Wednesday 14 June 2017

சுறாப்பற்கள்

சுறா, உழுவை, திருக்கை போன்றவை குருத்தெலும்பு (Cartilage) மீன்கள். தமிழில் குருத்தெலும்பை ‘கசியிழையம்‘ என்றும் அழைப்பார்கள்.
இந்த குருத்தெலும்புகள் உறுதியானவை. அதேவேளையில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. அம்மணி உழுவை, மேய்ச்சல் சுறா, பெருஞ்சுறா போன்ற சுறா இனமீன்களும், ஆனைத்திருக்கை போன்ற திருக்கை வகை மீன்களும் மிகப்பெரிய அளவில் வளர அவற்றின் குருத்தெலும்புகளும் ஒருவகையில் காரணம்.
நமது பற்கள், தாடை எலும்பில் உள்ள பற்குழிகளுக்குள் (Soket) புதைத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சுறாக்கள் குருத்தெலும்பு மீன்கள் என்பதால், அவற்றுக்கு நம்மைப்போல பற்குழிகளோ அல்லது பற்கூடுகளோ கிடையாது. பற்குழிக்குள் பல்லைப் பதித்துவைத்திருக்கும் உயிர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு பல் விழுந்தால் மீண்டும் முளைக்காது.
ஆனால், குருத்தெலும்பு மீன்களான சுறாவுக்கும், திருக்கைக்கும், வாழ்நாள் முழுவதும் பற்கள் விழுந்து விழுந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால், சில சுறாக்கள் அவற்றின் வாழ்நாளில் முப்பதாயிரம் பற்களை இழந்து மீண்டும் அவற்றைப் பெறக்கூடியவை.
சுறாப் பற்கள் வெள்ளை நிறமானவை அல்ல. இவற்றை ஒருவித வண்டல் போன்ற படிவு சூழ்ந்திருக்கும். உயிர்க்காற்றையும், பாக்டீரியா எனப்படும் நுண்கிருமிகளையும் இந்த படிவு, பற்களுக்குள் அண்ட விடாது. போதாக்குறைக்கு ஃபுளோரைடு வேறு சுறா பற்களைச் சூழ்ந்திருப்பதால் பல் சொத்தை என்ற பேச்சுக்கே சுறாக்களிடம் இடமில்லை.
சுறாக்கள் பொதுவாக வாரத்துக்கு ஒரு பல்லை இழக்கக் கூடியவை. இப்படி பற்கள் விழுவதால் சுறா பொக்கைவாயாக மாற எந்த வாய்ப்பும் இல்லை. காரணம், சுறா வாயில் 15 முதல் 50 அடுக்குகள் வரை பற்கள் இருப்பதால், ஒரு பல்லை சுறா இழந்தால்கூட, ஒரே நாளில் மற்றொரு பல் ஓடி வந்து அதன் இடத்தில் உட்கார்ந்து இழப்பை ஈடுகட்டி விடும்.

பழைய பல்லின் இடத்தைப் புதிய பல் பிடித்து விடும். ஆகவே எப்போதும் வாய் நிறைய பற்களாக ‘புன்னகை மன்னனாகவே‘  சுறா காணப்படும். பலநூற்றாண்டு காலமாக சுறாக்கள் இப்படி பற்களை இழந்து வருவதால், கடலடியில் கணக்கற்ற சுறாப் பற்கள் குவிந்து கிடக்கும்.

No comments :

Post a Comment