Thursday 18 October 2018




மாசி கருவாடு

மாசி கருவாடு

மாசி என்றால் என்ன? அது ஒரு தமிழ்மாதம் என்பீர்கள். கடல் சாராத உள்நாடுவாழ் தமிழர்களுக்கு வேண்டுமானால் மாசி, தமிழ் மாதமாக இருக்கலாம். ஆனால், கடல்சார் தமிழர்களுக்கு, மாசி என்பது தமிழ்மாதம் மட்டுமல்ல, அது ஒருவகை கருவாடும் கூட. 

மாசி கருவாட்டின் தாய்மடி இந்தியப் பெருங் கடலில் உள்ள மாலத்தீவுதான் (Maldives). ராஜராஜ சோழன் காலத்தில் சோழக் கடற்படையால் கைப்பற்றப்பட்டு, தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த மாலைத்தீவுகள்தான் இன்று மாலத்தீவு என்ற பெயரில் தனிநாடாக விளங்கு கிறது.
மாலத்தீவில் பிடிக்கப்படும் சூரை மீனை வெட்டி, அவித்து, புகையூட்டி, வெய்யிலில் உலர்த்தி மாசி தயாரிக்கப்படுகிறது. மீனை தோலுரித்து செதிள், குடல் நீக்கியபின், தலை, நடுமுள் (முதுகெலும்பு) போன்றவை அகற்றப்படும். பிறகு வயிற்றுப்பாகம் தனியாகப் பிரிக்கப்படும்.

பின்னர் இது நான்காக துண்டாடப்படும். பெரிய சூரைமீனாக இருந்தால் இந்தத் துண்டங்கள் மேலும் சிறுதுண்டங்களாக்கப்படும். அரியப்பட்ட சூரைமீன் துண்டங்களை அண்டாவில் அரைவேக்காடாக வேக வைப்பார்கள். ஒரு கொதி வந்ததும், இந்த மீன் துண்டங்களை இறக்கி, மெல்லிய ஒரு சணல் சாக்குப்பையில் இட்டு, திருகி திருகி சொட்டுத் தண்ணீரின்றி பிழிவார்கள். பின்னர் மூன்று நாள்கள் வரை இந்தத் துண்டங்கள் வெய்யிலில் காய வைக்கப்படும்.
மாசி கருவாடு
வெய்யிலில் உணங்கிய இந்த மீன் துண்டங்கள் இப்போது பூட்டிய ஓர் அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கே அடுப்பின் மேல் பரண் அமைத்து, வைக்கோல் பரப்பி மீன் துண்டங்களை அடுக்குவார்கள். புகையூட்டப்படும் இந்த துண்டங்கள் சில நாள்களுக்குப்பின் மரக்கட்டை வடிவத்தில், மாசிக்கருவாடாக மாறுகின்றன.
மாலத்தீவு, தமிழகம், கேரளம், இலங்கை, இலட்சத்தீவுகள் எனப்படும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் பகுதி மக்களுக்கு மாசிக் கருவாடு ஒரு மிகச்சிறந்த சமையல் சேர்பொருள். குளிரூட்டி பாதுகாக்கத் தேவையில்லாத மாசிக்கருவாடு, பல்வகை உணவுகளுக்குச் சுவையூட்டுகிறது.

No comments :

Post a Comment