Wednesday 14 June 2017

சொறிமீன் (Jellyfish)

சொறிமீன், இழுதுமீன் என்றெல்லாம் அழைக்கப்படும் சொறிமீன்களில் மொத்தம் 3 ஆயிரம் வகைகள். சொறி மீனின் உடல்முழுக்க 90 விழுக்காடு தண்ணீர்தான். மூளை, இதயம், கண்கள், எலும்பு.. இப்படி எதுவுமே இல்லாத இந்த விந்தை உயிரினம், 650 மில்லியன் ஆண்டுகளாகக் உலகக்கடல்களில் உலா வருகிறது.
பெருங்கடல்களின் வளத்தைச் சுட்டிக்காட்டும் ஒர் அரிய குறியீடு இந்த சொறிமீன்கள். கடலின் இவற்றின் பெருக்கம், சூழல் சீர்கேட்டைச் சுட்டிக் காட்டுகிறது.
கடலில் வந்து சேரும் ஆலைக்கழிவு நீரால் வகைதொகையின்றி சொறிமீன்கள் பெருகுகின்றன. அதிக மீன்பிடிப்பும், சொறிமீன்களின் திடீர் பெருக்கத்துக்குக் காரணமாகிறது.
ஒரு சொறிமீனுக்கு ஏறத்தாழ 800 சிறுசுணை முட்கள் இருக்கலாம். நஞ்சுள்ள சிறு ஈட்டிகள் போன்றவை இந்த சுணைமுட்கள். சொறி இனங்கள் மொத்தம் 3 ஆயிரம் என்றாலும், அதில் 70 வகை சொறிமீன்களே கொட்டக்கூடியவை.
‘கடலில் நீந்தி வரும் ஆவிகள்‘ என்ற பெயர் சொறிமீன்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியவை. காரணம். இறந்து கரையொதுங்கிய பிறகும், சொறிமீன்களின் சுணைமுட்கள் மனிதர்களுக்குத் தீங்கு இழைக்கக்கூடியவை.
சொறிமீன் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருவர் உடனே செய்ய வேண்டியதென்ன? சொறிமீனால் ஏற்பட்ட காயப் பகுதியை கடல்நீரில் அலசுவது சரியாகாது. இதனால் சொறிமீன் கொட்டிய பகுதி இன்னும் பரவி பெரிதாகலாம். காயப்பகுதி மீது மண்ணைத் தேய்ப்பதும் சரியாகாது. இதனால்,சுணைமுட்களில் உள்ள நஞ்சு இன்னும் ஆழமாக உடலுக்குள் செலுத்தப்படலாம்.
சொறிமீன் தாக்கிய இடத்தில் சிறுநீர் பெய்வது தொன்று தொட்டுள்ள பழக்கம். சிறுநீர், சொறிமீனின் சுணை முட்களை அகற்ற பயன்படும். சிறுநீரில் உள்ள அமோனியா ஒருவகை மருந்தாகப் பயன்படுகிறது.

ஆனால், சிறுநீரைக் காட்டிலும் நல்லது, புளிக்காடி எனப்படும் வினிகரில் 
சொறிமீனால் ஏற்பட்ட காயத்தை அலசுவதுதான். இதன்மூலம்
சுணைமுட்களைச் செயல்இழக்கச் செய்யலாம். பிறகு சிறிய முள்வாங்கியால் முட்களை அகற்றலாம். காயம்பட்ட இடத்தில் சூடுகாட்டுவதும் நல்லதே.

No comments :

Post a Comment