Tuesday 24 January 2017

வலுவாடி (புள்ளித்திருக்கை) (Spotted Eagle Ray)

திருக்கைகளில், ஆனைத் திருக்கைக்கு (Manta ray) அடுத்தபடி பெரிய உருவம் கொண்ட திருக்கை வலுவாடி எனப்படும் புள்ளித்திருக்கைதான். திருக்கைகளில் கண்ணுக்கு மிகவும் இன்பமூட்டும் திருக்கையும் இதுதான். வலுவாடி அதன் வாலையும் 16 அடி நீளம் இருக்கலாம். இதன் பறவை போன்ற சிறகுகளின் அகலம் மட்டும் பத்தடி வரை இருந்தால் வியப்ப தற்கில்லை. 230 கிலோ வரை நிறை கொண்ட பெரிய திருக்கை இது. வலுவாடியின் மேலுடல் பசுமஞ்சள் நிறமாகவோ, கருநீலநிற சாயலாகவோ கூட இருக்கலாம். அதில் வெள்ளைநிற புள்ளிகள் அழகுமிளிர காணப்படும். வலுவாடியின் அடிப்பகுதி வெண்ணிறமானது. திருக்கைகளில் மிக நீளமான வால் கொண்ட திருக்கைகளில் வலுவாடியும் ஒன்று. இதன் கரிய நிற வால், 1.2 மீட்டர் முதல் 2 மீட்டர் நீளத்துடன் திகழும்.இந்த நீள வாலில் 2 முதல் 6 நச்சு முள்கள் காணப்படலாம்.
வலுவாடியின் தாடை வட்டமானது, அலகு பறவை போல கூர்மையானது. இந்த அலகின் மூலம் இரைமீன்களின் வாசனை, மின்னலைகளை வலுவாடியில் உணர்ந்து இரைதேட முடியும்.
உருவில் பெரிதாக இருந்தாலும் வலுவாடி திருக்கைக்கு ஆனைத் திருக்கையைப் போலவே அடக்கமான குணம். தனித்துத் திரியும் பழக்கமும், கூச்சமும் கொண்ட வலுவாடி திருக்கை, மனிதர்களின் அண்மையை வெறுக்காது. கடலில் முக்குளிப்பவர்களிடம் இது நெருங்கி வரக்கூடியது. பொதுவாக ஆபத்தற்றது.
வலுவாடி சுறுசுறுப்பாக எப்போதும் நீந்தக்கூடியது. திருக்கை இனத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல மணலில் புதையாமல், பெருங்கடல் எங்கும் நீந்தித் திரியும் திருக்கை இது
வலுவாடி சுறுசுறுப்பாக எப்போதும் நீந்தக்கூடியது. சிறகுகளை அசைத்து கடலடியில் ஒரு பறவையைப்போல இது பறக்கும் அழகே தனி.

கடலடியில் மற்ற சாட்டை வால் திருக்கைகளைப் போல இது ஓரிடத்தில் தரித்து நிற்காது. நாள் முழுவதும் கடலடி மண்டியைக் கிளறி இது இரை தேடியபடி இருக்கும்.மீன், நண்டு, சிப்பி உள்பட பலவகை இரைகளை வலுவாடி உண்ணக்கூடியது. இதன் வலுவான தாடைகளால் சிப்பி போன்றவற்றை எளிதாக உடைக்க முடியும்.
தனித்து திரியும் பழக்கம் உள்ள வலுவாடி திருக்கை, இனப்பெருக்கக் காலத்தில் பெருந்திரளாகக் கூடும். கடலின் மேல்மட்டத்துக்கு வந்து நீரின் மேல் இரைந்து விழும் பழக்கமும் வலுவாடித் திருக்கைக்கு உண்டு. சிலவேளைகளில் இது கடல்நீர்ப்பரப்பை விட்டு துள்ளி, சற்றுபறக்கவும்செய்யும்.
கடலின் 6 முதல் 80 மீட்டர் ஆழத்தில் வலுவாடி காணப்படும். 1 முதல் 4 வரை உயிருள்ள குட்டிகளை பெண்திருக்கை ஈனும். வலுவாடியின் இயற்கையான எதிரி சுறாக்கள்தான்.
சுறாக்களால் வேட்டையாடப்படும் ஆபத்து வலுவாடிக்கு உண்டு.

பார்கள் எனப்படும் பவழப்பாறைகளுடன் தொடர்புள்ள வலுவாடித் திருக்கைக்குத் தொலைகடல்களுக்கு வலசை போகும் பழக்கமும் உண்டு.

No comments :

Post a Comment