Sunday 23 June 2019


கோலம் போடும் மீன்!

கடலடியில் கண்கவர் கோலம்!
‘அட! இது யார் பார்த்த வேலை?’
கடலடியில் மணல்தரையில் கண்கவர் கோலம் ஒன்றைப் பார்த்தபோது நீர்மூழ்கி வீரர்கள் கேட்ட கேள்வி இது.
ஜப்பான் பக்கம் அமாமி ஒசிமா தீவு அருகே 20 ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு கடலடி கோலத்தைக் கண்டு முக்குளிப்பு வீரர்கள் வியப்பில் மூழ்கிப் போனார்கள்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து வந்த வேற்றுலக உயிர்கள் எதுவும் இந்த மாதிரி விந்தைக் கோலங்களைப் போட்டிருக்குமோ என்ற கேள்வியும் கடல் ஆய்வாளர்களிடம் எழாமல் இல்லை. அந்த அளவுக்கு நேர்த்தியாக மணல் தரையில் மேடு பள்ளங்கள், வரிகளுடன் ஆறரை அடி அகலத்தில் அந்த கோலம் உருவாக்கப்பட்டிருந்தது.
கடலடியில் எந்த கோலமாவு கோகிலா வந்து இப்படி கோலம் போட்டிருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த வேளையில் இந்த மர்மம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இந்த மாதிரி கோலங்களைப் போடுவது பேத்தா (Puffer fish) இனத்தைச் சேர்ந்த ஒருமீன் என்பது தெரிய வந்தபோது அனைவருக்கும் அப்படியொரு ஆச்சரியம். அதிலும் ஆண் பேத்தா மீன், பெண் மீனைக் கவரத்தான் இப்படி கோலம் போடுகிறது என்பது தெரிய வந்த போது இன்னும் வியப்பு.
இந்த வரிப்பள்ளங்களும், வரிமேடுகளும் உண்மையில் அந்த பேத்தா மீனின் கூடு. இப்படி ஒரு கலக்கலான கூட்டை கட்டியெழுப்ப அந்த மீனுக்கு பத்து நாள்கள் வரை ஆகும்.
வெறும் ஐந்தங்குல நீளம் உள்ள ஒரு மீன், கடலடி குருத்து மணலில் தன்னுடைய உடலையே கருவியாக்கி, இப்படி சின்னஞ்சிறிய சிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும் ஏற்படுத்துகிறது என்றால் அது வியப்புதானே?
கடலடி கோலக் கலைஞர்!
சரி. வீடு உருவாகி விட்டது. வீடு என்றால் அலங்காரப் பொருள்கள் வேண்டாமா? அதனால், இந்த கோலத்தின் வெளிவட்ட உச்சிகளில் சின்னஞ்சிறிய சிப்பிகள், பவழப்பாறைத் துண்டுகளை அந்த மீன் அலங்காரத்துக்காக வைக்கிறது.
இப்போது ஏதாவது ஒரு பெண் மீன் வந்து அழகான இந்தக் கூட்டைப் பார்வையிடும். அப்போது ஆண்மீன் வட்டக்கோலத்தின் உள்வட்டத்தில் இருந்தபடி மணலைக்கிளறி பெண் மீனைக் கவர முயற்சிக்கும். பெண் மீனுக்கு வீடு பிடித்து விட்டால் நடுப்பகுதியில் வந்து அது முட்டைகளையிடும்.
சரி! எதை வைத்து ஒரு கூடு சிறந்த கூடு என்று பெண் மீன் முடிவு செய்கிறது? கூட்டின் அழகிய வளைவு நெளிவுகள், அலங்காரப் பொருள்களை விட கூட்டின் அகலமே பெண் மீனை அதிகம் கவருகிறது. பெரிய அளவில் இப்படி கோலமிட்டு கூடு கட்டும் ஆண் மீன் பலமான திறமை வாய்ந்த மீனாகவே இருக்கும் என பெண் மீன் நம்புகிறது.
பெண் மீன் இடும் முட்டைகளில் இருந்து 6 நாள்களில் குஞ்சுகள் பொரித்து வெளிவரும்.
பெண் மீன் ஒருவேளை முட்டையிட்டு விட்டு தன்பாட்டில் போய்விட்டால், அதிலிருந்து வெளிவரும் குஞ்சுகளைப் பாதுகாப்பது இனி ஆண்மீனின் வேலை.
அதன்பின் ஆண்மீன் மீண்டும் பெண் மீனைக் கவர வேறு ஓரிடத்தில் இதுபோல கடலடி கண்கவர் கைவண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிடும்.
ஏன் அந்த மீன் பழைய கோலத்தையே புதுப்பிப்பதில்லை? இது நல்ல கேள்விதான். ஆனால் அந்தக் கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. அந்த மீனைத்தான் கேட்க வேண்டும்.

No comments :

Post a Comment