Monday 27 March 2017

கடல் அட்டை

எகினோடேர் (Echinoderms) என்ற சொல்லுக்கு தமிழில் முட்தோலி என்று பெயர். முட்தோலிகளில் மொத்தம் 6 ஆயிரம் வகைகள். மூரை (Sea urchin), உடுமீன் எனப்படும் நட்சத்திர மீன், கடல்அட்டை எல்லாமே இந்த முட்தோலி என்ற வகைப்பாட்டில் அடங்கக் கூடியவை. 6 ஆயிரம் வகை முட்தோலிகளில் 900 முதல் 1250 வகை கடல்அட்டைகளும் அடக்கம்.
கடல் அட்டைகள் நீண்ட குழாய் போன்ற உடல் கொண்டவை. இவற்றில் சில 2 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். மிகப்பெரியது மூன்றடி நீளம் வரை இருக்கலாம். தொலி (Leather) போன்ற தோல் (Skin) கொண்ட அமைதியான கடல் உயிரினம் இது. கடல் அட்டையை கையில் எடுத்தால் பிசுபிசுப்பான ஒரு திரவத்தை அது கக்கும். குடல் உள்பட உடலின் உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் உண்ண வரும் எதிரிக்கு அன்பாக அள்ளித்தரும் தரும் ஓர் உயிரினம் இது.
இப்படி குடல் போன்றவற்றை கக்கி, உடலுறுப்பு தானம் செய்யும் கடல் அட்டைக்கு, ஒன்றரை முதல் 5 வாரங்களில் இந்த உள்ளுறுப்புகள் மீண்டும் வளர்ந்து விடும். 
கடல் அட்டைகள் கறுப்பு, நீலம், பச்சை, பழுப்பு என பல தனித்தனி வண்ணங்கள் கொண்டவை. எதிரியிடம் சிக்கினால் குடல் விலக்கம் செய்யும் அறவழி கடல் அட்டைகள் ஒருபுறம் இருக்க, எதிரிகளை எதிர்கொண்டால் உடலை முரடாக்கி, விறைப்பாகி முரண்டு பிடித்து, அதன்மூலம் உண்ணப்படாமல் தப்பிக்கும் கடல் அட்டைகளும் உண்டு. உடலை விறைப்பாக்கியோ, தளர்த்தியோ பாறை இடுக்குகளில் இவை ஒளிந்து கொள்ளவும் செய்யும். தன் உடல் அமைப்பையும் மாற்றிக் கொள்ளும்.
கடல் அட்டை என்பது ஒருவகை விலங்குதான். இது காய்கறி அல்ல. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல, கடலடி மணலில் புதைந்தும் புதையாமலும் இருப்பது கடல் அட்டைகளின் பழக்கம். கடலில் சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பம் தாக்காமல் இருக்க இது மணலை தன்மேல் இட்டு மூடிக்கொள்ளும்.
கடல் மணலில் உள்ள நுண்சத்துகளும், அழுகிய பொருள்களுமே கடல் அட்டைகளின் உணவு. மணலைத்தின்று அதில் உள்ள நுண்சத்துகளை ஈர்த்து, இப்படி சுத்திகரிக்கப்பட்ட மணலை, சேமியா போன்ற இழையாக கடல் அட்டை வெளியே தள்ளும். கடல்அட்டை இப்படி வெளித்தள்ளும் மணல், தூய குருத்து மணல் ஆகும்.
பலகாலம் உணவின்றி உண்ணாநோன்பு இருந்து உடல் மெலிந்து போகும் கடல் அட்டைகளும் உண்டு.
கடல் அட்டையின் ஒரு முனையில் வாய். மறுமுனையில் மலத்துளை. மூளையற்ற உயிரினமான கடல்அட்டை, மலத்துளை வழியாக மூச்சுவிடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இனி கடல் அட்டைகளின் சில வகைகளைப் பார்ப்போம்…
குச்சு அட்டை : தொட்டவுடன் புதுமணப்பெண் போல கொழகொழவென துவண்டுவிடக்கூடியது குச்சு அட்டை. மனிதர்கள் இதை உண்ண மாட்டார்கள்.
நூல்அட்டை: மஞ்சளும், மரப்பட்டை நிறமும் (கூடவே கொஞ்சம் காபி) கலந்த நிறமுடைய அட்டை இது. அதிகாலை நேரம் கடல் வற்றிக்கிடக்கும் போது குறிப்பிட்ட ஒரு பாதையில் இந்த அட்டைகளைத் தேடிச் சென்றால் ஒரு அட்டை கூட கண்ணில் படாது. (கடல் இப்படி அறம் பாய்ந்து கிடப்பதற்கு பட்டநீவாடு, கட்டவரத்து, குறுமி என பலப்பெயர்கள் உள்ளன)
கடலில், நண்பகல் வேளையில் வெள்ளம் பெருகி வாங்கல் ஏற்பட்ட பிறகு அதே பாதையில நாம் மீண்டும் பயணித்தால் இப்போது கணக்கற்ற கடல்அட்டைகளை அந்தவழியே காணலாம். கடல் வற்றும்போது மணலுக்குள் ஓரடி புதைந்து கொள்வதும், கடலில் பெருக்கு ஏற்படும் போது வெள்ளெலி போல, வெள்ளரிக்காய் போல, வெளியே மீண்டும், தலையைக் காட்டுவதும் இந்த கடல் அட்டைகளின் வழக்கம்.
நீரோட்டத்தில் உருளவும், புரளவும் செய்யும் இந்த கடல் அட்டைகள் நிறம் மாறவும் கூடியவை. இந்த கடல் அட்டையை ஆசைப்பட்டு கையில் எடுத்தால், ஒருவகை பசை போன்ற திரவத்தை இது கக்கும். வெண்ணிற சாக்கு நூல்போன்ற இந்தப் பிசுபிசுப்புப் பசை, எதன்மீது ஒட்டுகிறதோ அதை விடவே விடாது. தொட்டுத் தொடரும் இந்த பட்டுத்திரவம் நம் கை கால்களில் ஒட்டினால், முடியுடன் சேர்த்து இந்த பசையை பிய்த்து அகற்ற வேண்டியிருக்கும். பெவிகுயிக் போன்ற பசை தரும் இந்த பாசக்கார அட்டையை யாரும் உண்ண மாட்டார்கள்.
இலைப்பச்சை அட்டை : பச்சைப்பசேல் என இலைப்பச்சை நிறத்திலும், கருநீல நிறமாகவும் இரு வண்ணங்களுக்கு மாறக்கூடிய அட்டை இது. விலை உயர்ந்த இந்த அரிய அட்டை, தமிழகத்தின் வான்தீவு, கோபுரத்தீவு, புளுவுணி சல்லித்தீவு, காசுவார் தீவுகளில் கடலையொட்டிய பகுதிகளில் அதிகம் காணப்படும்.
பூரான் அட்டை, பாவைக்காய் அட்டை :  தூத்துக்குடி கடல்பகுதியில் மிக அதிக அளவில் கிடைக்கக் கூடிய அட்டையினம் இது. தேரி மணல் போல கடலடியில் கோடிக் கணக்கில் இவை குவிந்து கிடக்கும். திறமையான சங்கு குளிப்பவர் ஒருவர் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கடல் அட்டைகளை எடுத்துவிட முடியும். உண்ணத்தகுந்த மிக அரிய இன கடல் அட்டையான இது, பொரித்த கணவாய் இறைச்சி போல சுவை கொண்டது.
வாய்ப்பகுதியில் நுண்ணிய குழாய் கால்களைக் கொண்ட இந்த அட்டை, அதன்மூலம் இரையை வாய்க்குள் செலுத்தக்கூடியது. இது குடலைக் கக்கி வெளியேற்றினால் கூட உள்சதை அரை அங்குலம் வரை காணப்படும். கடல்அட்டைகள், குடலோடு மணலையும் கக்கக் கூடியவை.
வின்னி அட்டை: துணிதுவைக்கும் போது அதில் உள்ள அழுக்கு நீங்க, பலநூறு குச்சங்கள் கொண்ட பிரஷ்சைப் பயன்படுத்துவோம் இல்லையா? அதுபோன்ற உருவத்தோற்றம் கொண்டது வின்னி அட்டை. பல ஆயிரம் நுண் கால்களால் இது நகரும். அப்படி நகரும்போது கடல்தரையில் 4 விரல்கடை அளவுக்கு ஒரு தடத்தை ஏற்படுத்திச் செல்லும்.

வின்னி அட்டையின் மேற்பகுதி சிவப்பு நிறமாகவும், வயிறு அடிப்பகுதி அழுக்கு வெள்ளையாகவும் திகழும். கடல்நீரில் இருக்கும்போது ஒன்றரை அடி நீளமான இந்த அட்டை கையில் எடுத்ததும் அரையடியாக சுருங்கி விடுவது ஓர் அதிசயமே. மீண்டும் நீரில் போட்டால் பழையபடி ஒன்றரை அடி நீளத்தை இது எட்டும். கடலடியில் வண்டல்படிந்த தரைகளில் காணப்படும் இந்த வின்னி அட்டை விலைமதிப்புள்ளது.
கறுப்பு அட்டை: தூத்துக்குடி பகுதி கடல் தாவுகளில் அதிகம் காணக்கூடிய அட்டையினம் இது. மனிதர்களின் பார்வையில் இது மதிப்புடையது.
அதுபோல கறுப்பு மற்றும் ரோஸ் நிறமான ஓர் அட்டை நல்லதண்ணீர்தீவு பகுதியில் கிடைக்கக் கூடியது. கையில் எடுத்தால் விறைப்பாகும் இந்த அட்டை, கையில் இருந்து விடுவித்தால் ஊதிவிட்ட பலூன் போல தொய்ந்து போகும். இந்த கருரோஸ் நிற அட்டை உண்ணத்தகுந்த அட்டை அல்ல.
கடல் அட்டைகளின் முக்கிய வாழ்விடம் பவழப்பாறைகளும், அதைச்சுற்றியுள்ள மணல்வெளிகளும்தான். ஓர் ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரம் அட்டைகள் வரை இருந்தால் அது வளமான கடல். கடல்அட்டைகள் மணலை உட்கொண்டு அதில் இருக்கும், நுண்ணிய தாவர, விலங்கு உயிர்களை உணவாக்கி ஆண்டுக்கு 60 டன் மணலை சுத்திகரித்து வெளியே தள்ளுகின்றன.
கடல் அட்டைகள், வெறும் உணவுக்காக மட்டும் மனிதர்களால் ஏற்றிப்
போற்றப்படுவதில்லை. மார்பக புற்றுநோய் செல், கல்லீரல் புற்றுநோய் செல்களை 95 விழுக்காடு வரை அழிக்கும் மாமருந்து என்பதாலேயே மனிதர்களால் கடல்அட்டைகள் மதிக்கப்படுகின்றன. கொண்டாடப்படுகின்றன.

No comments :

Post a Comment