அறிவார்ந்த மொழி

தன்னைச் சூழ உள்ள உயிர்களுக்கும், இயற்கைக்கும் தமிழர்கள்
சூட்டியுள்ள பெயர்களே நம் தமிழ் மொழி, அறிவார்ந்த மொழி என்பதற்கான ஆதாரங்கள்.
எடுத்துக்காட்டாக Basking Shark எனப்படும் மேய்ச்சல் சுறாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கு அடுத்தபடி மீன்களில் மிகப்பெரிய
மீன் மேய்ச்சல் சுறா. இது எப்போதும் கடல்
மேற்பரப்பிலேயே, அலைந்து திரிந்து சூரிய ஒளியில் குளிப்பதாக நினைத்து,
ஆங்கிலத்தில் இதற்கு Basking shark என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அடுத்தபடியாக பெருஞ்சுறா எனப்படும் White shark. பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறம். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறம். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி
மட்டுமே அழுக்கு கலந்த வெள்ளை நிறமாகத் திகழும். ஆனால்,
ஆங்கிலத்தில் ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாமல் இந்த சுறாவுக்கு ‘வெள்ளைச் சுறா‘ என்று
பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழிலோ இது ‘பெருஞ்சுறா’ என மிகப்பொருத்தமாக
பெயர் பெற்றுள்ளது. கொன்றுண்ணி சுறாக்களில் மிகப்பெரியது என்பதுடன்,
கடலில், இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும்
பெருஞ்சுறாதான் என்பதால் பெருஞ்சுறா என்ற பெயரே இதற்கு சாலப்பொருத்தமானது.
வடமீன் எனப்படும் துருவ விண்மீன் (Polaris) நமது பூவுலக
உருண்டையில் வட துருவத்துக்கு நேர் மேலே உள்ளது. இந்த விண்மீன் இடம்விட்டு இடம் மாறுவதில்லை.
இது உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.
இரவு முழுவதும் இந்த விண்மீனை அதன் இடத்திலேயே பார்க்கலாம்.
வடவிண்மீன், ஆணியடித்தது போல அசையாமல் நிற்க, அதைச்சுற்றியுள்ள
மற்ற விண்மீன்கள் வடவிண்மீனைச் சுற்றிச் சுழல்வது
போல தோன்றும்.
புவிக்கோளம் அதன் அச்சில் சுழல்வதால் இந்த நிலை.
மத்திய ஆசியாவில் வாழும், கசாக் (Kazakh) இன மக்கள்,
வடவிண்மீனை ஒரு கம்பமாகவும், அதைச் சூழ உள்ள சிறுகரடி, பெருங்கரடி கூட்ட விண்மீன்களை
அந்த கம்பத்தில் கட்டப்பட்ட ஆடுகளாகவும் கருதுகிறார்கள். வானத்தில் புல் மேய்ந்தபடி
இந்த ஆடுகள், வடமீன் என்னும் கம்பத்தைச் சுற்றி வருவதாக கசாக்கிய கதைகள் கூறுகின்றன.
இந்த வடமீன் எனப்படும் துருவத் தாரகைக்கு உலகம் முழுக்க
பலப்பல பெயர்கள். பழங்கால பினிசிய மாலுமிகள், இதை கப்பல் வெள்ளி, வழிகாட்டி வெள்ளி,
கடலின் வெள்ளி (Stella Maris) என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். பினிசிய வெள்ளி என்ற
பெயர் கூட இதற்கு உண்டு.
ஆனால், இந்த வடவிண்மீனுக்கு தென்தமிழகத்தின் பரதவர்கள்
சூட்டியிருக்கும் பெயர் ‘இருப்பு வெள்ளி‘ இருந்த இடத்தில் இருந்து அசையாமல் நிற்கும்
ஒருவிண்மீனுக்கு இதைவிட பொருத்தமாக வேறு என்ன பெயர் சூட்டிவிட முடியும்? இதனால்தான்
சொல்கிறேன் தமிழ் அறிவார்ந்த மொழி என்று.
No comments :
Post a Comment