Friday 26 August 2016

கொட்டலசு (அலசு) (Barnacle)

புவிப்பந்தில் பல லட்சம் ஆண்டுகள் பழைமையான ஒரு கடல் உயிர் கொட்டலசு. கடல்அலைகள் தாலாட்டும் பாறைப் பகுதிகள், படகுகளின் அடியில் இந்த அரிய வகை கடல் உயிர்க்கூட்டத்தை அடிக்கடி காணலாம்.
அலைகள் வந்து மூழ்கடிக்கும்போது கொட்டலசின் எரிமலை கூம்பு வடிவ உடலின் மேற்கதவு திறந்து கொள்ளும். அதன் உள்ளே இருந்து இறகு போன்ற மென்மயிர்த்தூவல் போன்ற ஓர் உறுப்பு அடிக்கடி வெளியே வந்து உள்ளே செல்லும். இந்த இறகுப் போன்ற காலால், கடல்நீரில் உள்ள உணவுத் துகள்களை சேகரித்து கொட்டலசு உண்கிறது.
கொட்டலசுகளில் ஏறத்தாழ ஆயிரம் வகைகள் உள்ளன. கருவாலிக் கொட்டை போன்ற கொட்டலசே பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படும்.
கொட்டலசு, நத்தை, சிப்பி போன்றவற்றின் இனம் என்று கருதப்பட்டாலும் உண்மையில் இது நண்டு, இறால் போன்ற உயிர்களுடன் நெருங்கிய உறவு உடையது.
கொட்டலசின், லார்வா எனப்படும் நுண்புழு ஏறக்குறைய நண்டின் நுண்புழு போன்றது. கடல்நீரில் கவர்களுடன் மிதந்தபடி திரியும் இந்த நுண்புழு, அங்குமிங்கும் அலைந்து கடல் பாறைகள், படகுகள், மிதக்கும் கட்டைகளில் சரியான இடத்தைத் தேர்வு செய்து தலைகீழாக ஒட்டிக் கொள்ளும்.
பிறகு, சுண்ணாம்பு போன்ற ஒன்றை சுரக்கச் செய்து, தன்னைச்சுற்றி தகடுபோன்ற கனமான பாதுகாப்பு கவசம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும்.
இதன்மூலம் மீன்போன்ற மற்ற கடல் உயிர்களிடம் இருந்து கொட்டலசு தப்பிக்கும். கடல்அலைகளால் அடித்துச் செல்லப்படாமலும் இது காப்பாற்றப்படும்.
கொட்டலசு ஒருமுறை ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டால், பின்னர் அதன் வாழ்நாள் முழுவதும் அதே இடத்தில்தான் கழியும்.
மிதக்கும் படகுகள், மரத்துண்டுகள், பாறைகளில் மட்டுமில்லாமல் திமிங்கிலம், ஆமை, நண்டு, ஏன் கடல்பாம்புகள் மீது கூட கொட்டலசு ஒட்டிக் கொண்டு உயிர் வாழும்.
கொட்டலசு 6 மாதங்களில் முழுவளர்ச்சி அடையும், 5 முதல் 10 ஆண்டுகள் வாழும். சில கொட்டலசுகள் அதையும் தாண்டி உயிர்வாழக்கூடியவை.
கடல் அலை வந்து நீராட்டிச் செல்லும்போது மேல் திறப்பைத் திறந்து தன் கால்களால் துழாவி இதுகடல்நீரிலுள்ள நுண்சத்துகளைத் திரட்டி வாய்க்குள் நுழைத்து உணவாக்கிக் கொள்ளும்.
இது, ஒரு மனிதன் தலைகீழாக நின்று தன் கால்களால் உணவை சேகரித்து அதை வாய்க்குள் திணிப்பதுபோன்ற வேலை.

கொட்டலசுகளில் ஒன்று வாத்து கொட்டலசு. மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரே கொட்டலசு இதுதான். வாத்துகள் இந்த வகை கொட்டலசில் இருந்துதான் உருவானதாக பழங்காலத்தில் மனிதர்கள் நம்பியிருக்கிறார்கள். கப்பலின் அடியில் ஒட்டியிருக்கும் வாத்து கொட்டலசு பின்னர் சிறகுகள் முளைத்து வாத்தாக மாறி பறப்பதாகவும் நம்பியிருக்கிறார்கள்.
கப்பல், அல்லது தோணியின் அடியில் படரும் கொட்டலசுகள் நாளடைவில் கப்பல், அல்லது தோணியின் பாரத்தை அதிகமாக்கி, அவற்றின் வேகத்தைக் கணிசமாகக் குறைத்து விடக்கூடியவை.
அதனால், காலம்தோறும் கப்பல்கள், தோணிகள் கரையேற்றப்பட்டு அவற்றின் படர்ந்திருக்கும் கொட்டலசுகள் திட்டிக் கொண்டே அகற்றப்படுவது வழக்கம்.

கொட்டலசு என்ற பெயரே தமிழில் திரிந்து இப்போது ஆங்கில பாணியில் கொட்லாஸ் என அழைக்கப்படுகிறது. விரைவில், கொட்லாஸ் மீண்டும் தமிழில் கொட்டலசாக மாறும் என நம்புவோமாக…

2 comments :

  1. வாழ்க நலமுடன் வளர்க மடலுடன்

    ReplyDelete
  2. வாழ்க நலமுடன் வளர்க மடலுடன்

    ReplyDelete