Saturday 30 April 2016

பெருந்திரளை (Humphead Wrasse)

 அரிய, பெரிய வகை பார்மீன் இது. ஆறடி நீளமுள்ள இந்த மீன்தான் Wrasse குடும்ப மீன்களில் மிகப்பெரியது. நெற்றியில் முடிச்சு போன்ற சதை உள்ள இந்த மீன் 30 ஆண்டுகாலம் வாழக்கூடியது.
வளர்ந்த பெருந்திரளை தடித்த உதடுகளைக் கொண்டிருக்கும். இளம் மீன்களை அவற்றின் வெளிர்ப்பச்சை நிறத்தாலும், விழிகளுக்குப் பின்னால் ஓடும் இரு கரிய கோடுகளைக் கொண்டு அறியலாம்.
மாவோரி (Maori Wrasse), நெப்போலியன் மீன் என்றெல்லாம் ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுகிறது.
வளர்ந்த ஆண்மீன் எப்போதும் தனியாகவே திரியும். பார்களைச் சுற்றிசுற்றி வந்து விட்டு, இரவில் தனது குகையை இது அடையும்.
பலமான பற்களால் பெருந்திரளை மீன், கடினமான ஓடுகள் கொண்ட நட்சத்திரம் போன்ற முட்தோலிகளை உணவாக்கிக் கொள்ளும்.
ஒரா (ஓட்டா) போன்ற நஞ்சுமீன்கள், கடமாடு, கூர்ப்பல் உள்ள அஞ்சாலை மீன், போன்றவையும் இதன் உணவு.
பார்களை வெகு விரைவாக அழிக்கக் கூடிய முள்முடி (Crown of Thorn) நட்சத்திர உயிர், பெருந்திரளை மீனின் முதன்மை உணவு. இதன்மூலம் பவழப்பாறைகள் அழிந்துவிடாமல் பெருந்திரளை காக்கிறது.
மனிதர்களுக்கு ஆபத்தற்ற இந்த மீன், கடலுக்குள் முக்குளிப்பவர்களை அருகில் வந்து மிக உன்னிப்பாக க் கவனிக்கும். மனிதர்கள் தடவிக் கொடுப்பதையும் இது விரும்பும்.
மானின் கிளைக்கொம்பு போன்ற பவழப்பாறை அடர்த்திகளில் அடிக்கடி இந்தமீன் காணப்படும். முதிர்ந்த காலத்தில் பெருந்திரளை மீனில், பெண்மீன், ஆணாக மாறக் கூடியது.
மன்னர்களுக்கு வழங்கப்படும் உயரிய மீன் இது. பழங்காலத்தில் இந்தமீனைப் பிடித்த பரதவர்கள் தங்களால் மதிக்கப்படும் மிக உயர்ந்தவர்களுக்கு இதை பரிசாக வழங்கியுள்ளனர்.

Cheilinus undulatus என்பது பெருந்திரளையின் அறிவியல் பெயர்.

No comments :

Post a Comment