Friday 24 July 2020


ராணிச்சங்கு (Lobatus gigas)


ராணிச் சங்கு
சங்குகளை ஆங்கிலத்தில் கோங் (Conch) என்பார்கள். நமது பெருங்கடல்களில் 60 வகையான சங்குகள் இருக்கின்றன. 
அதில் ராணிச்சங்கு (Lobatus gigas) என்பது கரிபியன் கடற்பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற சங்கு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஃபுளோரிடா மாநிலம் முதல் பெர்முடா தீவு, பிரேசில் உள்பட பல்வேறு நாட்டுக் கடற்பகுதிகளில் ராணிச் சங்கு மிகுதி. பழங்கால கப்பல் ஒலிப்பான் போலத் தோன்றும் இந்த பிங்க் நிற அழகிய சங்கு கரிபியன் கடற்பகுதியின் பண்பாட்டில் முதன்மையான அங்கம். பகாமாஸ்நாட்டு அரசுச்சின்னத்தில் கூட ராணிச் சங்கு இடம்பிடித்துள்ளது.  
பெர்ர்ர்ரிய... சங்கு
சங்குகள் ஒரு விந்தையான உயிர்கள். அவற்றுக்கு கண்கள் உள்ளன,. ஒருவகையான மூக்கு உள்ளது. வாய் உள்ளது. ஒற்றைக்கால் உள்ளது. ஒரு குழாயின் முனையில் அமைந்துள்ள வாயில் ஒரு நாக்கும் கூட உண்டு. கடற்புற்களின் மேல் படர்ந்துள்ள கடற்பாசிகளைச் சுரண்டித் தின்ன இந்த நாக்கு பயன்படுகிறது. சங்கு அதன் கண்களை இழந்து விட்டால் அதற்கு இழப்பு ஒன்றுமில்லை. கண்கள் மீண்டும் தானாகவே வளர்ந்து விடும்.

கடல்நீரில் உள்ள கார்பனேட் அயன்களையும், கால்சியத்தையும் பயன்படுத்தி ராணிச் சங்கு அதன் அழகிய பிங்க் நிறத்தைப் பெறுகிறது. சங்குகளின் உடற்கூடு மிகவும் வலிமையானது. சிமெண்ட்டை வலுப்படுத்த இது பயன்படுகிறது. சங்கின் ‘ஒற்றைக்கால்’ கடல் தரையில் தத்தித் தத்திச் செல்ல உதவுகிறது. சங்கால் மிக வேகமாக நகர முடியாது. ஆகவே சங்கு தேடி முக்குளிப்பவர்கள் மிக எளிதாக சங்கைப் பிடித்து விடுவார்கள்.

Thursday 9 July 2020


கடலின் கோழி

கடல் அட்டைகள் பற்றி நமது வலைப்பூவில் ஏற்கெனவே பதிவு உண்டு. இது கூடுதல் பதிவு.
கடல் அட்டைகளைப் பார்த்தால் ஏதோ அவை முள்ளெலிக்கும், கத்தரிக்காய்க்கும் பிறந்த விந்தையான உயிர் போலத் தோன்றும். அவற்றைக் கையில் பிடித்தால் சட்டென சுருங்கிக் கொள்ளும். இன்னும் சீண்டினால், குடல் உள்பட உடலின் உள்ளிருக்கும் அனைத்து உறுப்புகளையும் நமக்கு அன்பளிப்பாக வெளியே தள்ளிவிடும்.

இதுஒரு வகை தந்திரம்தான். பூனை பல்லியைப் பிடிக்கும்போது பல்லி அதன் வாலை கழற்றிவிடும் ஓடுவதும், துடிக்கும் அந்த வாலை காலால் பிடித்தபடி பூனை ஏமாந்து நிற்பதும் இயல்பு இல்லையா? அதைப்போல தன்னை உண்ண வரும் கடலுயிர்களிடம் இருந்து தப்பவே கடல் அட்டை இப்படி குடலை வெளியே தள்ளுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு கடற்பறவை கடல் அட்டையை உண்ண முயன்றால் இந்தவகை தந்திரத்தை கடல்அட்டை கடைபிடிக்கும். கடல் அட்டையின் சுவையான குடலை இரையாக உண்ணும் கடற்பறவை அட்டைடையை விட்டுவிடும். இழந்த குடலுறுப்புகள் கடல் அட்டைக்கு மீண்டும் வளர்ந்து விடும்.

கடல்அட்டையால் மனிதர்கள் அடையும் பயன்கள் என்னென்ன? வெறும் ருசியான உணவாக மட்டுமில்லாமல் பற்பசை, மசாஜ் கிரீம், குளிர்பானம் போன்ற பல வடிவங்களில் கடல் அட்டைகள் பயன்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் கேடலோனியா பகுதியில் கடல் அட்டையை சுட்டுச் சாப்பிடுவார்கள். இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் கடல்அட்டை, ‘கடலின் கோழி’ என அழைக்கப்படுகிறது.



சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் ஆடம்பர உணவகங்களில், மிகமிக விலை உயர்ந்த உணவாக, கடல்அட்டைகள் சேவையாற்றுகின்றன. இதனால்தான் இந்தியா, பிலிப்பின்ஸ், எகிப்து போன்ற நாடுகளில் கடல்தரையை ஆராய்ந்து அதிக அளவில் கடல்அட்டைகள் பிடிக்கப்படுகின்றன. தென்பசிபிக் கடல் அடியில் வாழ்ந்த அட்டைகள் சூறையாடப்பட்ட பிறகு இப்போகு குலேபகாஸ் தீவுப்பகுதியில் கடல் அட்டைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. 1992ஆம் ஆண்டுவாக்கில் தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் 30 மில்லியன் கடல்அட்டைகள் அள்ளப்பட்டிருக்கின்றன. மீன்கள், கடற்பறவைகளின் முதன்மை உணவான கடல்அட்டைகள் இப்படி கண்டபடி களவாடப்படுவது எதிர்காலத்தில், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

-டாரஸ் கிரெஸ்கோ எழுதிய ‘டெட்சீஸ்’ என்ற நூலில் இருந்து

Monday 6 July 2020


சயனைடு மீன் வேட்டை

பாக்குவெட்டி
பார்க்கடலில் முக்குளிக்கும் வீரர்களுக்கு மிகவும் பரிச்சயமான மீன்களில் ஒன்று பெருந்திரளை (Humphead Wrasse). அரிய, பெரிய ஆறடி நீளமுள்ள பார்மீன் இது. (இந்த மீனைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே உண்டு)
180 கிலோ வரை எடைகொண்ட இந்த மீன் மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் கூட ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு பாக்குவெட்டி என்றொரு பெயர் உண்டு.
தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும் இந்த அழகிய பெரிய மீன்பலமான பற்களால், கடினமான ஓடுகள் கொண்ட முட்தோலிகளை முறுக்கைத் தின்பது போல நொறுக்கித் தின்னக்கூடியது. அதனால்தான் இதற்குப் பாக்குவெட்டி என்று பெயர்.

ஒரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன்,
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர் போன்றவையும் பாக்குவெட்டியின் உணவு.

பெருந்திரளை எனப்படும் பாக்குவெட்டி மனிதர்களுக்கு ஆபத்தற்ற இந்த மீன், கடலுக்குள் முக்குளிப்பவர்களைக் கண்டால் இது மிக அருகில் அவர்களை உன்னிப்பாகக் கவனிக்கும். மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும். பழகிய நாய் போல மனிதர்கள் கையால் தரும் உணவையும் கூட அது விரும்பி உண்ணும்.
சரி. இனி, டாரஸ் கிரெஸ்கோ என்பவர் எழுதிய டெட்சீ (Dead Sea) என்ற புத்தகத்தைப் பற்றி பார்ப்போம். அந்தப் புத்தகத்தில், மனிதர்களை நம்பி அருகில் வந்து பழகும்  இந்த பாக்குவெட்டி மீன்கள் உணவுக்காகப் பிடிக்கப்படுவதைப்பற்றி டாரஸ் கிரெஸ்கோ எழுதியுள்ளார்.

30 முதல் 40 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடிய மீன் பாக்குவெட்டி. ஆனால் உணவுக்காக அது உயிருடன் பிடிக்கப்படுகிறது. உயிருடன் பிடித்து  விற்றால் உயர்ந்த விலை. பாக்கு வெட்டியின் தடித்த உதடுகளுக்கு தனிவிலை.

இப்படி உயிருடன் வேட்டையாடப்படும் காரணத்தால் பாக்குவெட்டிகளின் இனம் 1995ல் இருந்து 2003 வரையிலான காலகட்டத்தில், ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து ஒரு விழுக்காடாகக் குறைந்து விட்டதாகக் குறிப்பிடுகிறார் டாரஸ் கிரெஸ்கோ. (பாக்குவெட்டி மீன் இனம் அழிந்தால் அது பவழப்பாறைகளுக்கும் ஆபத்து. காரணத்தை அறிய முந்தைய வலைப்பதிவைப் படிக்கவும்).

இரண்டாம் உலகப்போரின்போது ஆசியப் பகுதிகளுக்கு வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், கையெறி குண்டை பவழப்பாறைகளின் மேல் போட்டு ‘மீன்பிடிக்கும்’ வழக்கத்தை ஆரம்பித்து வைத்தார்கள். பின்னர் அது  வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையாக ‘வளர்ச்சி’ கண்டது.

வெடிவெடித்து மீன் பிடிக்கும் முறையை விட ஆபத்தானது சயனைடு முறை மீன்பிடிப்பு. ஹாங்காங் தீவுக்கு எதிரே உள்ள பெட்ரோ பிளாங்கோ பவழப்பாறைப் பகுதியில் இந்த சயனைடு மீன்பிடிப்பு முறை அதிக அளவில் உள்ளது.
நச்சுநீர் தெளிப்பு
பீய்ச்சியடிக்கும் வசதி கொண்ட குப்பி ஒன்றில் சோடியம் சயனைடு வில்லைகளை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டியது. பவழப்பாறைப் பகுதியில் இந்த நஞ்சு நீரைப் பீய்ச்சியடிக்க வேண்டியது.

இதனால் மீன்கள் மலைத்துப்போய் அப்படியே ஆடாமல் அசையாமல் நிற்கும். அவற்றை வலையில் அள்ள வேண்டியது. சில மீன்கள் பாறை இடுக்குகளில் போய் ஒளிந்து கொண்டால் பாதுகாப்பான நீர்மூழ்கி உடைகளை அணிந்துகொண்டு முக்குளித்து அந்த பாறைகளை கையால் உடைத்து மீன்களைப் பிடிக்க வேண்டியது.
வெடிவெடித்து மீன்பிடிப்பதால் பவழப்பாறைகள் உடைந்து சிதறினால் கூட அவை மீண்டும் வளர வாய்ப்பிருக்கிறது. ஆனால், சயனைடு நீரைப் பீய்ச்சியடித்தால் எண்ணி ஏழு நாள்களில் அந்த பவழப்பாறை அழிந்து போய்விடும் என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.

இப்படி பிடிக்கப்படும் ஒவ்வொரு மீனுக்கும் ஒரு சதுர மீட்டர் பவழப்பாறை காலியாகி விடும் என்கிறார் அவர்.

சயனைடு முறை மீன்பிடிப்பால் அந்த மீனில் உள்ள சயனைடு உடனே நீங்கி விடும். அதனால் மீனை உண்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் சயனைடு நீர் பரவிய பவழப்பாறை பகுதியில் மீனவர்கள் யாராவது தெரியாத்தனமாக நீந்தினால் அவருக்கு ஆபத்து உறுதி.

ஹாங்காங் தீவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள சிறிய பவழப்பாறைத் தீவு டோங்சா. ஒருகாலத்தில் இது கடல்வாழ் இளமீன்களின் மிகப்பெரிய நாற்றங்கால் பகுதியாக விளங்கிய இடம்.

இங்கே 250 டன் சயனைடு, 5 டன் டைனமைட் வெடி வைத்து அங்குல அங்குலமாக வேட்டையாடியதால் இன்று அந்த தீவுப்பகுதி ஒரு கடல் பாலைவனமாக மாறி விட்டது. மீனவர்கள் அங்கே பலநூறு மைல் பயணம் செய்தாலும்கூட ஒரேயொரு மீனைக் கூட பார்க்க முடியாது என்கிறார் டாரஸ் கிரெஸ்கோ.
அடக் கொடுமையே!