3.7 அடி நீளம்வரை இருக்கும். ஆனால், ஆண்மீன்கள் அவற்றிலும் சிறியவை. கருப்பு நிற விரல் போன்ற உருவம் கொண்டவை.
ஆண்மீன்களிடம் தூண்டில் இல்லை என்பதால் அவற்றால் சொந்தமாக இரை தேட முடியாது. ஆகவே, பருவம் அடைந்தவுடன் கடலடியில் ஆண்மீன் செய்யும் ஒரே வேலை பெண் மீனைத் தேடுவதுதான். இருட்டில் தேடித்தேடி, பெண்மீனின் தூண்டில் முனை வெளிச்சத்தைக் கண்டு ஆண்மீன் பெண்மீனை நெருங்கும்.
தன் கூரிய சிறுபற்களால் பெண்மீனின் தோலைக்கடித்து ஒருவகை நொதிப்பு ஒன்றை ஆண் மீன் சுரக்கும். அந்த நொதிப்பு, பெண்மீனின் உடலுக்குள் ஊடுருவி, இரு மீன்களையும் ஒட்டி ஒன்றாக்கி விடும். இரு மீன்களின் ரத்தநாளங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்ளும். இதனால் பெண்மீன் உட்கொள்ளும் இரையின் ஊட்டத்தை ஆண்மீனும் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வளவு பெரிய வாய்?...
இப்படி ஒட்டுண்ணி போல உயிர் வாழும் ஆண்மீன் நாளடைவில் தனது கண்களை இழந்து விடும். அதன்பிறகு மெல்ல மெல்ல உள்ளுறுப்புகளையும் ஒவ்வொன்றாக அது இழக்கத் தொடங்கும். முடிவில் சுவையறியும் திறனைத் தவிர வேறு எதுவும் ஆண்மீனுக்கு மிஞ்சாது.
தனித்து இயங்க முடியாமல் பெண்மீனுடன் ஒட்டி உறவாடியபடியே ஆண்மீன் பயணிக்கும். ஒரே வேளையில் 6 ஆண்மீன்களை சுமந்தபடி பயணிக்கும் பெண்மீன்களும் உள்ளன.
சரி! ஆண் மீனின் பயன்தான் என்ன? பெண் மீன் வெளியிடும் முட்டைகளை கருவாக்குதல் மட்டுமே ஆண் மீனின் வேலை. இதற்காக விந்து தொழிற்சாலை போல ஆண்மீன் செயல்படும். கருவாகும் முட்டைகள் மிதந்து கடல்மேற்பரப்புக்கு வந்து கவுர் எனப்படும் மிதக்கும் நுண்ணுயிர்களை உண்ணும். பின்னர் உரிய காலத்தில் கடல்அடிஆழத்தில் அவை மீண்டும் மூழ்கி தூண்டில் மீன்களாக முழுவடிவம் பெறும்.


No comments :

Post a Comment