Wednesday 4 July 2018


அம்மணி உழுவை (Whale Shark)

நமது புவிக்கோளத்தின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவையைப் பற்றி ஏற்கெனவே நமது வலைப் பதிவில் பதிவு செய்திருக்கிறோம். இருப்பினும் உலகின் மிகப்பெரிய மீனாயிற்றே? அதுபற்றி புதிய தரவுகளுடன் மீண்டும் பதிவிடுவது தானே சரி? அதன்படி இந்த புதிய பதிவு.
வடதமிழக கடற்கரையில் பெட்டிச்சுறா எனவும், ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழ்ப்‘படுத்தி‘ திமிங்கிலச்சுறா எனவும் தமிழில் அழைக்கப் படும் ஒரு மீன் அம்மணி உழுவை. 
அம்மணி உழுவை 46 அடி நீளம் வரை வளரக் கூடியது. ஆனால், சராசரியாக ஒரு அம்மணி உழுவை 18 முதல் 32 அடி நீளம் வரை வளரும். அம்மணி உழுவையின் எடை ஏறத்தாழ 12 டன் (அதாவது 12 ஆயிரம் கிலோ!)
அம்மணி உழுவையின் தலை தட்டையானது. மூக்கு மொண்ணையானது. கெழுது (கெளிறு) மீனுக்கு இருப்பதைப் போல அம்மணி உழுவைக்கும் மீசை கள் (Barbell) துருத்திக் கொண்டு நிற்கும்.
அம்மணி உழுவையின் உடல் முழுவதும் வெள்ளைநிறப் புள்ளிகளும், மங்கலான கோடுகளும், பட்டைகளும் காணப்படும். நமது கைரேகை ஆளுக்கு ஆள் வேறுபடுவது போல, ஒர் அம்மணி உழுவையின் உடலில் இருப்பது போன்ற புள்ளிகள், வரிகள் இன்னொரு அம்மணி உழுவையின் உடலில் இருக்காது.
அம்மணி உழுவையின் வாய் ஐந்தடி அகலம் கொண்டது. ஒரு வரிசையில் 300 பற்கள் வீதம், அம்மணி உழுவைக்கு மொத்தம் மூவாயிரம் பற்கள். அரிசிமணி போன்ற இந்த சிறுபற்கள் வெறும் 6 மில்லி மீட்டர் நீளமானவை. இந்தப் பற்களைக் கொண்டு அம்மணி உழுவை கடிக்கவோ, சவைக்கவோ செய்யாது.
அம்மணி உழுவை அதன் செவுள்கள் (Gills) மூலம், கடலில் உள்ள கவுர்களை (பிளாங்டன்களை) (சிறு மிதவை நுண்ணுயிர்களை) வடிகட்டி உண்ணும். கடல் நீரை செவுள்களுக்குள் பாய்ச்சி, இரையை மட்டும் வடிகட்டி, எஞ்சிய நீரை வெளியே விடும். கவுர்கள் குறைவாகும் காலத்தில் பாசி, கூனிப்பொடி, இறால், நெத்தலி, சாளை, கணவாய் ஏன் சிறிய சூரை மீன்களைக் கூட இது உணவாக விழுங்கும்.
பார்க்கடல்களில் மீன்கள் முட்டையிடும் காலத்தைத் தெரிந்து கடலில் பரவும் மீன் முட்டைகளை 14 மணிநேரம் வரை காத்திருந்து அம்மணி உழுவை இரை யாக்கும். கடலில் அருகில் நீந்திவரும் மனிதர்களைக்கூட இது தாக்குவதோ, கடிப்பதோ இல்லை.
அம்மணி உழுவை, பெருஞ்சுறாவைப் (White Shark) வாலைப் பயன்படுத்தி நீந்தாமல், உடலை இருபுறமும் அசைத்து அசைத்து நீந்தும்.
பெண் அம்மணி உழுவை 300 குட்டிகள் வரை போடும். ஆனால், இவற்றில் சில குட்டிகள்தான் கடைசிவரை உயிர்பிழைத்திருக்கும். அம்மணி உழுவை 25 வயதில் பருவமடையும். ஒரு நூற்றாண்டு முதல் ஒன்றரை நூற்றாண்டு காலம் உயிர்வாழும்.

No comments :

Post a Comment