Monday 23 May 2016

சாவாளை (RibbonFish)


பார்வைக்கு பயமுறுத்தக் கூடிய தலை, வாயெல்லாம் கூரிய வலுவான பற்கள், வட்டக்கண்கள், ரிப்பன் மாதிரியான நீளமான பட்டை உடல், கூர்மையாக ஊசி போல முடியும் வால்.
சாவாளை மீனின் பொதுவான தோற்றம் இதுதான். Lepturacanthus savala என்பது இந்த மீனின் அறிவியல் பெயர். மெல்லிய வாலுடைய மீன் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சாவாளை கடலடி மீன். ஆனால், கடலுக்கு அடியில் இரையுண்ணும் மீன் அல்ல இது. இரவில் கடல்மட்டத்துக்கு மேல் வரும் சாவாளை மீன்கள், நெத்தலி போன்ற சிறுமீன்களையும், இறால் போன்ற உயிர்களையும் உணவாகக் கொள்ளும். சாவாளைக் குஞ்சுகளையும் பெரிய சாவாளைகள் இரையாக்கும்.
நீலம் கலந்த வெள்ளிநிறமான சாவாளை மீனுக்கு செதிள்கள் எதுவும் கிடையாது, மாங்கு (Guanine) மட்டுமே உண்டு. (இந்த மாங்கு அலங்கார நகப்பூச்சுக்கும், செயற்கை முத்து செய்யவும் பயன்படுகிறது)
சாவாளை மீன் ஏறத்தாழ 3 அடி நீளம் (39.4 அங்குலம் நீளம் வரைகூட) வளரக்கூடியது.
முதுகில் மிக நீளமான ஏறத்தாழ 130 கதிர்தூவிகள் கொண்ட சாவாளைக்கு வயிற்றில் பள்ளை என்ற காற்றுப்பை உண்டு. வயிற்றில் கல் இருப்பது சாவாளை மீனின் தனித்துவமான பண்பு. இதன் முதுகுத்தூவி வால்பக்கம் இருந்து தலைநோக்கி பிடித்து இழுக்கும்பட்சத்தில் கழன்று உரிந்து வந்துவிடக் கூடியது.
உலர்மீனாக அதிக அளவில் பயன்படும் மீன் இது. கடல்நீரில் இருந்து எடுத்தபின் சாவாளையை உயிருடன் பார்ப்பது மிகவும் அரிது. தூண்டில்  இரையாக இது அதிக அளவில் பயன்படக்கூடியது.
இந்தியப் பெருங்கடலுக்கு உரித்தான தனித்துவமான மீனான சாவாளையில் பெரிய தலை கொண்ட சாவாளை மீன், கறுப்பன் (Trichiurus Lepturus) என அழைக்கப்படுகிறது. கூட்டமாகத் திரியும் இந்த இனத்தின் பெரியமீன்கள் பகலில் கடல்மட்டத்துக்கு மேல்வந்து மேயக்கூடியவை. சிறுமீன்கள் இரவில் கடல்மட்டத்தை நாடக்கூடியவை.

தலையை உயர்த்தியபடி நீந்திக் கொண்டே தலைக்கு மேல்வரும் இரையைக் குறிவைத்து காத்திருப்பது இந்த வகை சாவாளையின் தனிப்பண்பு.

No comments :

Post a Comment