Wednesday 10 May 2017

பெருஞ்சுறா (White Shark) (Carcharodon Carcharias)

கொன்றுண்ணி சுறாக்களில் மிகப்பெரியது பெருஞ்சுறா எனப்படும் வெள்ளை சுறா. இதற்கு முண்டஞ்சுறா என்றொரு பெயரும் உண்டு. கடலில், இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும் பெருஞ்சுறாதான்.
சுறாக்களின் படிவரிசைப் பட்டியல்படி பார்த்தால் பெருஞ்சுறாவைவிட பெரியவை இரண்டே சுறாக்கள்தான். ஒன்று அம்மணி உழுவை எனப்படும் Whale Shark. மற்றது மேய்ச்சல் சுறா எனப்படும் basking Shark. இந்த இரண்டு அண்ணன்களுமே அறவழியில் நடக்கும் அருளாளர்கள். இவர்கள் பெரும் ரத்தக்களறிகளில் ஈடுபடாமல் கடல்கவுர்களை சிறுமீன், கடற்பறவைகளை உண்டு வாழ்பவர்கள். இதனால், கடலில் இரையைக் கொன்றுண்ணும் சுறாக்களில் மிகப்பெரிய சுறா என்ற பட்டம் இயல்பாக பெருஞ்சுறாவுக்கே உரித்தானது.

பெருஞ்சுறா, 3 ஆயிரம் ரம்பப் பற்கள் கொண்ட ஆபத்தான ஒர் கடல் உயிர். பெருஞ்சுறாவின் அறிவியல் பெயரான Carcharodon Carcharias என்பதுகூட கூரிய, ஒழுங்கற்ற ஓரம்வெட்டும் பற்கள் கொண்டஎன பெருஞ்சுறாவின் பற்களைத்தான் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறது.
பெருஞ்சுறாவின் நீளம், கிட்டத்தட்ட ஒரு மெர்சிடெஸ் பென்ஸ் காரின் நீளம். எடை ஏறத்தாழ 2,268 கிலோ. பெருஞ்சுறாக்களில் ஆணை விட பெண்ணே நீளமானது, பெரியது. 16 மில்லியன் ஆண்டுகளாக பெருங்கடல்களை பெருஞ்சுறா ஆட்சி செய்கிறது. எனினும், பெருஞ்சுறாவின் வரலாறு இன்னும் மிகப்பழைமையானது என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறம். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறம். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி அழுக்கு கலந்த வெள்ளை நிறம். அது என்னவோ தெரியவில்லை? ஆங்கிலத்தில் இதன் அடிவயிற்று நிறத்தையே குறியீடாக வைத்துவெள்ளைச் சுறாஎன பெயர் வைத்து விட்டார்கள்.
சுறாஇனத்தில் பெருஞ்சுறா, ‘மேக்கரல்‘ (Mackerel) என்ற சுறாக்களின் பிரிவைச் சேர்ந்தது. (மேய்ச்சல் சுறா, கீரிப்பல்லன் சுறா போன்ற பல சுறாக்கள் இந்த மேக்கரல் சுறாப்பிரிவில் அடங்கும்) டார்பிடோ (Torpedo) குண்டு போன்ற உடல்வாகும், வலிமை வாய்ந்த வாலும் இந்த மேக்கரல் சுறாக்களின் தனி அடையாளம். இவை பெருஞ்சுறாவுக்கும் உண்டு.
மேக்கரல் பிரிவு சுறாக்களுக்கே உரித்தான விதத்தில் நட்டநடுமுதுகில் முதுகுத்தூவியும், அதையடுத்து ஒரு சிறுதூவியும்,அதன் நேர்கீழே அடிப்புறத்தில் ஒரு சிறு தூவியும் கொண்டது பெருஞ்சுறா. பக்கத்தூவிகள் இரண்டும் அரிவாள் போல வளைந்தவை. இதன் முதுகுத்தூவி கடல்மட்டத்தில் ஒரு கத்தியைப் போல நீரைக்கிழித்தபடி முன்னேறி வரக்கூடியது.
பெருஞ்சுறாவின் உடல் Denticle
எனப்படும் முட்தோலால் மூடப்பட்டது. மேக்கரல் பிரிவு சுறாக்களுக்கே உரித்தான வேகமும், கடுமையும் பெருஞ்சுறாவுக்கும் உண்டு.

திறந்தவெளி பெருங்கடல் மீனான பெருஞ்சுறா, மிக அடி ஆழத்தில், அதாவது 3 ஆயிரத்து 900 அடி வரை சென்றுவரக்கூடியது. கடவுச்சீட்டு எதுவுமின்றி கண்டம் விட்டு கண்டத்துக்கும், நாடுவிட்டு நாடுகளுக்கும் பெருஞ்சுறா செல்லக்கூடியது. 12 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவு வரை இது வலசை போவது கண்டறியப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் இருந்து ஹவாய்த் தீவுகளுக்கோ, அல்லது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கோ பயணப்படுவது பெருஞ்சுறாக்களுக்கு ஒரு பெரிய வேலையே இல்லை.
ஒரு சாவிக் கொத்தில் தொங்கும் பலவகை சாவிகளைப் போல, பல்வேறு வகையான வேட்டைத் தந்திரங்களைக் கொண்ட மீன் பெருஞ்சுறா. கடலில் இது நீந்திவரும்போது இதன் உடல் வண்ணம் அருமையாஉருமறைப்பாகத் திகழும். எச்சரிக்கை எதுவும் செய்யாமல் எதிரியைத் தாக்கக் கூடிய மீன் இது.
இரைஉயிர் கடல்மட்டத்தின்மேல் இருந்தால் கீழிருந்து இரையை நோக்கி மணிக்கு 56 கிலோ மீட்டர்வேகத்தில் மேலேறி, இரையைக் கவ்வியபடியோ அல்லது இரையை மூக்கால் தட்டிவிட்டோ, கடல்மட்டத்தை விட பத்தடி உயரத்துக்கு மேல் பெருஞ்சுறா பாயக்கூடியது. விமானம் ஒன்று கடலில் இருந்து வெளிக்கிளம்புவது மாதிரியான காட்சி இது. வண்டிச்சக்கரம்போல பெருஞ்சுறா சுழன்று விழவும் செய்யும். அப்போது குழல்விளக்கு போல கடல்நீர் தெறிப்பது கண்கொள்ளா அழகு.
இவ்வளவு பெரிய உடலுடன் பெருஞ்சுறா இறைந்து விழுவது பெரும் வியப்பு என்றால், பெருஞ்சுறாவால் பந்தாடப்பட்ட சூரை, கட்டா, பாரை போன்ற மீன்கள் 80 அடி உயரத்துக்கு மேலேபறந்துமீண்டும் கடலில் வந்து விழுவது அதைவிட வியப்பானது. இந்தத் தாக்குதலில் சிக்கி குற்றுயிராக அல்லது செத்து மிதக்கும் மீன்களை எந்தவித பரபரப்பும் இன்றி பெருஞ்சுறா அமைதியாக நீர்மேல் வந்து உணவாக்கும்.
அரைகுறை இருள் சூழ்ந்த புலர் காலைப்பொழுதே பெருஞ்சுறாவுக்குப் பிடித்தமான வேட்டை நேரம். ஆதவன் உதிக்கும் அதிகாலையில் இரு மணிநேரங்கள் பெருஞ்சுறா வேட்டையில் ஈடுபடும்.
சூரை, திருக்கை, ஓங்கல், ஆமை போன்றவற்றுடன், இரை எதுவும் கிடைக்கா விட்டால், இறந்த திமிங்கிலங்களையும் பெருஞ்சுறா உணவாக்கிக் கொள்ளும்.
திமிங்கிலங்களின் எண்ணெய்க்கொழுப்பு நிறைந்த மேல் உடல் பெருஞ்சுறாவின் விருப்ப உணவு. ஆனால், உயிருள்ள திமிங்கிலங்களை இது தாக்கியதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
அதேவேளையில், தன்னினத்தைச் சேர்ந்த சுறாக்களை கொன்றுதின்னும் பழக்கம் பெருஞ்சுறாவுக்கு உண்டு. ஒரே ஆண்டில் 11 டன் எடையுள்ள உணவை பெருஞ்சுறா அரவாக்கக் கூடியது. ஆனால், வயிறு நிரம்ப இரை தின்றபின் 3 மாத காலத்துக்கு உணவு எதையும் உண்ணாமல் பெருஞ்சுறாவால் தாக்குப் பிடிக்கவும் முடியும். இரை கிடைக்காத பொழுது இது இறந்த திமிங்கிலங்களை உணவாகக் கொள்ளும்.
மனிதர்களை அதிகம் தாக்கும் சுறா, பெருஞ்சுறாதான். மனிதர்கள் சுறாக்களின் இயற்கை உணவு இல்லை என்ற நிலையில், கடலில் நீந்தும் மனிதர்களைஒரு காக்கா கடி‘ (Sample bite) கடித்து சுவை பார்ப்பது பெருஞ்சுறாவின் பழக்கம். ஆனால் பெருஞ்சுறாவின் இந்த சிறியமாதிரி கடிமனிதர்களுக்குப் பெருங்கடியாக மாறி ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
பெருஞ்சுறாவில் பெண்சுறாக்கள் இனப்பெருக்கக் காலத்தில் முதுகுத் தூவிகளில்பற்குறிகளுடன்காணப்படும். காதல் உறவின்போது, ஆண் சுறா பெண்சுறாவின் தூவியைக் கடித்துப்பிடித்து வசமாக்குதல் வழக்கம்.
காயங்களுடன் காணப்படும் கர்ப்பமான பெருஞ்சுறா, 11 மாத கர்ப்பத்துக்குப் பின் 2 முதல் 12 குட்டிகளை ஈனும். தாயின் கருவறையில் இருக்கும்போது வளர்ந்த பெரிய குட்டிகள், சிறிய குட்டிகளைத் தின்னும் Oophagy என்ற வழக்கம் பெருஞ்சுறா குட்டிகளிடமும் உண்டு.
வெப்ப ரத்தம் கொண்ட மீனான பெருஞ்சுறா, சூழவுள்ள கடல்நீரின் வெப்பத்தைக் காட்டிலும் தன் உடல்வெப்பத்தை அதிகரிக்க வல்லது. இந்த உடல்வெப்பநிலை கடலில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் விரையவும், 56 கிலோ மீட்டர் வேகத்தில் திடீரென துள்ளிக்கிளம்பி வேட்டையாடவும் பெருஞ்சுறாவுக்கு உதவுகிறது.
உடலை நெளித்தும், தாடைகளை அசைத்தும் பெருஞ்சுறா மற்றொரு பெருஞ்சுறாவுடன் தகவல் பரிமாறும்.
இவ்வளவு பெரிய கடல் ஆளுமையான பெருஞ்சுறாவுக்கும், கடலில் எதிரிகள் உண்டு. அந்த எதிரிக்கூட்டம் பெருஞ்சுறாவைக் கொன்று தின்னவும் கூடியது. பெருஞ்சுறாவையே வேட்டையாடக் கூடிய அந்த மாபெரும் கடல்உயிர் எது என்றால் அது ஓங்கல் இனத்தின் ஒருவகையானகில்லர் வேல்‘ (Killer Whale) ஓங்கல்கள்.
ஒரு கூட்டமாக வரும் இந்த வகை ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து நுட்பத்துடன் தாக்கக் கூடியவை. பெருஞ்சுறா மட்டுமல்ல, எந்த வகை சுறாவாலும் பின்பக்கமாக நீந்த முடியாது. திடீரென நிற்கவும் முடியாது. அதுபோல நீந்தாவிட்டால் சுறாவால் மூச்சுவிடவும் முடியாது. அது மட்டுமல்ல, பெருஞ்சுறாவைப் பொறுத்தவரை அது தலைகீழாகப் புரட்டப்பட்டால் அதனால் மூச்சுவிட முடியாது. ஒருவித அசைவற்ற நிலைக்கு (Tonic Immoblity) பெருஞ்சுறா அப்போது ஆளாகிவிடும்.

எதிரியின் இந்த குறைபாடுகளை அழகாக அறிந்து வைத்திருக்கும் கில்லர் வேல் ஓங்கல்கள், பெருஞ்சுறாவை சூழ்ந்து அதை முன்புறம் முன்னேற விடாமல் நிலைநிறுத்தும். அதை நீந்தவிடாமல் செய்து, பின்னர் முட்டி மோதி பெருஞ்சுறாவை தலைகீழாகப்புரட்டி அதை மூச்சுவிடமுடியாத நிலைக்கு கொண்டு செல்லும். அதன்பின் பெருஞ்சுறாவின் ஈரலை அவை குறிவைக்கும்.
கில்லர் வேல் ஓங்கல்களின் உணவுப்பழக்கம் அலாதியானது. திமிங்கிலக் குட்டிகளை வேட்டையாடினால் திமிங்கிலக் குட்டியின் நாக்கை அவை விரும்பி உண்ணும். அதுபோல பெருஞ்சுறாவை வேட்டையாடினால் இரும்புச் சத்து நிறைந்த அதன் ஈரலே ஓங்கல்களின் விருப்ப உணவு.
21 அடி நீள பெருஞ்சுறா ஒன்றில் 7 ஆயிரத்து 100 பவுண்ட் எடை கொண்ட ஈரல் இருக்க வாய்ப்புள்ளது. அது கில்லர் வேல் ஓங்கல்களின் விருந்தாகும்போது, இறந்த பெருஞ்சுறா பரிதாபமாக கரையொதுங்க வாய்ப்புள்ளது.
பெருஞ்சுறாவைப் பற்றிய இந்த பத்தி மிக நீள்வதால் ஓர் அரிய தகவலுடன் முடித்துக் கொள்வோம்.

பெருஞ்சுறாவை கடலுயிர் காட்சியகம் எதிலும் வளர்க்க முடியாது. அப்படி வளர்க்க முயன்றால், உணவு எதையும் உண்ணாமல் அடம்பிடித்து, சுவரில் முட்டி மோதி பெருஞ்சுறா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும்.  

No comments :

Post a Comment