Thursday 27 February 2020


ஈயூஜினி கிளார்க் (Eugenie Clark).
கடலையும், கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல, கடலியல் சார்ந்த ஆய்வாளர்கள், அறிஞர்களையும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? அந்த வரிசையில் இரண்டாவதாக அமெரிக்க நாட்டு கடலியல் ஆய்வாளர் ஈயூஜினி கிளார்க் (Eugenie Clark).
இந்தப் பெண்மணி அமெரிக்காவின் கடற்கரை மாநிலங்களில் ஒன்றான ஃபுளோரிடாவில் பிறந்தவர். (மே 4, 1922). அப்பா அமெரிக்கர். அம்மா ஜப்பானியர். சிறுவயதில் அப்பா இறந்துவிட, அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இவர் வளர்ந்தவர்.
சிறுமியாக இருந்தபோது, நியு யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள கடலுயிர் காட்சியகத்தைப் பார்த்தார் ஈயூஜினி கிளார்க். அந்தக்கணம் முதல் மீன்கள் மீது இவர் காதலாகி விட்டார். மீன்களைப் பற்றி படிப்பதில் ஆர்வமான இவர், ஹண்டர் கல்லூரியில் உயிரியல் படிப்பை முடித்தார்.
பிறகு கடலில் முக்குளிப்புப் பயிற்சி. அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கி கருவிகளின் உதவியுடன் கலிபோர்னியா பகுதியில் நீர்மூழ்கும் பயிற்சிப்பெற்றார். 1947ல் அமெரிக்க மீன்கள் மற்றும் காட்டுயிர்த்துறையினர், பிலிப்பின்ஸ் பகுதியில் உள்ள மீன்களை ஆராயும்படி இவரைப் பணித்தனர். ஆனால், ஈயூஜினியின் தாயார் ஜப்பானியர் என்பதால் அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை இவருக்கு ஒப்புதல் தரவில்லை.
ஈயூஜினி, எகிப்து நாட்டின் அல்கார்தாகாக் பகுதியில் தங்கியிருந்து செங்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பிளாட்டி, ஸ்வார்ட்டெயில் மீன்கள் உயிருள்ள குட்டிகளை ஈனுவது பற்றிய இவரது ஆய்வுக்கு நியு யார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கிடைத்தது. மீன்களிடத்தில் செயற்கைமுறை கருத்தரிப்பு முறையைச் செய்து காட்டிய முதல் அமெரிக்கர் இவர்தான்.
கடலியல் ஆய்வகம் ஒன்றை நிறுவிய ஈயூஜினி கிளார்க், ஃபுளோரிடா கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான மீன் இனங்களை ஆராய்ந்தார். சுறாக்களைப் பற்றி ஆய்வு நடத்தும்படி அமெரிக்கப் புற்றுநோய் ஆய்வாளர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் கடலில் தடுப்புவேலிகள் அமைத்து உயிருள்ள சுறாக்களை ஆய்வுக்காக இவர் வளர்க்கத் தொடங்கினார்.
1958ல் சுறாக்களின் நடவடிக்கை, போக்கு அவற்றின் மனஇயல்புகளை இவர் ஆராய்ந்தார். குறிப்பாக லெமன் சுறாக்களை ஆராய்ந்தார். சுறாக்கள் அறிவற்றவை என்ற மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார்.
கடலில் அடிக்கடி முக்குளித்தவரான ஈயூஜினி, சுறாக்களுக்கான பாதுகாவலராக மாறினார். சுறா மனிதர்களுக்கு எதிரி, சுறா ஓர் ஆட்கொல்லிகள் என்பன போன்ற கருத்துகளை மாற்ற உதவினார். சுறா பெண்மணி எனப் பெயர் பெற்றார்.
கல்லூரி பேராசிரியையாகவும் பணியாற்றிய ஈயூஜினி, பேத்தாமீன் (Pufferfish), கிளாத்திமீன் (Triggerfish), கிளாத்தி இனத்தைச் சேர்ந்த File fish போன்ற மீன்வகைகளைப் பற்றி சிறப்பான ஆய்வுகளைச் செய்தார். 1972ஆம் ஆண்டு, ‘செங்கடல் மோசஸ்எனப்படும் ஒருவகை அடல்மீனை  (Sole fish) கண்டுபிடித்து  அது தொடர்பாக இவர் நடத்திய ஆய்வு சிறப்பானது. இந்த அடல்மீன் சுரக்கும் ஒருவகையான பொருள் சுறாக்களைத் தடுத்து நிறுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
1973ஆம் ஆண்டு, மெக்சிகோ பகுதியில் உள்ள கடல்குகைகளில் இவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த குகைகளில் சுறாக்கள் வந்து நீண்டநேரம் அசைவின்றி சிலை போல காணப்படும்.  இதற்கான காரணத்தை இவர் ஆராய்ந்தார். அந்த குகையில் வழியும் ஒருவகை நன்னீர், சுறாக்களின் மீதுள்ள ஒட்டுண்ணிகளை நீக்கக் கூடியது என்பதையும் கண்டறிந்தார். ஒட்டுண்ணிகளை உண்ணும் ஒட்டுமீன்கள் (Remoras) அந்தக் குகைகளில் அதிகம் இருந்தது இதை உறுதிப்படுத்தியது.
சுறா பெண்மணி
1995ல் இவரது குழு, அம்மணி உழுவை எனப்படும் பெட்டிச்சுறா (Whale Shark) முட்டையிடாமல், உயிருடன் குட்டியைத்தான் ஈனும் என்பதைக் கண்டுபிடித்தது. இவை தவிர செங்கடல் விலாங்குமீன்கள், இதர மீன்களைப் பற்றியும் இவர் விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார்.
ஈயூஜினி கிளார்க், நேஷனல் ஜியாக்ரபி இதழில் அடிக்கடி கட்டுரைகள் வரைந்தவர். ‘ஈட்டியுடன் பெண்மணி’ (Lady with a Spear), ‘தி லேடி அண்ட் த ஷார்க்ஸ்’ (The lady and the Sharks) போன்றவை அவரது நினைவு தன்வரலாற்றுக்குறிப்புகள். குழந்தைகளுக்காக, ‘கடலடியில் ஒரு பாலைவனம்’ (The Desert Beneath the Sea) என்ற புத்தகத்தையும் ஈயூஜினி எழுதியிருக்கிறார். செங்கடலின் மணல்நிறைந்த அடிப்பகுதியை இந்தப் புத்தகம் விவரித்தது. 1999ல் ஈயூஜினி கிளார்க் ஓய்வு பெற்றார்.

2 comments :

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Thanks . Your blog is a mine of information. Do you have a FB account ? Regards GiriKumar

    ReplyDelete